Friday, June 06, 2003

வைக்கிகி கடற்கரையோரம், ஒரு மாலைவேளையில்



இன்னிக்கு வைக்கிகி கடற்கரையோரம் போகலாம் என்று எண்ணம். மாலை வேளை வேறு. இதுதான் வைக்கிக்கி போவதற்கு நல்ல நேரம். கடற்கரையில் காற்று வாங்கி விட்டு, அந்தி சாயும் வேளையில் சூரியன் மறைவதைப் பார்த்து அதற்குப் பிறகு கொஞ்சது நேரம் கடற்கரையோரம் உலாவி விட்டு வீடு திரும்பலாம்.

நகரின் மத்திய பகுதியில் இருந்து எத்தனையோ பேருந்துக்கள் வைக்கிகிக்கு செல்கின்றன. ஒரு இருபது நிமிடப்பயணத்தில் போய் சேர்ந்து விடலாம். வைக்கிகிக்கு அருகில் இறங்கி கடற்கரையை நோக்கி நடக்கிறோம். ஆங்காங்கே நட்சத்திர ஹோட்டல்களும், அடுக்குமாடி அப்பார்ட்மெண்டுகளுமாய் இருக்கிறது. நேராகப்போனால் கடற்கரையை அடைந்து விடலாம். இடது பக்கம் திரும்பினால் விதவிதமான பொருட்கள் விற்கும் இடத்திற்கு போகலாம். அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். கொஞ்சத்தூரம் தள்ளிப்போனால் உலகில் உள்ள டிசைனர் கடைகள் அத்தனையும் இருக்கின்றன. ஜப்பானியர்கள்தான் முக்கிய வாடிக்கையாளர்கள். அதையும் இன்னொருநாள் சுற்றிப்பார்ப்போம். இந்த அற்புதமான மாலைநேரத்தை கடைகளை வேடிக்கை பார்ப்பதிலும் மக்களை வேடிக்கைப் பார்ப்பதிலும் ஏன் வீணாக்குவது? அப்படியே இன்னமும் கொஞ்சம் தூரம் நடந்தால் கடற்கரையை எட்டி விடலாம். அலைகளில் சத்தம் கேட்கிறதா உங்களுக்கு? வாருங்கள் வாருங்கள். அந்த நீல நிறமான கடலலைகளைக் கண்டு நீங்கள் சந்தோஷப்படுவதை எனக்கு பார்க்க வேண்டும்.

இதோ இதுதான் பலரும் பல ஊடகங்களில் பேசிக்கொண்ட வைக்கிக்கி கடற்கரை. சாலையோரத்தில் ஆங்காங்கே நுனி இலைகளுடன் காட்சி அளிக்கும் தென்னை மரங்கள். இங்கெல்லாம் தேங்காய்களை அவை குரும்பைகளாக இருக்கும்போதே வெட்டி விடுவார்கள். அதே போலத்தான் பாளைகளையும் தென்னோலைகளையும் வெட்டி சாய்த்து விடுவார்கள். இங்கு வந்த புதிதில் எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. பிறகு ஒரு கதை சொன்னார்கள். எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியாது. அமெரிக்கர்கள்தான் இருந்தால், நடந்தால், உட்கார்ந்தால் வழக்கு போடுபவர்கள் அல்லவா? அப்படிப்பட்ட அமெரிக்கன் ஒருவனின் தலையில் ஒரு தேங்காய் விழுந்து விட்டதாம். அவனும் அரசின்மீது வழக்குப்போட்டு நிறையப்பணம் சம்பாதித்துக்கொண்டானாம். அதிலிருந்து தென்னைமரத்தை சிரைத்து விடுகிறார்களாம்.

மணலைப்பாருங்கள். எவ்வளவு வெண்மையாக இருக்கிறது. கடலலைகளும் மிகவும் வேகமாக வந்து விழாமல் இருக்க அதோ பாருங்கள் ஒரு தடுப்புக்கட்டி இருக்கிறார்கள். சின்னஞ்சிறுவர்கள் எல்லாம் எப்படி கூத்தடிக்கிறார்கள்!. தூரத்தில் போவதெல்லாம் சரக்குக்கப்பல்கள். மெயின்லாண்டுக்கோ, பக்கத்து தீவுகளுக்கோ போகின்றன. சனிக்கிழமை வந்தால், மற்ற தீவுகளுக்கு சுற்றுலா போகும் கப்பல்களை பார்க்கலாம்.

