Tuesday, July 29, 2003

பண்டாரப்பெத்தாச்சி



நாலரை அடிக்கும் ஐந்தடிக்கும் இடைப்பட்ட உயரம். எங்கள் ஊரில் வயதானவர்கள் கட்டுவதுபோன்ற புடவைக்கட்டு. நூறு கிலோவுக்குள் மதிப்பிடக்கூடிய எடை. காது கேக்காததால் கொஞ்சம் சத்தமாக பேசும் வழக்கம். கூட யாருமே இல்லை என்பதாலோ என்னவோ, யாரோடு பேசிக்கொண்டிருந்தாலும் கொஞ்சம் அதிகமாகவே பேசும் பழக்கம். இந்தப்பழக்கத்தால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் சிலவேளைகளில் இவர் கண்களில் படாமல் ஒளிவது. பண்டாரப்பெத்தாச்சியை நினைத்தால் மனதில் விழும் பிம்பம் இதுதான்.

பண்டாரப்பெத்தாச்சியை முதலில் எப்போது பார்த்தேன் என்பதெல்லாம் ஞாபகம் இல்லை. ஆனால், நான் புங்குடுதீவிலும் யாழ்ப்பாணத்திலும் இருந்த நாட்களில் இவரை நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. யார் வீட்டு ஆல்பத்தில் இருக்கிறாரோ இல்லையோ, எங்கள் வீட்டு புகைப்பட ஆல்பத்தில் இருக்கிறார். எங்கள் வீட்டிற்கு இடதுபுறம் சாலையின் அதே பக்கத்தில் இருக்கிறது இவருடைய சிறிய வீடு. வீடு என்று சொல்வதைவிட குடிசை என்று சொல்லலாம்.

எங்கள் வீட்டு கேற்றிலிருந்து நடந்தால் பண்டாரப்பெத்தாச்சியின் வளவும் வீடும், படலையும் வரும். எங்கள் வீட்டில் இருந்தமாதிரி பெரிய படலையும் சிறிய படலையும் இல்லை. பண்டாரப்பெத்தாச்சியின் சிறிய ஆட்கள் போய்வரும் படலையை திறந்தவுடன் எங்கள் வீடு மாதிரி முன்பக்கம் மரமில்லாமல் இருக்காது. பண்டாரப்பெத்தாச்சியின் சிறிய படலையை திறந்து கொண்டு உள்ளே போனால், உடனே நம்மை வரவேற்பது அப்போதுதான் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு ஆள் உயரத்திற்கு இருக்கும் பனைமரம். அதே உயரத்தில் இன்னும் சில பனைமரங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கின்றன. இவற்றோடு வேலி ஓரங்களில் பனைமரங்களும் தென்னைமரங்களும் உயர்ந்து வளர்ந்திருக்கின்றன. என்ன மரம் என்று என்னால் சொல்லமுடியாத சில மரங்களும் வளர்ந்து இருக்கின்றன. இந்த மரங்களின் கீழே புற்கள் நன்றாக பச்சைப்பசுமையாக வளர்ந்திருக்கின்றன. ஆனால், எனக்கு எப்போதும் அந்த புல்தரையில் நடப்பதற்கு பயம். வேறென்ன பாம்புகளின் மீதிருக்கும் மரியாதைதான். இந்த புற்களுக்கு நடுவில் ஒரு ஒத்தையடி பாதை போகும். காணியின் கடைசியில்தான் வீடு இருந்தது. இந்த ஒத்தையடி பாதையின் இரண்டு பக்கமும் வேறு மரங்களும் இருந்தன. ஒரு ஓரமாக கனகாம்பர செடியும் இருந்தது. அவ்வப்போது இங்கு வந்து பூப்பறித்துக்கொண்டு போவேன். எங்கள் இருவரின் நிலத்தையும் பிரிக்கும் வேலியின் குன்றுமணி கொடியன்றும் இருந்தது. அவ்வப்போது அம்மம்மாவுடன் வந்தால் அவவை காவலுக்கு விட்டுவிட்டு குன்றுமணிகளை பொறுக்குவது வழக்கம்.

