Tuesday, August 03, 2021

 Sportsmanship

நான் முந்தி, நீ முந்தின்னு போட்டிபோடும் இந்த உலகத்தில் எப்போதாவது நடக்கும் சில விசயங்கள் நம் மனதில் நின்றுவிடுகின்றன இல்லை... நேற்றைக்கு நடந்த ஆண்களுக்கான உயரம் தாண்டும் போட்டியில் இரண்டு பேர் தங்கப்பதக்கம் வென்றார்கள். முதலில் ஒரு தலையங்கமாகப் பார்க்கும்போது இது வித்தியாசமான விசயம் என்பது பிடிபடவில்லை. பிறகு FBஇல் ஷாஜஹான் அவர்களின் வலைப்பதிவையும் வீடியோவையும் பார்க்கும்போதுதான் இது எவ்வளவு அருமையான விசயம் என்று பட்டது. சதா நெகடிவ் விசயங்களே கண்களில் படும் இந்நாட்களில் இது போன்ற விசயம் மனதிற்கு இதமாகிப் போகிறது.

 

அதேபோல ஹாக்கிப் போட்டியில் இந்தியப் பெண்கள் அணி semi-finalsக்குத் தேர்வான செய்தியும் மனதிற்கு இதமாக, உத்வேகமாக இருந்தது. இந்தியா போன்ற நாட்டில் விளையாட்டிற்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. விளையாட்டரசியல் எந்தளவு இருக்கிறது என்பதை எத்தனையெத்தனையோ படங்களிலும் செய்தித் துணுக்குகளிலும் பார்த்துவிட்டோம். ஏதாவது வித்தியாசமாக நடக்கிறதா என்று பார்த்தால், ஒன்றுமே இல்லையென்றுதான் தோன்றுகிறது. ஆனால், இதுபோன்ற வெற்றிகள், நிலை மாறும் என்ற நம்பிக்கையைக் கொண்டு வருகிறது. 


ஷாஜகான் சார் மொழிபெயர்த்த இன்னொரு பதிவையும் இங்கே பகிர்கிறேன்.