அதோ கொஞ்சம் தூரத்துக்கு அப்பால் இடது பக்கம் தெரிகிறது பாருங்கள் அதுதான் டையமண்ட் ஹெட் என்றழைக்கப்படும் பழைய எரிமலை. அதற்கு இன்னொரு நாள் போகலாம். காலைவேளையில் ஹைக்கிங் போவோம். உச்சியில் இருந்து நிறைய விஷயங்களைப் பார்க்கலாம். சரி அப்படியே டையமண்ட் ஹெட்டை நோக்கி நடப்போமா? கடலலைகளுக்கு பக்கத்தில் நடக்கலாம்.

இங்கு ஹவாயில் வெகு சிலருக்கு சிலை வைத்திருக்கிறார்கள். ஹானலூலுவின் மத்திய பகுதியில் King Kamehamehaவிற்கு ஒரு சிலை இருக்கிறது. இதோ பாருங்கள். இவர்தான் ட்யூக் கஹானமோகு (Duke Kahanamouku). இவர்தான் Surfingஐ பிரபலப்படுத்தியவர். பலருக்கு அறிமுகப்படுத்தியவரும் இவரே. ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறாராம். இவரை Father of International Surfing என்றும் சொல்லுவார்கள். சர்�பிங்க் போர்டோடு சிலை செய்திருப்பது நன்றாக இருக்கிறதல்லவா?

அதோ, சாலைக்கு அந்தப்பக்கம் இருக்கும் பூங்காவைப் பாருங்கள். ஏதாவது தெரிகிறதா? நன்றாக பாருங்கள். நமக்கு மிகவும் தெரிந்த ஒருவரின் சிலை இருக்கிறதே! ஆமாம், மகாத்மா காந்திக்கும் சிலை வைத்திருக்கிறார்கள். அவ்வப்போது இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மாலை போடுவார்கள். முதல் முதலில் இந்த சிலையை பார்த்ததும், ரொம்ப உணர்ச்சி வசப்பட்டேன்.

சூரியன் மறையப்போகிறான். இங்கே உட்கார்ந்து சூரியன் மறைவதைப் பார்க்கலாமா? நல்ல நீல நிறத்தில் இருந்த கடல் கொஞ்சம் கொஞ்சமாக அடர்த்தியான நீல நிறமாக மாறுகிறது. கடற்காற்றும் லேசாக குளிர ஆரம்பிக்கிறது. கூட்டைத் தேடி போகும் பறவைகள் எப்படி சத்தம் போடுகின்றன. நல்ல வேளை இன்று நிறைய முகில் இல்லை. முகில் இருந்தால் சூரியன் மறைவதை பார்க்க முடியாது. எத்தனை சிவப்பாக இருக்கிறது பாருங்களேன். அதே சிவப்பு முகில்களின் மீதும் பட்டு, எத்தனை விதமான சிவப்பு நிறத்தை காட்டுகின்றன அந்த முகில்கள். தூரத்தில் போகும் கப்பல்களும் கொஞ்சம் mysteriousஆக இல்லை?! கடலும் லேசாக அந்த சிவப்பு நிறத்தை பிரதி பலிக்கிறது பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக சூரியன் நம் பார்வையில் இருந்து மறைகிறான். இங்கு வைக்கிக்கி கடற்கரையில் மறையும் அதே வேளையில் வேறு எங்காவது சூரியோதயம் நடக்கும்.

அத்தோடு இந்த வைக்கிக்கி கடற்கரையில் நம்மைப்போல எத்தனை பேர் இப்படி அமர்ந்து இந்த சூரியனை அந்திசாயும் பொழுதில் பார்த்து இருப்பார்கள்! எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த சூரியனும், இந்தக்கடலும், வைக்கிக்கி கடற்கரையும் இருக்கும். பார்வையாளர்கள்தான் மாறுகிறார்கள்!!

Comments on "வைக்கிகி கடற்கரையோரம், ஒரு மாலைவேளையில்"

 

post a comment