Saturday, June 21, 2003

தொலைக்காட்சியும் கிரெகொரி பெக்கும்



எங்கட வீட்டில 81/82ல டீவி வாங்கிட்டினம். அப்ப எங்கட ஊரில நிறைய பேரின்ர வீட்டில டீவி இல்லை. அதனால் எங்களுக்கு அப்பப்ப கொஞ்சல் லெவல் வந்தாலும் முந்தி நாங்க கொழும்பில இருக்கேக்க நடந்த சில விஷயங்கள் ஞாபகம் வரும்.

நாங்க கொழும்பு வெள்ளவத்தையில் இருந்தனாங்க. பூலோகசிங்கப்பெரியப்பான்ர வீட்டுலதான் எங்கட வீடும் இருந்தது. கண்ணனண்ணாதான் எங்களுக்கு எல்லாம் காப்டன் மாதிரி. ஓ..... அவரைப் பற்றி கதைக்க போனா நிறைய கதைக்கலாம். நானும் அரவிந்தனும்தான் அவரின்ற எடுபிடிகள். அவருக்கும் எங்களை விட்டா விளையாட ஆக்கள் கிடையாது. ஆனா, அது எங்களுக்கு அப்ப எப்படி தெரியும். பெரியப்பா அவருக்கு பாட்மிண்டன் வாங்கி கொடுததவர். அவரோட சேந்து விளையாட ஆக்கள் இல்லை எண்டு தெரியாத நாங்கள் அவர் எள்ளெண்டுறதுக்குள்ள எண்ணையா இருந்தனாங்கள். அவர் தண்ணி கேட்டா கொண்டந்து தரோணும். ஷட்டில் கொக் விழுந்திட்டா அதை எடுத்தண்டு வந்து வைக்கோணும் எண்டு நிறைய வேலை. இப்படித்தான் அவரிட்ட சேவகம் செஞ்சு அவரின்ற ஆஸ்ட்ரிக்ஸ், டின் டின் கொமிக்ஸ் எல்லாம் வாசிக்கிறனாங்கள். கொடுமைக்கார அண்ணா எண்டு நினைக்காதீங்கோ. ஒருக்கா, என்னை ஒருக்கா கூட பேசாத அப்பா எதுக்கோ நல்லா பேசிப்போட்டேர். கையில கிள்ளியும் விட்டுட்டேர். விளையாட வந்த நான் அழுதண்டு வந்தது கண்டுட்டு கண்ணனண்ணா கவலைப்பட்டது இன்னமும் ஞாபகம் இருக்கு. கொஞ்ச நாளைக்கு எந்த விதமான சேவகமும் செய்யாம புத்தங்கள் எல்லாம் தந்தவர். :)

அவர் சரியா வால்தான். பெரியப்பா வீட்டு மதில் சுவரில போத்தில் ஓடுகள் எல்லாம் பதிச்சு வைச்சிருக்கீனம். ஒரு நாள் பெரியப்பான்ற கார் வருதோ எண்டு ஏறிப்பார்த்த கண்ணனண்ணா கீழ விழுந்திட்டேர். அவரின்ற கையில முழங்கைல இருந்து கை வரைக்கும் நீளமா போத்திலோடு கிழிச்சு இரத்தம் கொட்டோகொட்டெண்டு கொட்டிச்சுது. அண்ணா குளறாம மெதுவா வீட்டுக்கு வந்து பெரியம்மாவைக் கூப்பிட்டவர். அவ வந்து பார்த்து போட்ட சத்தத்தில அப்பாவும் வெளில வந்து பார்த்து உடன டக்ஸிய கூப்பிட்டு ஆஸ்பத்திரிக்கு போனவை. கண்ணனண்ணா, கொஞ்ச நாள் முழங்கைல இருந்து பெரிய கட்டோட திரிஞ்சவர். ஆனா வீட்டுக்கு வந்து எங்களிட்ட எவ்வளவு அளந்தவர் தெரியுமே! தான் பின் சீட்டில பெரியம்மாவோட இருக்கிறேராம். பெரியம்மா அழுதண்டே ஐஸ் கட்டியை துண்டிலை வச்சுப்பிடிக்கிறாவாம். அப்பா பின்னுக்கு பாத்தண்டு கெதியா கெதியா எண்டு டிரைவரிட்ட சொல்லுறேராம். டிரைவரும் வேகமா போறேராம். ஸ்பீட் காட்டுற கம்பி நல்லா தான் இது வரைக்கும் பாக்காத அளவுக்கு ஏறுனதாம். ரேசிங் கார் மாதிரி ஓடினது கார். நான் மட்டும்தான் அதில போனனான். உங்க ரெண்டு பேருக்கும் தெரியாது என்று பெரிய கதை எங்களிட்ட.