//

நான் இந்த வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைக்காதா என்று ஏங்கினேன். மின் தடைகளிலிருந்து, தூங்கும்போது காதைச் சுற்றி ரீங்காரமிடும் கொசுக்களிடமிருந்து, இரண்டு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதிலிருந்து, மழை பெய்யும்போதெல்லாம் நீரில் மிதக்கும் வீட்டிலிருந்து விடுதலையை விரும்பினேன். என் பெற்றோரும் தம்மால் இயன்ற அளவு முயற்சி செய்தார்கள்தான், ஆனால் அவர்களால் அவ்வளவுதான் செய்ய முடிந்தது – அப்பா வண்டியை இழுக்கும் கூலி வேலை செய்பவர், அம்மா வீடுகளில் வேலை செய்பவர்.
எங்கள் வீட்டுக்கு அருகிலேயே ஒரு ஹாக்கி அகாதமி இருந்தது. எனவே, அங்கே பயிற்சி பெறுவதைப் பார்ப்பதிலேயே பல மணிநேரம் செலவு செய்வேன். எனக்கும் விளையாட ஆர்வம் இருந்தது. அப்பாவுக்கு தினக்கூலி 80 ரூபாய்தான், ஹாக்கி மட்டை வாங்கும் அளவுக்கு வசதியில்லை. எனக்கும் சொல்லிக் கொடுங்கள் என்று ஹாக்கி பயிற்சியாளரிடம் தினமும் கேட்பேன். ஆனால் நான் பலவீனமாக இருப்பதாகக் கூறி மறுத்து விடுவார். “பயிற்சிகளைத் தாங்கும் அளவுக்கு உனக்கு வலிமை இல்லை” என்பார் அவர்.
உடைந்த ஹாக்கி மட்டை ஒன்று மைதானத்தில் கிடைத்தது, அதை வைத்துக் கொண்டு பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். எனக்கு ஹாக்கிக்கு ஏற்ற ஆடைகள் இருக்கவில்லை. சல்வார்-கமீஸுடன்தான் ஓடுவேன். ஆனாலும், என்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ஒரு வாய்ப்பாவது கொடுங்கள் என்று பயிற்சியாளரிடம் கெஞ்சினேன். கடைசியில் ஒருவழியாக அவரை ஒப்புக்கொள்ள வைத்து விட்டேன்!
ஆனால், இதை என் வீட்டில் சொன்னபோது அவர்கள் மறுத்து விட்டார்கள். “பெண்கள் வீட்டு வேலைதான் செய்ய வேண்டும். நீ ஸ்கர்ட் போட்டுக்கொண்டு விளையாடுவதை எல்லாம் அனுமதிக்க முடியாது” என்பார்கள். “தயவுசெய்து என்னை அனுமதியுங்கள். நான் இதில் தோல்வி கண்டால், நீங்கள் சொல்வதை எல்லாம் செய்கிறேன்” என்று பெற்றோரிடம் கெஞ்சினேன். அரைமனதாக அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
அதிகாலையிலேயே பயிற்சி துவங்கி விடும். எங்களிடம் கடிகாரம்கூடக் கிடையாது. அம்மா விழித்துக்கொண்டே இருப்பார். வானத்தைப் பார்த்து விடியலை அறிந்து என்னை எழுப்புவார்.
பயிற்சிக்கு வரும் ஒவ்வொரு ஆட்டக்காரரும் 500 மி.லி. பால் கொண்டு வர வேண்டும் என்பது அகாதமியில் விதியாக இருந்தது. எங்கள் வீட்டிலோ, 200 மிலிதான் ஏற்பாடு செய்ய முடிந்தது. நான் அதில் தண்ணீர் கலந்து கொண்டு குடிப்பன். ஏனென்றால், எனக்கு விளையாட வேண்டும்.
எனக்கு ஏற்பட்ட ஒவ்வொரு சிரமங்களின்போதும் என் பயிற்சியாளர் துணையாக நின்றார். ஹாக்கி கிட்களும் ஷூக்களும் வாங்கிக் கொடுப்பார். தன் குடும்பத்திலேயே என்னையும் தங்க வைத்து, எனக்குத் தேவையான உணவு கிடைக்கச் செய்தார். நான் கடுமையாகப் பயிற்சி செய்தேன். ஒரு நாளும்கூட பயிற்சியைத் தவற விட்டதில்லை.
எனக்குக் கிடைத்த முதல் ஊதியம் நினைவில் இருக்கிறது. ஒரு போட்டியில் வெற்றி பெற்றதற்காக 500 ரூபாய் கிடைத்த்து. அதை அப்பாவிடம் கொடுத்தேன். இதற்கு முன்னால் அவர் இவ்வளவு பணத்தைத் தொட்டதே இல்லை. ஒருநாள் நமக்கென ஒரு நல்ல வீடு இருக்கும் என்று என் பெற்றோருக்கு உறுதியளித்தேன். அந்த இலக்கை நோக்கிச் செல்வதில் என்னால் இயன்ற அனைத்தையும் செய்தேன். என் மாநில அணியில் இடம் பெற்றும், பல போட்டிகளில் பங்கேற்ற பிறகும், 15 வயதில் தேசியக் கோப்பை எனக்குக் கிடைத்தது! அப்போதும்கூட, நீ எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்றுதான் உறவினர்கள் கேட்டார்கள். “உனக்கு ஆசை தீரும்வரை விளையாடு” என்று சொன்னார் அப்பா. வீட்டாரின் ஒத்துழைப்பும் கிடைத்த பிறகு என்னால் இயன்ற அனைத்தையும் இந்திய அணிக்காகச் செய்வதில் முனைந்தேன். இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஆனேன்.
அடுத்த சில நாட்களில், ஒருநாள் நான் வீட்டில் இருந்தபோது, அப்பாவின் நண்பர் ஒருவர் வந்தார். தன் பேத்தியையும் உடன் அழைத்து வந்திருந்தார். “இவள் உன்னைப் பார்த்து ஈர்க்கப்பட்டு விட்டாள். இவளும் ஹாக்கி விளையாட விரும்புகிறாள்” என்றார். எனக்குப் பெரு மகிழ்ச்சியாக இருந்தது. அடக்க முடியாமல் அழுதேன்.
என் பெற்றோருக்கு அளித்த உறுதிமொழியை 2017இல் நிறைவு செய்தேன் – ஒரு வீட்டை வாங்கினேன். நாங்கள் எல்லாரும் சேர்ந்து அழுது கொண்டே அணைத்துக் கொண்டோம்.
எனக்கு இதுவே முடிவு அல்ல. என் பெற்றோருக்கும் பயிற்சியாளருக்கும் நன்றிக்கடனாக அவர்கள் எப்போதும் கனவு கண்டு வரும் ஒன்றைத் தருவதில் உறுதியாக இருக்கிறேன் – டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கப் பதக்கம் பெறுவதுதான் அது.
- இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால்
(முந்தைய பதிவில் நண்பர் பதிந்த ஆங்கிலக் கமென்ட்டின் மொழியாக்கம்.)
உன் கரங்களுக்கு அன்பு முத்தங்கள் மகளே.
//
May be an image of 3 people, people standing, outdoors and brick wall




Comments on ""

 

post a comment