Tuesday, August 12, 2003

டோர்வால் விமானநிலையத்தில் சுற்றுலாப்பயணிகள்





மான்ரியல் டோர்வால் விமானநிலையத்தில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஆறு பயணிகள் சொந்த ஊருக்குப்போக முடியாமல் விமான நிலையத்திலேயே கடந்த நான்கு நாட்களாக தங்கி இருக்கிறார்களாம். மான்ரியல், கனடாவிற்கு சுற்றுலாவிற்கு வந்தவர்கள் அவர்கள். அங்கேயே படுத்து அங்கேயே உண்டுகொண்டு ஏன் இப்படி விமானநிலையத்தில் இருக்கிறார்கள்? விஷயம் இதுதான் பத்துநாட்களுக்கு முன்பு அமெரிக்கா, பாதுகாப்புக்காரணங்களின் காரணமாக அமெரிக்க விமானநிலையங்களில் வேறு விமானம் மாறுபவர்களும் விசா வாங்கவேண்டும் என்று சொல்லிவிட்டது. திடீரென்று கொண்டுவந்த சட்டத்தின் படியால் இந்த ஆறு மெக்சிகர்களுக்கும் அட்லாண்டா விமானநிலையம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. ஆகஸ்ட் முதலாம் தேதியிலிருந்தே இங்கிருந்து நேரடியாக செல்லும் 'மெக்சிகானா'வில் மேலதிக இடம் இல்லையாம்.

கனடா இவர்களை விமானத்தில் இடம் கிடைக்கும்வரை அனுமதித்திருக்கிறது என்று நினைக்கிறேன். சரி, சுற்றுலாவிற்காக வந்தவர்கள் ஏன் விமானநிலையத்திலேயே உண்டு உறங்கவேண்டும். அங்கேதான் பிரச்சினை. இவர்கள் விமானச்சீட்டு வாங்கியது 'டெல்டா' நிறுவனத்திடம். அவர்கள் அட்லாண்டாவில் தங்களால் முடிந்ததை செய்கிறோம் என்று சொன்னாலும் இவர்களுக்கு ஹோட்டலில் அறைகூட தரமுடியவில்லையா என்ன? அது தங்களின் பிழை இல்லை அமெரிக்க உள்நாட்டுப்பாதுகாப்பு விவகாரம் இது என்று சொல்லுகிறதாம். கூடவே விசா வாங்கிக்கொண்டு அவர்கள் வரலாம் என்றும் தாங்கள் பல பயணிகளை நேரடி விமானங்களில் அனுப்பி வைப்பதாகவும், மற்றவர்கள் அமெரிக்க விசா வாங்கிக்கொண்டு பறக்கவேண்டும் என்றும் சொல்லுகிறதாம்.

அமெரிக்காவில் டிரான்சிட் விசா தேவையில்லை என்ற விதிகளின்படி போனவருடம் அமெரிக்க விமானநிலையங்களை உபயோகித்தவர்கள் 381,065 பேர்களாம். பிரேசில் நாட்டவர்கள்தான் அதிக எண்ணிக்கையினர். அடுத்த இடம் மெக்சிகோவிற்கு.

சரி உங்களில் எத்தனை பேருக்கு விசா வாங்குவதில் ஒரு பிரச்சினையுமே ஏற்படாதவர்கள்? அப்படியே கொஞ்சம் சென்னை, பறங்கிமலைக்கு எக்சிட் விசா, மாணவர்களுக்கான விசா நீட்டித்தல் வாங்க அனுப்பவேண்டும் உங்களை. :)

Comments on "டோர்வால் விமானநிலையத்தில் சுற்றுலாப்பயணிகள்"

 

post a comment