Thursday, January 29, 2004

வேம்படி மகளிர் கல்லூரி/விடுதி - 10


எனக்குப் பிடித்த கட்டத்தைப் பார்த்துவிட்டோமில்லையா. வலதுபக்கமாக ஒதுங்கிய நாம் அப்படியே செல்வோம். ஆ... இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன். இப்போது பார்த்த கட்டடம் பழைய கட்டடம் என்பதால் அதை வைத்து நிறையப் பேய்க்கதைகளும் உலாவின. இரவில் எல்லாம் அந்தப்பக்கம் நடமாடக்கூடாது என்றெல்லாம் எங்களைப் பெரியவர்கள் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். இரவில் விடுதி மாணவிகள் இங்குதான் வந்து படிக்கவேண்டும். ஆறுமணியில் இருந்து எட்டுமணிவரையோ ஏழரை மணிவரையோ படிப்பு நேரம். அப்போது எல்லோரும் இங்கேதான் வந்து படிக்கவேண்டும். வகுப்புகள் இருக்கும் வாசலில் இருந்து கீழே இறங்கினால், சீமெண்ட் போடப்பட்ட தளம் ஒன்று இருக்கும். அது ஏன் அங்கே இருக்கிறது? எப்போது கட்டினார்கள்? என்றெல்லாம் யாரையும் கேட்கத் தோன்றவில்லை. இருபக்கமும் படிகள் இருக்கும். ஆ.... இப்போது வகுப்பை விட்டு வெளிவந்தோமே, எனக்குப்பிடித்த கட்டடம் ஒரு பக்கத்தில் தாழ்ந்துதான் இருந்தது. நான்கைந்துபடிகள் கீழிறங்கிச் செல்லவேண்டும்.

தொடர்ந்து நடையைக் கட்டினால் 'டானா' வரிசைப்படத் தோன்றும் வகுப்புகள் இருந்தன. பார்ப்பதற்குத்தான் 'டானா' வரிசையில் இருப்பதாகத் தோன்றினாலும், அவை அப்படிக் கட்டப்பட்டவை அல்ல. நான்கைந்து வகுப்புகளைக் கொண்ட கட்டடங்கள் அவை. இரண்டு தனிக்கட்டடங்களுக்குமிடையில் விளையாட்டரங்கிற்கு செல்ல இடம் விடப்பட்டிருந்தது. இந்தக்கட்டத்திலும் கொஞ்சக் காலம் தள்ளினேன்.

இரண்டுக்கும் முன்னால் இருந்த நிலத்தில் கம்பிகள் குறுக்கும் முறுக்கும் போகக்கூடிய அமைப்பு, பூங்காக்களில் இருக்குமே? அதுபோன்றதொரு அமைப்பு இருந்தது. அதில்ந்தான் பள்ளிக்கூடம் முடிந்தபிறகு எங்களுடைய பொழுதெல்லாம் கழிந்தது. சுற்றிவர அடர்ந்த மரங்கள் நின்றபடியால் வெயில் தெரியவில்லை.

இடப்பக்கத்தில் எங்களுடைய ஆராய்ச்சிக்கூடம் (ஆமா பெரிய பி.எச்.டி செய்யுறாங்கன்னு அலுத்துக்காதீங்கப்பா) இருந்தது. ஆறாம் வகுப்பில் புரதம் தலைமுடியில் இருக்கிறது என்பதைப் பரிசோதனை செய்துபார்க்க எரித்த தலைமயிர் வாசம் இன்னும் மூக்கில் நிற்கிறது. மற்றும்படி, எங்களுக்கு இந்தப்பக்கத்தில் வேலையில்லை என்பதால் என்ன என்ன கட்டடங்கள் இருந்தன என்றெல்லாம் நினைவில் இல்லை. நிறைய வாழைமரங்கள் இருந்தது ஞாபகம் இருக்கிறது. எப்போதாவது காலை, மதியம், இரவில் வாழைப்பழம் கிடைக்கும். ஆனால், எல்லோரு வாழைப்பழங்களை விற்று காசு சம்பாதிக்கிறார்கள் என்று பெரியவர்கள் கரித்துக்கொட்டுவதும் உண்டு.

இந்த வளாகத்தில், பள்ளியிலும் விடுதியிலுமாக அடித்த கூத்துகள் பிறகு...