எங்கட வீட்டுதான் ரோட்டில கடைசி. Cul-de sac எண்டு சொல்லுவினமே. அதுதான். அந்தப்பக்கத்தில இன்னும் மூண்டு வீட்டிலைதான் சின்னாக்கள் இருந்தவை. முன் வீட்டில மாடியில மலையாள ஆக்கள் இர்ந்தவை. கீழயும் 2-3 கூட்டாளிமார் இருந்தவை. இவைகளோட சில நேரம் விளையாடுறனாங்க எண்டாலும். ரோட்டுக்கு அந்தப்பக்கம் போகோணும் எண்டதால போறதில்லை. அட, போக விடுறதில்லை. கொஞ்சம் நல்ல மாதிரி சொல்லுவம் எண்டால் விடுறியளோ. :)

எங்கட வீடு இருக்கிற பக்கத்தில தான் ரெண்டு வீடு தள்ளி ஒரு வீட்டில ஒரு பெட்டை இருந்தவ. அவவுக்கு பெயர் அகலிகை. எங்கட பெரியப்பா தமிழ் பொர�பசர். கலாநிதிப்பட்டம் வாங்கினவராம். புத்தகம் கூட எழுதி இருக்கிறேர். குமுதம்-யாழ் மணத்தில கூட அவர் எழுதினதில் இருந்து எடுத்துப்போட்டு இருக்கினம். சரி இதை ஏன் இங்க சொல்லுறன் எண்டால். பெரியப்பாட்ட இருந்து அப்பப்ப கொஞ்சம் தமிழ், பழைய கதை எல்லாம் கேக்கலாம். அண்ணாவுக்கு எங்கள விட நிறையத்தெரியும். எங்கள விட மூண்டு வயசு கூட வேற அவருக்கு. அந்தப் பெட்டைக்கு பெயர் அகலிகை எண்டு சொன்னனான் எல்லா. அவவை நாங்கள் எல்லாம் அண்ணா சொல்லித்தந்த மாதிரி. உன்னை ஒரு ஆள் மிதிச்ச பிறகுதான் உனக்கு உயிர் வந்தது. இராமரின்ற காலாலை உன்னை மிதிச்சவர் எண்டு பகிடி பண்ணியெண்டே இருப்பம். ஏதோ ஒரு விதத்தில கம்பராமாயணம் அப்பவே ஒட்டிற்றிது எண்டு பெருமை அடிச்சுக்கலாமே?! :p