பண்டாரப்பெத்தாச்சியின் வீடு சிறியது என்று முன்பே சொல்லிவிட்டேன் இல்லையா. அவரின் வீடு கல்வீடு இல்லை மண்வீடுதான். காணியின் அடித்தொங்கலில் இரண்டு குடிசைகள் இருக்கின்றன. "டனா"ப்பட வீடும், சமையல் அறையும் கட்டப்பட்டிருந்தது. படலையில் ஆரம்பித்த ஒற்றையடிப்பாதை இந்த இரண்டு குடிசைகளையும் பிரித்தது. முதலில் சமையல் அறை. மண்ணால் கட்டப்பட்ட சுவர். ஜன்னல் கதவு எல்லாம் ஒன்றும் இல்லை. கூரை பனையோலையால் வேய்ந்து இருந்தது. சமையல் அறையின் முன்பக்கம் வாசலுக்கு இரண்டு பக்கத்திலும் திண்ணை இருந்தது. வாசலுக்கு கிடுகுகள் சேர்த்துக்கட்டப்பட்ட மறைப்பு இருந்தது. இரவிலும், மத்தியானத்தில் உறங்கும் நேரத்திலும் குசினி மூடி இருக்கும். குசினி என்றுதான் எங்கள் ஊரில் சமையல் அறையை சொல்லுவார்கள்.

பண்டாரப்பெத்தாச்சியின் வீடும் அவரின் குசினி போலவே மண்ணால் கட்டப்பட்டு பனையோலையால் வேயப்பட்டிருந்தது. இந்த வீட்டில் உள்ளே ஒரு சிறிய ஜன்னல் இல்லாத அறையும் இருக்கிறது. இங்கும் திண்ணை இருந்தது. பண்டாரப்பெத்தாச்சியின் வீடு எப்பவும் சுத்தமாக இருக்கும். வாரத்துக்கு ஒரு தடவையோ இரு வாரத்துக்கு ஒருமுறையோ வீட்டையும் குசினியையும் பசுஞ்சாணத்தால் மெழுகி வைத்த்திருப்பார் பண்டாரப்பெத்தாச்சி. மனதிற்கு இதமளிக்கும் அந்த வீட்டு வாசனையை நான் வேறெங்கும் இன்னமும் அனுபவிக்கவில்லை. பல சமயங்களில் பண்டாரப்பெத்தாச்சி வீட்டை மெழுகுவதை உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்திருக்கிறேன்.

வீட்டின் ஒரு பக்கத்தில் மாமரம் ஒன்று நிற்கும். அதுபோலவே சாலையில் இருந்து வெகுதூரம் உள்ளே இருந்த வீடுகள் சாலைக்கு முதுகைக்காட்டியபடி இருந்தன. இந்த குடிசைகளுக்கு முன்புறமாக வேலியின் ஓரத்தில் இன்னும் சில பனைமரங்களும் தென்னைமரங்களும் இருந்தன. கூடவே ஒரு நெல்லிக்காய் மரமும், முருங்கைமரங்களும் இருந்தன.

இவரின் குடும்ப விவகாரங்கள் எங்களுக்கெல்லாம் தெரியாது. ஆனால் ஒருவரை தத்தெடுத்து வளர்த்தார் என்பது தெரியும். அவர் என்னுடைய தோழியின் தந்தைதா. உறவினரும் கூட. ஆனால், பண்டாரப்பெத்தாச்சியை கண்டால் எல்லோரும் நின்று கதைத்து விட்டுத்தான் போவார்கள். லேசாகக்கூன் விழுந்திருக்கும் அவர், கையில் பொல்லுடன் எல்லா இடமும் போய்வருவார்.