Tuesday, January 27, 2004

சீனத் தமிழ் வானொலி

இன்று தெரிந்துகொண்ட ஒரு சுவாரசியமான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழுலகம் யாகூ குழுமத்தில் 'எழில் நிலா' மகேன் சீனத் தமிழ் வானொலி நிலையம் பற்றித் தனக்கு வந்த ஒரு கடிதத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

தமிழில் யூனிகோடு எழுத்துரு பயன்படுத்தி சீனத் தமிழ் வானொலி நிலையம் இணையத்தளம் ஒன்றை நிர்வகித்து வருகிறது - http://ta.chinabroadcast.cn/

இது தவிர, இணையத்திலேயே சீனத்தமிழ்வானொலியை நீங்கள் கேட்கலாம். அதில் ஒரு சிறுபகுதியை, உங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக இங்கு இட்டிருக்கிறேன். சீனர்கள் நம்மூர் அறிவிப்பாளர்களைவிட அருமையாக பேசுவதைக் கேளுங்கள். :)



Saturday, January 24, 2004

வேம்படி மகளிர் கல்லூரி/விடுதி - 9


ஒவ்வொரு நாள் காலையிலும் தேவாரம் ஒன்று பாடி, தலமையாசிரியரின் உரையையும் வேறு யாராவது ஆசியர்கள் பேசுவதையும் கேட்போம். சிலபோது, வெளியில் இருந்து யாராவது விருந்தினர்கள் வந்து பேசியறுப்பார்கள். சுருக்கமாக முப்பது நிமிடங்களில் முடிந்துபோகும் இந்தக் காலை நிகழ்ச்சி பிறகுபிறகு நாற்பந்தைந்து நிமிடம் நீட்டிக்கப்பட்டது (சரியாக ஞாபகம் இல்லை.). முப்பது நிமிடம் ஆடாமல் அசையாமல் நிற்பதற்கு நாங்கள் அலுத்துக்கொண்டிருக்கும்போது ஒரு நாள் தலமையாசிரியர் அடுத்த வாரத்திலிருந்து 'கோளறுபதிகம்' பாடப்படும் என்று சொல்லிவிட்டார். வெள்ளிக்கிழமைகளில்தான் காலைக்கூட்டம் முடிந்ததும் முதல்வகுப்பு சமைய வகுப்பாக தேவாரம் கற்றுக்கொள்ளும் வகுப்பாக இருந்தது. மற்ற மதத்தை சார்ந்த தோழிகள் அவரவர் வகுப்புகளுக்கு செல்வார்கள். கோளறுபதிகம் தினமும் பாடும்போது அவர்களும் எங்களுடன் இருந்தார்களா? இல்லை, பிறகு தலைமையாசிரியர் உரை மற்றும் அறிவிப்புகளுக்கு வந்து சேர்ந்தார்களா என்பது நினைவில் இல்லை.

திருஞான சம்பந்தரைப்பற்றியும் திருநாவுக்கரசரைப்பற்றியும் முதலிலேயே தெரிந்திருந்தாலும், இன்றும் மனதில் தேய்ந்த கிராம·போன் இசைத்தட்டுமாதிரி ஓடிக்கொண்டிருப்பது என்னுடைய தலைமை ஆசிரியர் (பெயர் கூட எனக்கு ஞாபகமில்லை. அம்மாவுக்கு ஞாபகம் இருக்கலாம். துரையப்பா என்ற பெயர் ஏனோ மனதில் ஒலிக்கிறது. சரி விடுங்கள். பெயரைத் தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்?) திருஞானசம்பந்தர் என்ன சூழ்நிலையில் அந்தப்பதிகத்தைப் பாடினார் என்றும், அவரே வாயெடுத்து நாட்களைப்பட்டியலிட்டும், 'நாளென் செயும் கோளென் செயும்' என்றெல்லாம் பாடியது நினைவிலாடுகிறது. பிறகு ஒவ்வொரு நாளும் கோளறுபதிகம் பாடினோம்.