சில நாக்கள்ல அப்பா, அம்மா, நான், அரவிந்தன், விக்கி எல்லாரும் வெளிக்கிட்டு வெளியில போவம். சில நாக்கள்ல படம் பாக்கப்போறனாங்கள். அப்படி ஒருக்கா போனபோதுதான் யாரோ என்னட்ட 'வெள்ளிக்கிழமை விரதம்' படத்தில வந்த பாம்பு சீட்டுக்கடியிலை வரும் எண்டு சொல்லி அதுக்கு பிறகு எல்லாம் காலை சீட்டுக்கு மேல வச்சண்டுதான் படம் பாத்தனாம். அந்தப்படத்திலயே ஒரு பிளேன் வரும். அதிலைதான் பத்மன் மாமா லண்டனுக்கு போனவர் எண்டும் யாரோ சொல்லிச்சினம். நிறைய நாக்களுக்கு பத்மன் மாமா போறதை இவை எப்படி படம் எடுத்தவை எண்டு யோசிச்சண்டே இருந்திருக்கிறன். அரவிந்தனோட பாக்கேக்க நான் பறுவாயில்லை. அவன் சின்ன ஆளா இருக்கேக்கயாம், விக்கி பிறக்கேல்ல. அப்ப 'மூன்று முடிச்சு' படம் பாக்க போனனாங்களாம். (ஹ்ஹ்ஹ்ம்ம்ம் சிறீதேவி படம் பாக்கேக்க நான் சின்னப்பிள்ளையெண்டா, கமல்?! ;) ) அந்தப்படத்தில ரஜனி முடிச்சுப்போடுவேராம். அப்ப அவரின்ற முகத்த கிட்ட காட்டுவினமாம். அதை பார்த்து அரவிந்தன் வீறிட்டு கத்தி, படம் முழ்க்க அப்பா அரவிந்தனை வெளியிலதானாம் தூக்கி வச்சண்டு நிண்டவராம். பிறகு, அரவிந்தன் ரஜனி பைத்தியமா இருக்கேக்க இந்த கதைதான் வீட்டிலை அடிபடும்.

சரி கதை எங்க தொடங்கி எங்க எல்லாம் போகுது. சில நாக்கள்ல நாங்கள் கடைகளில அப்பதான் வந்திருந்த டீவில நிகழ்ச்சிகள் பாக்கிறனாங்க. நாங்க மட்டுமில்ல. எங்களோட சில சனமும் நிக்கும். பிறகு, நிறைய வருஷம் கழிச்சு, சென்னைல வி.ஜி.பி, விவேக்ஸ் கடைகளுக்கு முன்னுக்கு சனம் நிக்கேக்க, முந்தி நாங்களும் நிண்டதுதான் ஞாபகம் வரும்.

இப்படி போயண்டு இருக்கேக்கதான் ஒரு நாள் எங்கட வீட்டுக்கு முன்வீட்டு மாடியில பெரிய களேபரம். என்னடா எண்டு பார்த்தா அந்த விட்டுல இருந்த சின்னாக்கள் அந்த ஒழுங்கை முழுக்க கத்தியண்டு வந்திச்சினம். 'எங்கட வீட்டில டீவி வந்திற்று. நாங்க டீவி வாங்கிட்டம்' எண்டு ஒரே சத்தம்தான். எங்களுக்கு பொறாமையா இருந்துது. அதுவும் அவை நிகழ்ச்சி பாப்பினம் எண்டு இல்லை. எங்கட வீட்டில இல்லாத சாமான் அவைட வீட்டில இருக்கெண்ட பொறாமைதான். நாங்களும் கண்ணனண்ணாவோட சேந்து 'எங்களுக்கெல்லாம் டீவியே பிடிக்காது. அதிலை என்னதான் இருக்கோ' எண்டு கிரேப்ஸ் புளிச்ச கதையா கதைச்சம்.

புங்குடுதீவில சில நேரம் பெருமை வரேக்க கொழும்பில நாங்க எப்படி நடந்தனாங்கள் எண்டதுதான் ஞாபகம் வரும். அதோட அந்த பெருமையெல்லாம் வடிஞ்சு போயிரும்.

டீவி பார்த்த அனுபவங்கள், தனிய வீட்டில எல்லாரும் நித்திரை கொள்ளேக்க, நடுங்கியண்டு 'Omen' படம் பாத்தது பற்றியெல்லாம் பிறகு. கிரெகரி பெக் செத்துப்போயிற்றேர் எண்டதும் வந்த நினைவலைகளை பிடிக்க முயற்சிக்கிறேன்.



Comments on "தொலைக்காட்சியும் கிரெகொரி பெக்கும்"

 

post a comment