பண்டாரப்பெத்தாச்சி வீட்டிற்கு காலையில் போனால், முதல்நாள் சமைத்த பாத்திரங்கள் கிணற்றடியில் இருக்கும். சில சமயங்களில் எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் பெண் ஒருத்தி வந்து தேய்த்து கொடுத்து விட்டுப்போவார். இல்லையென்றால் பண்டாரப்பெத்தாச்சி தேய்ப்பார். அவருடன் கூட அமர்ந்து அவர் செய்வதைப்பார்த்தும், பேசியும் இருந்திருக்கிறோம். அது என்னமோ தெரியவில்லை, வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் பண்டாரப்பெத்தாச்சிக்கும் எங்களுக்கும் நன்றாக ஒத்துப்போயிற்று. சுருக்கம் விழுந்து மிகவும் மென்மையாக இருக்கும் அவரது கைகளை தடவிக்கொண்டிருப்பதற்கு போட்டி நடக்கும். எங்களுடன் அம்மம்மாவும் வந்திருக்கிறார் என்றால், அவ்வளவாக சண்டை வராது. சிலர் அம்மம்மாவுடன் இருப்பார்கள்.


Sunday, July 20, 2003

திருமறைக்காட்டில் ஒரு மாலைப்பொழுது



இன்று என்ன எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது சும்மா ஹவாய் பத்தியும் இங்கிலீசு படம் பத்தியுமே எழுதி கிட்டு இருக்காதே. வேற எதாய்ச்சும் எழுதுன்னு உள்மனசு சொல்லுச்சு. அதான், அதன்மேல பாரத்தைப்போட்டுட்டு கொஞ்சம் வித்தியாசமான அனுபவம் பத்தி எழுதப்போறேன்.

கடைசியா ஊருக்கு போறதுக்கு முன்னாடி இந்தயிந்தக் கோயில்களுக்கு போகணும்னு ஒரு பட்டியலே தயார் பண்ணியிருந்தேன். அதை தங்கச்சிக்கும் அனுப்பி அவளும் தமிழ்நாட்டு வரைபடத்தை வச்சுகிட்டு நான் எப்போ வருவேன்னு வழிமேல விழி வச்சு காத்துக்கிட்டிருந்தா. :)

ஒரு சனிக்கிழமை அன்னிக்கு கோயில் சுற்றுலா கிளம்பினோம். பயணம் கிளம்பிய இரண்டாம் நாளன்று வேளாங்கண்ணி மாதாவை தரிசித்து விட்டு வேதாரண்யம் நோக்கி பயணித்தோம். பிற்பகல் வேளை. கடற்காற்று சில்லென்று அடிக்க கார் தெற்கு நோக்கி பயணித்தது. சில இடங்களில் சாலையில் இருமருங்கும் வயல்வெளிகளையும், சிற்சில இடங்களில் கடலையும் பார்த்தவாறு சென்று கொண்டிருந்தோம். அம்மாவிற்கு இலங்கைக்கு அருகில் வருகிறோம் என்ற மகிழ்ச்சி வேறு கொப்பளித்துக்கொண்டிருந்தது. நானும் தங்கையும் அவரை கள்ளத்தோணி கிடைத்தால் தேடி அனுப்பி வைக்கிறோம் என்று கலாட்டா செய்து கொண்டிருந்தோம். ஆனால், சில இடங்களில் போலீஸ் செக்போஸ்ட் இருந்தது. ஓட்டுநர், கடத்தல் நடவடிக்கைகளையும் இன்னபிறவற்றையும் கண்காணிக்கவுமே அந்த செக்போஸ்டுகள் போடப்பட்டிருக்கின்றன என்று சொன்ன பிறகு காரில் ஜேசுதாஸ் குரல் மட்டுமே கேட்டது. :)) வழியில் ஓரிடத்தை இதுதான் நாட்டுப்புறப்பாடல் பாடும் புஷ்பவனம் குப்புசாமியின் ஊர் என்று சொன்னதும், குப்புசாமியின் காசட் ஒலிக்க ஆரம்பித்தது.

வேளாங்கண்ணியில் இருந்து சில மணிநேரம் பயணித்து திருமறைக்காடு என அழைக்கப்படும் வேதாரண்யத்தை அடைந்தோம். நாங்கள் மூவரும் பலநாட்களாக இந்தக்கோயிலுக்கு வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தபடியால் நேரம் கடத்தவில்லை. வழக்கம் போல நானும் தங்கையும் போட்டி போட்டுக்கொண்டு கோபுரத்தை புகைப்படம் எடுத்துத்தள்ளினோம்.