Thursday, January 22, 2004

Gung hay fat choy








Wednesday, January 21, 2004

வேம்படி மகளிர் கல்லூரி/விடுதி - 8


வலப்பக்க மூலையில் ஒரு பெரிய உயர்ந்த கட்டடம். மிகவும் பழமையானது. சென்னையில் ஆங்கிலேயர் காலத்துக் கட்டிடங்களைப்பார்க்கும்போதெல்லாம் எனக்கு இந்தக்கட்டிடமே நினைவிலாடும். என்னுடைய பள்ளிக்கூடம் இப்போது எப்படியிருக்கிறது என்று தெரியாது. ஆனால், நிச்சயம் இந்தக்கட்டடம் இல்லையென்றே நினைக்கிறேன். இந்தக்கட்டடந்தான் பள்ளியிலேயே எனக்கு மிகவும் பிடித்த இடம். ஆறாம் வகுப்பில் வேம்படியில் வந்து சேர்ந்தபோது, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட முதல் வகுப்பு அறை இந்தக்கட்டடத்தில் மாடியிலேயே இருந்தது. பயந்து பயந்துதான் ஏறுவோம். மரத்தால் கட்டப்படாத கட்டடமென்றாலும், நாங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அந்தக்கட்டடம் அசைவதாகத் தோன்றும் எனக்கு. அதுவும் யாராவது தடதடவென்று ஏறினாலோ, இறங்கினாலோ என்னுடைய இருதயம் அடித்துக்கொள்ளும் வேகமே வேகம். ஒரு நாளில்லை ஒரு நாள் தலையில் கொட்டப்போகிறது என்று நினைத்துக்கொள்வேன். கான்கிரீட்டால் கட்டப்படவில்லை என்றே நினைக்கிறேன். மாடியில் மூன்று வகுப்புகள் இருந்தன. இங்கேதான் அடிமட்டம் (அதாங்க ஸ்கேல், ரூலர்) பயன்படுத்தி அளக்கவும், பாகைமானி, என்றெல்லாம் கற்றுக்கொண்டேன்.

மாடிக்குப் போகும் வாசலுக்கு நேரெதிரான பக்கத்தில், பின்புறம் திறந்த வாசல். அதனூடாக உள்நுழைந்தால் இரண்டு பெரிய வகுப்புகள். இங்கு இரண்டொரு மாதங்கள் படித்தேன். உயர்ந்த சுவர்களுடன் ஒரு பழமை வாசனையும் உணர்வும் வீசிக்கொண்டே இருக்கும். ஏதாவது மணம் இருந்ததா என்று யோசிக்காதீர்கள். பழமையான கட்டடம் என்பதை மறக்கமாட்டோம் என்று சொன்னேன். பிறகு யாழ்ப்பாணத்திலும் சுத்திமுத்தி இருக்கும் இடங்களிலும் குண்டு போடத்தொடங்கியதும், மாடியில் வகுப்புகள் நடத்தப்படவில்லை. கீழேயும் பிறகு பிறகு வகுப்புகள் நடத்தப்படாமல் இருந்திருக்கலாம். ஞாபகமில்லை. மேலும் கீழும் வகுப்பறைகள் இருக்க, கட்டடத்தில் சாலைக்கு முதுகைக்காட்டிக்கொண்டு, புல் மண்டிக்கிடக்கும் விளையாட்டுத்திடலை பார்த்துக்கொண்டு ஒரு கல்லால் கட்டப்பட்ட ஒரு காலரி இருக்கும்.

இந்த காலரியில்தான் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடமே வந்து கூடும். கீழே மாணவிகள் வரிசையாக வந்து ஒவ்வொரு வகுப்பும் ஒரு நேர் வரிசையில் நிற்பார்கள். பக்கத்துப்பக்கத்து வகுப்பு மாணவிகள்தான் அருகில் நிற்பதால் அதிகம் பேச்சுத் சத்தம் இருக்காது. அதிகம் என்றுதான் சொன்னேன். :) பெண்மணிகள் என்று சும்மாவா சொன்னார்கள். நான் வேம்படியில் படித்தபோது இருந்த தலமையாசிரியை உருவத்தில் சிறியவர், தலைமுடி தும்பைப்பூ போன்று இருக்கும். அதிர்ந்து பேசமாட்டார். ஆனால், அவர் பேசத்தொடங்கினால், கூட்டமே கேட்கும். விளையாட்டுத் திடலில் ஒரு மூலையில்தான் அவருடைய வீடும் இருந்தது. சாதாரணமாக தலமையாசிரியரும், அவருடைய கணவரும் அவர்களின் நாயும் குடியிருக்கும் அந்த வீட்டிற்கு, தலைமையாசிரியரின் ஒரே மகன் எங்கிருந்தோ வந்து தங்கும்போது விடுதியே சலசலக்கும். இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருந்தால், நானும் சேர்ந்து சலசலத்திருக்கலாம். யார் கண்டது!

Monday, January 19, 2004

வேம்படி மகளிர் கல்லூரி/விடுதி - 7


கொஞ்ச வேலைகள் இருந்ததினால இந்தப்பக்கம் வரமுடியலை. என்கூட வேம்படி விடுதிக்கு வந்த உங்களை, எங்கட பள்ளிக்கூடத்துக்கு கூட்டியண்டு போகப்பாக்கிறன். ஏன் சந்தேகமா சொல்லுறன் எண்டு பாக்கிறீங்களா? எத்தனையோ வருசங்கள் ஓடிப்போயிற்றுதெண்டபடியா நிறைய மறந்து போயிற்றன். எத்தனை வருசம் எண்டு கருத்துப்பெட்டில குரல் கொடுக்கக்கூடாது சொல்லிற்றன்.

