Sunday, January 04, 2004

வேம்படி மகளிர் கல்லூரி விடுதி - 4


வெள்ளிக்கிழமை வீட்டிற்குப் போகவேண்டுமென்றால், ஆறாம் வகுப்புக் காரரை வீட்டிலிருந்து யாராவது கூட்டிக்கொண்டுபோகவேண்டும். ஒவ்வொரு வாரமும் வந்துபோகமுடியாது என்பதால், அம்மா வரமாட்டார். என்னுடைய கசின்கள் வீட்டிற்குப் போவதைப் பார்த்தால் அழுகையாக வரும். ஹொஸ்டல் விஷயங்கள் பிடிபட பிடிபட, வீட்டிற்குப் போயிருந்தபோது, அம்மாவிடம் இருந்து ஒரு கடிதம் கொண்டு வந்தால், அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பவரோடு வீட்டிற்குப் போகலாம் என்று தெரிந்துகொண்டு அடிக்கடி வீட்டிற்குப் போகமுடிந்தது.

வேம்படியிலும் ஹொஸ்டலிலும் சேர்ந்த புதிதில் அப்பா விடுமுறையில் வந்து தங்கியிருந்தார். ஒவ்வொரு வெள்ளியும் வீட்டிற்கு வானில் தூங்கியபடி போவது ஞாபகம் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஏறக்குறைய இருபது மைல் தொலைவில் புங்குடுதீவு இருக்கிறது. வழியில் வேலணை என்று இன்னொரு தீவும் இருக்கிறது. இரண்டு இடங்களில் கடலில் போடப்பட்டிருக்கும் சாலையில் நீண்டநேரம் வான் ஓடும். சாலையின் இரண்டு பக்கமும் கடலில் ஏதோ ஒரு நாணல்போன்ற, ஆனால் தடிமனான தாவரம் வளர்ந்திருக்கும். அதை வேறெங்கோ பிய்த்து வாயில் வைத்துப் பார்த்த ஞாபகம் வருகிறது. ஒரே துவர்ப்பு. முகத்தில் வந்து அறையும் காற்றும் துவர்ப்பாகத்தான் இருந்தது. ஆனால், அது மிகவும் பிடித்திருந்ததற்குக் காரணம் - அது ஹொஸ்டலில் இருந்து வீட்டுக்குப் போகும் சுதந்திரப் பயணம் என்பதால் இருக்கலாம். ;)

வீட்டில் சினிமாப்பாட்டுக்கு தடா என்பதால், இதுபோன்ற பயணங்களிலேயே பாட்டுக் கேட்க முடிந்தது. இப்போதும் எண்பதுகளிலும் எழுபதுகளிலும் வந்த பாட்டுகளைக் கேட்கும்போது கடற்காற்று முகத்தில் வந்து வீசும் உணர்வு ஏற்படுகிறது.

Comments on "வேம்படி மகளிர் கல்லூரி விடுதி - 4"

 

post a comment