கோபுரத்தின் அளவே எங்களை பிரமிக்க வைத்திருந்தது. கோபுர வாயிலில் சிறிய கதவு மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. ஒருவர் பின் ஒருவராக கோவிலின் உள்ளே சென்ற எங்களால் வாய்பேச முடியவில்லை. அத்தனை பெரிய பரப்பளவில் கோவில் அமைந்திருந்தது. அந்திப்பொழுதாகையால் தென்றல் காற்றும் சுற்றிலும் மரங்களும் ஆங்காங்கே சன்னதிகளுடன் நடுவில் பிரம்மாண்டமான கோயில் கட்டடம் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. நாங்கள் சென்றது கோயிலின் பின்புறம். மிக அகலமான வெளி வீதியில் நடந்து கோயிலின் முன் பகுதியை அடைந்தோம்.

அங்கிருந்த பெரிய கதவினூடாக உள்நுழையும்போதே அப்பரும் சம்பந்தரும் இங்கு தரிசனம் செய்தது ஞாபகம் வந்தது. அப்பர் என்ற திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் இறைவனை வழிபட இக்கோவிலுக்கு வந்திருக்கிறார்கள். அப்போது அடியார்கள் முன் வாசலை உபயோகிக்காமல் பக்கத்திலிருக்கும் வழியையே உபயோகிப்பது கண்டு என்னவென்று விசாரித்திருக்கிறார்கள். கதவை திறக்கமுடியவில்லை என்று அடியவர்கள் கூறியதைக்கேட்டு இருவரும் இறைவனுக்கு பாடல் பாடி அவனையே கதவையும் திறக்கச்செய்யவேண்டும் என்று முடிவு செய்தார்கள். கதவை திறக்க செய்வதற்கு அப்பர் 10 பாடல்கள் அடங்கிய பதிகம் பாடினார். கதவும் திறந்தது. திறந்த கதவை மூட செய்ய திருஞானசம்பந்தர் பாடிய ஒரு பாடலே போதுமாக இருந்தது.

சிவாஜி அப்பராக நடித்ததைப்பற்றியும் நிஜமாகவே இங்குதான் படத்தை எடுத்திருப்பார்களோ என்றும் பேசிக்கொண்டே கோயிலின் முன் வாசலை அடைந்தோம். யப்பா அங்கு எங்களுக்கு இன்னொரு அதிசயம் காத்திருந்தது. சிவலிங்கம் இருக்கும் மூல சன்னதியை அடைய நாங்கள் தாண்டிய கதவுகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். போகிறோம் போகிறோம் போய்க்கொண்டே இருக்கிறோம். :) சிவனை தரிசனம் செய்து விட்டு திரும்பி வரும்போது எத்தனை கதவுகள் இருக்கிறது என்று எண்ணவேண்டும் என்று பேசிக்கொண்டோம்.

ஆனால் அதற்குள் ஒருவர் வந்து வாருங்கள் வாருங்கள் என்று எங்களை பரபரப்பாக அழைத்தார். அதுவரை கோயில்களில் அர்ச்சகர்களின் தொல்லையால் அவதிப்பட்ட நாங்கள் அவர் எதற்குக்கூப்பிடுகிறார் என்று எண்ணிக்கொண்டே வந்தோம். அவரோ கையில் இருந்த மல்லிகைச்சரத்தை அம்மாவிடம் கொடுத்து மரகத லிங்கத்திற்கு பூஜை நடக்கிறது. சீக்கிரம் போங்கள் என்று அனுப்பி வைத்தார். சப்தவிடங்க தலங்கள் என்று அழைக்கப்படும் எட்டுக்கோவில்களில்தான் மரகத லிங்கம் இருக்கிறது. அதில் வேதாரண்யமும் ஒன்றும். மரகத லிங்க பூஜையை தரிசித்து விட்டு பிறகு தொடர்ந்து நடந்த மாலைவேளைப்பூஜையும் பார்த்தோம்.