யாழ்ப்பாணத்தில பெரியாஸ்பத்திரிக்குப் பக்கத்தில இருக்குதெண்டு முந்தி சொல்லியிருக்கிறந்தானே. ஆஸ்பத்திரி இருக்கிற தெருக்குப் பெயர் ஹிஹி...ஹிஹி Hospital Road/Main Street, தமிழில் பறங்கித் தெரு என்று சொல்லுவினமாம். (செய்தி நன்றி: திரு.கந்தசாமி - எங்கப்பாரு) எங்கட பள்ளிக்கூடம் முதலாம் குறுக்குத் தெருவில இருக்கு. (ஆர்வலர்கள்னா' யாருன்னு கேக்குற தமிழர்கள் என்னுடைய வலைப்பதிவுக்கு வருவதில்லையென்றபடியால் தைரியமா இப்படியெல்லாம் எழுதுகிறேன். :) ) பெரிய அகலமான வீதியெல்லாம் இல்லை முதலாம் குறுக்குத் தெரு. அதற்குள் பள்ளிக்கூடம் இருக்கா என்பதே புதியவர்களுக்கு சந்தேகமாக இருக்கும். எனக்கும் இருந்தது.

உயரமான மதிற்சுவர்களோடு பெரிய கேற்றும், கேற்றுக்கு மேல் வளைந்த கம்பிகளிடையே இருக்கும் 'வேம்படி மகளிர் கல்லூரி' என்ற பெயரும் வரவேற்கும். உள்ளே நுழைந்தால், கொஞ்சத் தூரத்தில் சில பெரிய மரங்கள் நிற்கின்றன. வலது பக்கம் ஏற்கனவே சொன்னமாதிரி விடுதிக்கட்டடம் இருக்கிறது. இடதுபக்கம், மாடிக்கட்டடம் ஒன்று; சரஸ்வதி பூஜை சமயத்தில் மட்டும் மாடிப்பக்கம்போக சின்ன வகுப்புக்காரருக்கு அனுமதி கிடைக்கும். சில நேரங்களில் யாரும் பார்க்காத நாட்களில் கீழ்தளத்தில் இருக்கும் வகுப்புகளையும் சில வகுப்புகளில் எங்களைப்பார்த்து இளிக்கும் எலும்புக்கூடுகளையும் கண்டு வருவோம். பதினோராம் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கான கட்டம் அது. மாடியில் பொதுவாக என்ன செய்வார்கள் என்று ஞாபகம் இல்லை.

தொடர்ந்து நேராகப்போனால் வலதுபக்கமும் இடதுபக்கமும் செம்மண்தரை விரியும் (செம்மண் என்றுதான் ஞாபகம். இங்க இருக்கிற பெரியவங்க, வேம்படிக்குள்ள நுழைஞ்சவங்க சொல்லுங்களேன்.) இடதுபக்கம் மூன்று வகுப்புகள் கொண்ட, தூண்களால் தூக்கிநிறுத்தப்பட்ட ஆஸ்பெஸ்டாஸ் கட்டடம் இருக்கும். தாளப்பதிந்த சுவர்களே இந்தக்கட்டத்தில் இருந்ததினால், பெரிதாகக் குழப்படி எல்லாம் செய்யமுடியாது. எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கான இடம் என்று ஞாபகம். என்னுடைய உறவுக்காரர்கள் சிலரும் படித்ததில், அவர்கள் இந்தக்கட்டத்தில் கொட்டமடிக்கையில் நாங்களும் போய் வருவதுண்டு.

Saturday, January 17, 2004

குளிர்நிலை











என்ன இது எண்டு நீங்க எல்லாரும் புருவமுயர்த்துறது தெரியுது. இங்க இண்டைக்கு -48 செல்சியஸ் குளிர்நிலை (நன்றி வெங்கட்). அதான் முந்தி எடுத்த ஹவாய் புகைப்படங்களை வெள்ளோட்டம் விட்டிருக்கிறேன்.

பார்த்து வாயாலும் மூக்காலும் விடும் புகையை, என்னைப்போல் காதால் விடவும். இங்கு 'புகை' என்பது குளிரில் போகும்போது சுவாசிக்கும் காற்று என்றறிக. :)

Friday, January 09, 2004

வலைபதிவாளர்களுக்கு...



வலைபதிவாளர்கள் இதுவரை தமிழில் வலைபதிய பெரும்பாலும் உபயோகிக்கும் தளங்கள் - http://blogger.com, http://blogdrive.com, http://rediffblogs.com.

வெங்கட், நவன், மற்றும் இப்போது காசி ஆகியோர் தத்தம் வலைப்பக்கங்களில் வலைபதிகின்றனர்.

http://qlogger.com என்று ஒரு வலைப்பதிவு தளம் ஒன்றை சில வாரங்களுக்கு முன்பு பார்த்தேன். தமிழில் வலைபதிய முடிகிறதா என்று லேசாக முயற்சி செய்தேன். இன்னும் சரிவரவில்லை. http://tamil.qlogger.com. பல சுவாரசியமான விஷயங்களை கொண்டிருக்கிறது. புகைப்படங்களையும் உள்ளிடலாம். யாராவது முயற்சி செய்து பார்க்கிறீர்களா?

இல்லையில்லை இந்த வேலையெல்லாம் நமக்கு ஒத்துவராது. எனக்கு படங்களை வலையேற்றி பயன்படுத்தக்கூடிய தளங்கள் இருந்தால் போதும் என்று நினைக்கிறீர்களா?


இதோ உங்களுக்காக http://www.weblogimages.com

Wednesday, January 07, 2004

வேம்படி மகளிர் கல்லூரி விடுதி - 6


வீட்டுக்குச் செல்லாத சோகமான வார இறுதிகளும் பரவாயில்லாதவைதான். வீட்டில் இருந்தால் வாசிக்கமுடியும். ஹாஸ்டலில் அது முடியாது என்பதுதான் பெரிய விஷயம். வீட்டிலிருந்து ஹாஸ்டலுக்குப் புத்தகங்கள் எடுத்துப் போக அனுமதியிருக்கவில்லை. அதனால், வார இறுதிநாட்கள் ஊர்ந்துகொண்டே போகும். அந்த சனிக்கிழமைகளில் எழும்பி பல்தேய்த்து தேத்தண்ணி குடித்துவிட்டு, அலுமாரியில் கொறிக்க என்ன இருக்கிறது என்று கிளறிக்கொண்டிருப்போம். என்னைப் போல வீட்டிற்குப் போகாத பாபாத்மாக்கள் தோழிகள் அறைக்கு விசிட் செய்வார்கள். அப்படி யாராவது வந்தால், உண்ணக் கொடுத்தெல்லாம் உபசரிப்போமாக்கும்! :) சில பொழுதுபோகாத நேரங்களில் கீழே விடுதியின் நடுவில் இருக்கும் *தோட்டப்பகுதியில்* இருந்து காரசாரமான குரல்கள் கேட்கும். வார்டனின் காதுகளுக்குக் கேட்காத ஒலியளவிலேதான் விவாதங்கள் நடைபெறும்.

விவாதம் விவாதம் என்று சொல்கிறாளே ஒழிய என்ன விவாதம் என்று சொல்லமாட்டேன் என்கிறாளே என்று நீங்கள் அலுத்துக்கொள்ளலாம். பின்ன, இந்த விவாதம் பற்றி எழுதவந்துதானே, தொடராக்கி உங்களை அறுத்துக் கொண்டிருக்கிறேன். :) பெரும்பாலும் இந்தளவு காரசாரமாக விவாதிக்கும் அளவுக்கு என்ன விஷயங்களோ என்று யோசித்துள்ளேன். ஆனால், அந்த விவாதத்தின் அவசியமும், அவை தமிழ் சமுதாயத்தில் பின்னிப் பிணைந்திருக்கும் அளவும் இப்போதுதான் லேசாகப் புரிகிறது.

வேறொன்றுமில்லை.

கமலா? ரஜனியா? விவாதம்தான் அது!

ஐந்தாறு பேர் குசுகுசுவென்று ஆரம்பித்து, விடுதியெங்கும் கூட்டணி சேர்க்கும் இந்த விவாதத்தில் படிப்படியாக அனைவரும் உள்ளிழுக்கப்படுவார்கள். மேலே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நாங்களும் உள்ளிழுக்கப்படுவோம். விவாதக் கூட்டணியில் பேசுபவர், என்னைக் கேட்பவர் யார் என்பதைப் பொறுத்து பதில் சொல்லியிருக்கிறேன். யார் இந்த கமல், ரஜனி என்று கேட்டு, ஏதோ சந்திரமண்டலத்துப் பிரஜையென்று என்னைச் சிலர் பார்த்ததும் உண்டு. எனக்கு சிவாஜியத்தெரியும், நாகேஷைத் தெரியும், பாலையாவைத் தெரியும். மற்றவர்களையெல்லாம் எப்படித்தெரிந்துகொள்வது. விடுதியில் மானம் காத்துக்கொள்வது எப்படி? யாரோ ஒரு புண்ணியவதியின் உபயத்தில் ஒரு சினிமா எக்ஸ்பிரெஸ் கிடைத்தது. ஒரு வாரம் வைத்துப் புரட்டியும் எல்லோரும் ஒரே மாதிரித் தெரிந்தார்கள்.