உள் பிரகாரத்திலேயே தனிச்சன்னிதி கொண்ட துர்க்கையம்மனை வழிபடும்போது ஏனோ புங்குடுதீவு ஞாபகம் வந்து போனது. உள் பிரகாரப்பூஜை முடிந்ததும் வெளிப்பிரகாரத்தில் இருக்கும் விநாயகருக்கும் முருகனுக்கும் பூஜை நடந்தது. இங்கு இருக்கும் விநாயகரைத்தானாம் இராமர் வழிபட்டாராம். மேலும் இங்குதான் சிவன்-பார்வதியின் திருமணக்கோலமும் அகத்தியருக்கு கிடைத்ததாம். உலகத்தில் இருக்குறவங்கல்லாம் பார்வதி பரமேசுவரரின் கல்யாணத்தை பார்க்கிறதுக்கு இமயமலை வந்துட்டாங்களாம். அனைவரும் வடக்கே வந்துவிட்ட படியால் வடபகுதி தாழ்ந்தும் தென்பகுதி மேலாகவும் வந்து விட்டதாம். அதை மாற்றி பூமியை பழைய படி இருக்க செய்ய சிவன் உயரத்தில் சிறியவரான அகத்தியரை தெற்கே அனுப்பி வைத்தாராம். அவரும் தனக்கு மறுபடியும் திருமணக்காட்சியைக்காட்ட வேண்டும் என்று கண்டிஷன் போட்டுட்டுத்தான் கிளம்பி இருக்கார். அகத்தியரின் கண்டிஷனை இங்கதான் நிறைவேற்றி வைத்தார்களாம் பார்வதியும் பரமேஸ்வரனும். :)

நாங்கள் கோவிலை விட்டு கிளம்பும்போது இருட்டி விட்டது. ஆங்காங்கே மினுக்கிக்கொண்டிருந்த டியூப் லைட்டுகள் தீவட்டிகளாக உருவகித்துக்கொண்டு பழங்காலத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டோம் நானும் தங்கையும். அந்த ரம்யமான மாலைப்பொழுதில் அந்த பிரமாண்டமான கோயில் பிரகாரத்தில் நடக்கும்போது எத்தகைய வரலாற்றுப்பொக்கிஷங்கள் இருக்கின்றன நம்மிடையில். ஆனால் நாம் அவற்றிற்கு வேண்டிய மரியாதை கொடுக்கிறோமா என்று நினைத்துக்கொண்டேன். பயணம் முடிந்து சென்னை திரும்புவதற்கு எத்தனை தரம் அப்படி நினைத்தேன் என்று எனக்கே தெரியவில்லை. :(

I dont know if I have done justice to ones' experience in this great temple.

என்னால் முடிந்த அளவு என் எழுத்தின்மூலம் என்னுடைய அனுபவத்தை உங்களிடன் பகிர்ந்து கொள்ள முயற்சித்திருக்கிறேன். எப்படி இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் மகிழ்வேன்.

Friday, July 11, 2003

என் ஆசிரியர்கள்



என்னுடைய ஆசிரியர்களை நான் அடிக்கடி நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். ஏனென்றால் இப்படி உங்களுடன் நான் பேசிக்கொண்டிருப்பதற்க்கு காரணமே அவர்கள்தானே!