கவனிக்க! இப்போது நாந்தான் திரைப் பார்வை எழுதுகிறேன். அழுக்குப் பையனில் இருந்து, தனுஷ் பையன் வரைக்கும் தெரிந்துகொண்டிருக்கிறேன். எல்லாம் காலம் செய்த மாயம். :)

சண்டியர் விருமாண்டி பாடல்கள் கேட்டபோது மனதில் எழும்பிய நினைவுகள் விடுதியில் ரஜனி பெரிதா? கமல் பெரிதா என்று கிளம்பும் விவாதம்தான்.

ஆ..... சொல்ல மறந்துவிட்டேனே! பெரும்பாலும் கமல் அணியினரே வெல்வர்.

I think we, the Vembadi girls really had good taste. (any comments from the Sri Lankans here? )

Monday, January 05, 2004

வேம்படி மகளிர் கல்லூரி விடுதி - 5


ஆரம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை பின்னேரமே ஹாஸ்டல் திரும்பிய நான், பலர் திங்கள் அதிகாலையில் பள்ளிச் சீருடையுடனும் துணிமூட்டையுடனும் வருவதைக் கவணித்தேன். அதற்குப் பிறகு நாங்களும் திங்கள் அதிகாலையிலேயே ஹாஸ்டலுக்குத் திரும்பிப் போகத்தொடங்கினோம்.

அந்த அதிகாலை வேளைகளும் ரம்யமானவை. அப்போது சிறை செல்லுவதுபோல உணர்ந்தாலும், மனதின் ஓரத்தில் பதிந்துபோன விஷயங்களை அவ்வப்போது அசைப்போட்டிருக்கிறேன். வானுக்காக காத்திருக்கும் பொழுதுகள். 'வெள்ளைச் சட்டையில் ஊத்தைப் பிரட்டாதே. தோளை நிமிர்த்தாதே, தலையைக் குனி, நேருக்கு நேர் பார்க்காதே' என்று ஒரே *தே தே தே* என்று ஒலிக்கும் அம்மாவின் குரல், ஊரே அமைதியாக இருப்பது. வீட்டிற்கு எதிர் முனையில் இருக்கும் மீனாட்சியின் (அவவின்ற பெயர் கள்ளுக் கடை மீனாட்சியாம், பிறகுதான் அவவின்ற பட்டப்பெயரை அம்மம்மா சொன்னவ.) வேலியில் இருந்த பூவரசன் இலைகளை பிய்த்து விசில் ஊதியது. ஊதியிருக்கிறீர்களா? காம்புடன் இலையைப் பிய்க்கவேண்டும். இலையை நன்கு துடைத்துவிட்டு - ஊத்தை பிரட்டாதே! - நுனியை கொஞ்சமாக மடிக்கவேண்டும். பிறகு இலையை உடைக்காமல், பிய்க்காமல் சுருட்டவேண்டும். நல்லா இறுக்கிச் சுருட்டினா ஊதுப்படாது. கொஞ்சம் விட்டுச் சுருட்டவேண்டும். சுருட்டின பிறகு ஓரத்தை மடிக்கவேண்டும். மடிச்ச பக்கத்தில ஊதினா, 'ப்ப்பீஈஈஈஈப்,' 'பீயீஈஈப்' என்று ஓசை வரும். பல திங்கட்கிழமை காலை வேளையில் என்னுடைய 'ப்பீஈஈஈப்' ஐக்கேட்டு ஆடுகளும் கோழிகளும் அலறி அடித்து ஓடிப்போயிருக்கின்றன. தங்களுக்குள் என்னைத் திட்டித் தீர்த்திருக்கலாம். யாருக்குத் தெரியும்?

Sunday, January 04, 2004

வேம்படி மகளிர் கல்லூரி விடுதி - 4


வெள்ளிக்கிழமை வீட்டிற்குப் போகவேண்டுமென்றால், ஆறாம் வகுப்புக் காரரை வீட்டிலிருந்து யாராவது கூட்டிக்கொண்டுபோகவேண்டும். ஒவ்வொரு வாரமும் வந்துபோகமுடியாது என்பதால், அம்மா வரமாட்டார். என்னுடைய கசின்கள் வீட்டிற்குப் போவதைப் பார்த்தால் அழுகையாக வரும். ஹொஸ்டல் விஷயங்கள் பிடிபட பிடிபட, வீட்டிற்குப் போயிருந்தபோது, அம்மாவிடம் இருந்து ஒரு கடிதம் கொண்டு வந்தால், அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பவரோடு வீட்டிற்குப் போகலாம் என்று தெரிந்துகொண்டு அடிக்கடி வீட்டிற்குப் போகமுடிந்தது.

வேம்படியிலும் ஹொஸ்டலிலும் சேர்ந்த புதிதில் அப்பா விடுமுறையில் வந்து தங்கியிருந்தார். ஒவ்வொரு வெள்ளியும் வீட்டிற்கு வானில் தூங்கியபடி போவது ஞாபகம் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஏறக்குறைய இருபது மைல் தொலைவில் புங்குடுதீவு இருக்கிறது. வழியில் வேலணை என்று இன்னொரு தீவும் இருக்கிறது. இரண்டு இடங்களில் கடலில் போடப்பட்டிருக்கும் சாலையில் நீண்டநேரம் வான் ஓடும். சாலையின் இரண்டு பக்கமும் கடலில் ஏதோ ஒரு நாணல்போன்ற, ஆனால் தடிமனான தாவரம் வளர்ந்திருக்கும். அதை வேறெங்கோ பிய்த்து வாயில் வைத்துப் பார்த்த ஞாபகம் வருகிறது. ஒரே துவர்ப்பு. முகத்தில் வந்து அறையும் காற்றும் துவர்ப்பாகத்தான் இருந்தது. ஆனால், அது மிகவும் பிடித்திருந்ததற்குக் காரணம் - அது ஹொஸ்டலில் இருந்து வீட்டுக்குப் போகும் சுதந்திரப் பயணம் என்பதால் இருக்கலாம். ;)

வீட்டில் சினிமாப்பாட்டுக்கு தடா என்பதால், இதுபோன்ற பயணங்களிலேயே பாட்டுக் கேட்க முடிந்தது. இப்போதும் எண்பதுகளிலும் எழுபதுகளிலும் வந்த பாட்டுகளைக் கேட்கும்போது கடற்காற்று முகத்தில் வந்து வீசும் உணர்வு ஏற்படுகிறது.

Saturday, January 03, 2004

வேம்படி மகளிர் கல்லூரி விடுதி - 3


பகுதி ஓன்று, இரண்டு.

ஒவ்வொரு மாணவிக்கும் இரும்புக்கட்டிலும், சிறிய மர அலுமாரியும் தரப்படும். விடுமுறை முடிந்து கொண்டு வரும் சூட்கேஸ்களை வீட்டிற்குத் திருப்பி அனுப்பி விடுவோம். பிறகு விடுமுறைக்கு முன்பு வரும்போது திரும்பிக் கொண்டு வருவார்கள். மெத்தை, தலையணை, போர்வை எல்லாம் வீட்டில் இருந்துதான் வரும். மெத்தையை மட்டும், விடுமுறைக்குப் போகும்போது நன்றாகக் கட்டி ஸ்டோர் ரூமில் போட்டுவிட்டுப் போகலாம். அதுவும் பெயர், வகுப்பு, விலாசம், சாதகக்குறிப்பு ஆகியவற்றோடு ஏதாவது அடையாளமும் வைத்துவிட்டுப்போகவேண்டும். விடுமுறை முடிந்துவந்தது, உடனே வந்து மெத்தையைக் கண்டுபிடித்து எடுத்துவிடவேண்டும். இல்லையென்றால் கோவிந்தாதான்.

விடுதி வாழ்க்கையை ரொம்பவும் ரசிக்கவில்லையென்றாலும் சில விஷயங்கள் மனதில் தங்கியிருக்கின்றன. அப்படியே சிலரும் மனதில் தங்கியிருக்கின்றனர். முடிந்தவரை எழுதுகிறேன்.

விடுதியில் ஆறாம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் பைப்பில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. மற்றவர்கள் எல்லாரும் கிணற்றில் கிள்ளித்தான் குளிக்கவேண்டும். பெரும்பாலானவர்கள் விடியற்காலையிலேயே குளித்துவிடுவார்கள். பிற்பகலில்/இரவில் குளிப்பவர்கள் பள்ளிக்குப் பக்கத்தில் இருந்து வங்கியில் அனைவரும் வீடு செல்லக்காத்திருப்பர். முதலில் ஏனென்று விளங்காவிட்டாலும், பிறகு பெரியவர்களால் எச்சரிக்கப்பட்டோம். காலையில் எழுந்து குளிக்கப்போவது ரொம்பவும் அருமையான சம்பவம். பள்ளியே நிசப்தமாக இருக்கும். காலில் செருப்பு அணிந்திருந்தாலும், பாம்பு இருக்ல்லாம் என்று யாராவது பயமுறுத்துவார்கள். கிணற்றில் தண்ணி அள்ளவேண்டுமென்பதால், எங்களுடன் சிலர் சேர்ந்துகொள்வார்கள். வார்டனின் கண்ணிலும், அவர் பாலூட்டி வளர்க்கும் பாம்பான watchman ( :) ) கண்ணிலும் படாமல் பகுங்கிச் செல்வோம். ஒரு செட் பைப்புகள் ஆறாம், ஏழாம் வகுப்பினருக்கான பௌதீகவியல் பரிசோதனைக் கூடத்திற்குப் பின் இருந்தது. அதிகாலையில் அந்தப்பக்கம் செல்லும்போதெல்லாம், முதன்முதலில் அயோடின் பார்த்தது, புரோதப் பரிசோதனைக்காக தலைமுடியை எரித்து மணந்தது எல்லாம் ஞாபகம் வரும்.