நான் இந்தியாவிற்கு 1985 வந்து பள்ளிக்கூடத்தில் சேர்ந்தபோது ஆங்கிலத்தில் எனக்கு புலமை மிகவும் குறைவு. என்னுடைய ஊரில் ஆங்கிலம் இரண்டாவது மொழியே. தமிழே எனக்கு பயிற்றுமொழியாக இருந்தது. சென்னையில் வந்து சேர்ந்த பள்ளியோ ஆங்கிலத்தை பயிற்றுமொழியாகக்கொண்டது. எனக்கு சுலபமாக இருந்த பாடங்கள் (அதாவது என்ன பேசுறாங்க என்று புரிந்தவை) தமிழும் கணக்கும் மட்டுமே. மற்ற வகுப்புகளில் "சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்தமாதிரி" (ஆமா ஏன் இப்படி சொல்லுறாங்க என்று யாருக்காவது தெரியுமா? என்னுடைய நெடுநாள் சந்தேகம் இது.) முழித்துக்கொண்டு இருந்தேன். என்னுடைய ஏழாம் வகுப்பில் என்னை விட மூன்று இலங்கை மாணவர்கள். பார்த்தார் எங்களுடைய இயற்பியல் ஆசிரியர் - "தமிழிலும் ஆங்கிலத்திலுமாக பாடம் நடத்தட்டுமா என்று மற்ற மாணவர்களிடம் அனுமதி பெற்று பாடம் நடத்தினார். அன்றுதான் என்னமோ கொஞ்சம் பாடங்கள் விளங்கியது. இதிலும் எனக்கு மற்றவர்களை விட இன்னமும் கஷ்டமாக இருந்தது. ஏனென்றால் நான் பள்ளி ஆண்டில் இடையில் வந்து சேர்ந்து கொண்டேன். ஆனால் என்னுடைய வகுப்பிலும் என்னுடைய தம்பியின் வகுப்பிலும் மாணவர்கள் எங்களுக்கு எங்களின் நோட்டுப்புத்தகங்களை வாங்கி அவர்களே வார இறுதி விடுமுறை நாட்களில் நோட்ஸ் எழுதிக்கொடுத்தார்கள். இந்த மாணவ நண்பர்களும் அந்த ராஜசேகர் சாரும் எனக்கு இந்தியா வந்ததும் என் மனதில் முதலில் இடம் பெற்றவர்கள்.

அடுத்தது என்னுடைய புவியியல் மாஸ்டர் சுவாமிநாதன். நமக்கு ஆங்கிலம் "ததக்கு புதக்கு" என்று வந்தாலும் புவியியலிலும் சரித்திரப்பாடத்திலும் ஒரு விவரிக்கமுடியாத ஆர்வம் இருந்தது. (இன்றும்தான்.) விலங்கியல் பாடத்தில் பூஜ்யம் வாங்கிய தேர்வில்தான் நான் புவியியலில் 72ம் வாங்கி இருந்தேன். (தேர்வு நடந்தது நான் பள்ளியில் சேர்ந்து 2 வாரத்துக்குப்பிறகு.) சுவாமிநாதன் சார் தான் போன வகுப்புகளில் எல்லாம் மாணவர்களை என்னுடைய பெயர் சொல்லிக்காட்டி வறுத்தெடுத்ததால் எல்லா மாணவர்களும் என்னமோ zooவிற்கு போவதுபோல என்னுடைய வகுப்புக்கு வந்து என்னை பார்வையால் எரித்து விட்டுப்போனார்கள். நான் வீட்டில் போய் பெருமை அடித்துக்கொண்டேன். அப்போதுதான் அவர் என்னுடைய தம்பியின் வகுப்பு ஆசிரியர் என்பது தெரிந்தது. அடுத்தநாள் அவரின் மனைவியும் எங்கள் பள்ளியில் இயற்பியல் ஆசிரியை என்பது தெரிந்தது. அவர் என்னிடமும் தம்பியிடமும் ஆர்வமாக எங்களைப்பற்றிய விவரங்களை கேட்டு அறிந்து விட்டு வேண்டுமானால் தானும் தன் மனைவியும் எங்களுக்கு டியூஷன் எடுப்பதாக சொன்னார். ஆகா, இந்த டியூஷனுக்குத்தான் இவர் அடி போட்டாரா! என்று தவறாக நினைத்துவிடாதீர்கள் நண்பர்களே!