விடுதியில் ஒரு அக்கா இருந்தார். பெயர் மறந்துவிட்டது. புங்குடுதீவுதான். எனக்கெல்லாம் சவுக்காரம் - அதாங்க சோப்பு - இரண்டு கிழமை வருவது ரொம்ப அபூர்வம். அவரோ மூன்று மாதம் தொடர்ந்து பயன்படுத்துவார். மூன்று மாதம் என்பது குறைவாகவும் இருக்கலாம். முகம் கழுவுவதென்றால் சவுக்காரத்தை இரண்டு முறை தடவுவார், அப்படியே முகத்தில் தேய்த்துக்கொள்வார். பலரும் அவரைப் பகிடிபண்ணுவார்கள். நானெல்லாம் எலிக்குஞ்சு என்பதால், மௌனமாகப் பார்த்துக்கொண்டு இருப்போம்.

Friday, January 02, 2004

Tarqeq - Moon Spirit




தார்கெக் - நிலவின் ஆவி (Moon Spirit), இனுயிட் மக்கள் நம்பும் தேவதை (?). வம்சவிருத்தி, ஒழுக்கம், மிருகங்களை கட்டுப்படுத்தி நடத்துவது ஆகியவற்றை தார்கெக் பார்த்துக்கொள்வதாக இனுயிட் மக்கள் நம்புகிறார்கள். நம்மூர் கவிஞர்கள் இன்னமும் நிலவைப் பெண்ணாக உருவகித்துக் கவிபாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இனுயிட் மக்களுக்கோ தார்கெக் ஆண் வடிவம். சிறந்த வேட்டைக்காரனாகிய தார்கெக் வானத்தில் இருக்கும் நிலத்தில் வசிப்பதாக நம்புகிறார்கள். இந்தப் படத்தில் தார்கெக்கின் முகம் தெரிகிறது. முகத்தைச் சுற்றிக்காணப்படும் வெண்பரப்பு காற்றையும், அதற்கப்பால் தெரியும் வளைந்த கம்புகள் அண்டவெளி (cosmos)இன் எண்ணிக்கைகளையும், நீட்டிக்கொண்டிருக்கும் இறகுகள் வான்நட்சத்திரங்களையும் சுட்டுகிறதாம்.

இன்னும் நிறைய இனுயிட்கள் பற்றித்தெரிந்துகொள்ள இருக்கிறது. என்னால் ஏதாவது எழுதமுடியும் என்று வரும்போது அல்லது இனுயிட் பற்றி எழுதியே ஆகவேண்டும் என்று உட்தூண்டல் வரும்போது மறுபடியும் எழுதுகிறேன். இப்போது தாற்காலிகமாக இனுயிட் படலம் முற்றிற்று. :)

-12.29.03

-----------

அமெரிக்கப் பழங்குடியினரைப் பற்றி முதலில் கேள்விப்பட்டது அவர்கள் சைபீரியாவில் இருந்து, பனிக்காலத்தில் அமெரிக்கக் கண்டத்துக்கு வந்தவர்கள் என்பது. National Geographicஇல் பார்த்துப் படித்த இவர்களைப் பற்றிய விஷயங்கள் இவர்களின் மீது ஆர்வத்தை அதிகமாக்கியது. வாசன் அவர்கள் அமெரிக்கப் பழங்குடியினர்களின் பிராந்தியத்தில் பல ஆண்டுகள் வசித்ததைக் கேள்விப்பட்டதும், நச்சரித்து எடுத்தேன். என்னுடைய அரிப்புத் தாங்காமல், ஒரு நாள் எழுதுகிறேன் என்று சொன்னார். அந்த ஒரு நாள் வந்துவிட்டது. :)

அமெரிக்கப் பழங்குடியினர் பற்றித் தெரிந்துகொள்ள கொள்ளிடம் செல்வோமா?


Thursday, January 01, 2004

அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துகள்!