தமிழ் தவிர ஏனைய அனைத்துப்பாடங்களிலும் எங்களுக்கு அனைத்து வார்த்தைகளையும் மொழி பெயர்த்து பாடம் நடத்தினார்கள் சுவாமிநாதன் சாரும் சாந்தி டீச்சரும். கணிதத்தில் "சக" என்பது பிளஸ், "சய" என்றால் மைனஸ் என்பதில் இருந்து ஆங்கில poetryயில் ஒவ்வொரு வார்த்தைக்கும் புத்தகத்தில் தமிழில் தன் கைப்பட எழுதித்தருவதில் இருந்து எல்லாமே அவர்கள்தான் எங்களுக்கு சொல்லிக்கொடுத்தார்கள். ஒரு ஆறு மாதத்திற்கு வாரத்தின் ஏழு நாட்களையும் எங்களுடன் செலவழித்தார்கள். அது மட்டும் இல்லை, 4 மணிக்கு பள்ளியில் இருந்து வந்து ஐந்து மணிக்கு அவர்களின் வீட்டுக்கதவைத்தட்டும் எங்களை 9 மணிக்கு வீட்டுக்குகொண்டுவந்து விடுவதும் அவர்கள்தான். நடுவில் புதன்கிழமையில் அந்த நாட்களில் ஒளிபரப்பான சிவசங்கரியின் கதையில் ரகுவரன் நடித்து ஒரு தொடர் வந்ததே "ஒரு மனிதனின் கதை" அதைப்பார்ப்பது அவர்கள் வீட்டில்தான். ஆனால் வெள்ளிக்கிழமை ஒலியும்ஒளியும் பார்க்க விடமாட்டார், தானும் பார்க்கமாட்டார்! என்னடா இவள் இப்படி ஒரு ஆசிரியரைப்பற்றி இவ்வளவு எழுதுகிறாளே(புகழ்கிறாளே!) என்று நீங்கள் நினைக்ககூடும். ஆனால் உங்களில் யாருக்காவது இப்படி ஒரு ஆசிரியர் கிடைத்து இருக்கிறாரா? கிடைத்து இருந்தால் உங்களைப்போல பாக்கியசாலிகள் யாரும் இல்லை!

என்னுடைய அருமைத்தம்பி "நெத்தலிப்பயில்வான்" என்று மரத்தடியில் பெயர் வாங்கிய அரவிந்தன் பத்தாவது வகுப்பு மெட்ரிக் பரீட்சையில் அவனும் நாங்கள் குடும்பட்த்தினரும் ஆவலுடன் எதிர்பார்த்தது போல கணிதத்தில் ராங்க் வாங்கவில்லை. மாறாக அவன் முதல் ராங்க் வாங்கியது ஆங்கிலத்தில். பள்ளிகூடத்தில் யாருமே எதிர்பாராதது இது. அவன் ராங்க் வாங்குவான் என்றே யாரும் எதிர்பார்க்கவில்லை. அவன் வகுப்பில் கூட பேசமாட்டான். அவன் இருக்கிறான் என்றே ஆசிரியர்கள் பலருக்குத்தெரியாது. எல்லாரும் அல்லோக கல்லோக பட்டுக்கொண்டிருந்தபோது எனக்குத்தெரியும் இப்படி நடக்கும் என்பது போல பார்த்துக்கொண்டிருந்தார் சுவாமிநாதன் சார். என்னுடைய அப்பா ஆறு மாதம் கழித்து வந்ததும் சென்றுபார்த்த முதல் ஆள் சுவாமிநாதன் சார்தான். இன்னும் எங்கள் வீட்டில் சார் குறிப்பெழுதிய ஆங்கில புத்தகத்தை வைத்திருக்கிறேன்.

அடுத்தது, என்னுடைய பத்தாம் வகுப்புக்கணக்கு வாத்தியார் Mr. Tiller. எங்கள் பள்ளியின் உப தலைமையாசிரியரான அவர் ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பில் நான்கு பிரிவில் ஒரு பிரிவிற்குப் பாடம் நடத்துவார். எல்லாரும் எந்த வகுப்புக்கு அவர் வருவாரோ என்று பயத்துடன் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். நானும் அப்படித்தான் பயத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தேன். தூரதிஷ்டவசமாக (???) எங்கள் வகுப்புக்கு வந்தார். நாங்கள் கணக்கில் புரியாமல் விடும் தவறுகளைப்பொருட்படுத்தாத அவருக்கு இந்த careless mistake விட்டாலே சாமி ஏறிவிடும். பிரம்பினால் அடி பசங்களும், காதில் சவ்வு மாதிரி இருக்கும் பகுதியில் லேசாக நிகம் வளர்ந்து இருக்கும் விரல்களால் ஒரு கிள்ளு பெண்களும் வாங்குவோம். நானும் அவரிடம் 3 முறை வாங்கிக்கட்டிக்கொண்ட பிறகுதான் அவர் சொல்லுவது போல எல்லா எண்களுக்கும் "+/-" போடத்தொடங்கினேன். அவர் அவ்வாறு செய்ய சொன்னதற்கான காரணமும் இன்னமும் நன்றாக நினைவு இருக்கிறது. எல்லா எண்களுக்கும் "+/-" போட்டுப்பழகி விட்டால் பிறகு "-" போடமறக்கமாட்டோம் என்று சொன்னார். மேலும் ஒன்பது மணிக்கு மற்ற எல்லாருக்கும் வகுப்புத்தொடங்கும். ஆனால் எங்களுக்கு மட்டும் எட்டு மணிக்கே cycle test என்று தினமும் எல்லா பாடங்களிலும் தேர்வு வைத்தார்கள். ஐடியா கொடுத்தது வேறு யார்? Mr. Tiller தான். அது மட்டுமல்ல வாரத்தில் மூன்று நாட்கள் எங்களுக்கு 4.30pm - 6pm கணக்கு பாடம் நடந்தது. அத்துடன் சனியன்றும் எங்களுக்கு கணக்கு வகுப்பு உண்டு.

Mr.Tiller இன்னொன்றும் செய்தார். வகுப்பில் நாற்பத்தைந்து மாணவர்களில் பத்து பேரைத்தேர்ந்து எடுத்து அவர்கள் வீட்டிற்கும் போவார். அடையாறு, டி. நகர் என்று தொலைவில் இருக்கும் மாணவர்கள் வீட்டிற்கும் விசிட் உண்டு. எப்ப யார் வீட்டுக்கு வருவார் என்றே தெரியாது. phew... அவர் இப்படி விசிட் அடிக்கத்தொடங்கியபிறகு எங்களைப்போல் ஒழுங்குபிள்ளைகளை நீங்கள் பார்த்தே இருக்க மாட்டீர்கள். பின்ன, வீட்டில இதுதான் சாக்கு என்று நாங்கள் செய்யுற கூத்தையெல்லாம் report பண்ணிருவாங்களே! எங்கள் வீட்டிற்கு வந்து தட்டிய அன்று கதவு திறந்தது நான்தான். பேய் அறைந்தது மாதிரி நின்ற என்னை "என்ன சந்திரமதி, டிவியா பார்க்கிறாய்?" என்று சிம்மகுரலில் கேட்டார். டிவி இல்லை sir என்று நான் சொன்னதும் என்னுடைய அம்மாவை புகழ்ந்து விட்டுப்போனார். நான் எத்தனை மணிக்கு எழுந்து கொள்கிறேன், என்ன என்ன செய்கிறேன் என்றெல்லாம் கேள்வி. சிபிஐகாரன் கெட்டான் போங்கள்! ஒரு நாள்தான் வருவார் என்று தப்புக்கணக்கு போடாதீர்கள். எனது வீட்டிற்கு எத்தனை முறை வந்தார் என்பது எனக்கு ஞாபகத்தில் இல்லை. ஆனால் அவர் வந்து விசிட் அடித்த மாணவர்கள் எல்லாமே 190க்கு மேல் மார்க் வாங்கினோம். எனக்கு கணக்கு I ல் 99ம், கணக்கு IIல் 93ம் மார்க் கிடைத்தது. என்ன ஆனது கணக்கு Iல் என்று கேட்டார். அவரிடம், இரண்டு மார்க் வரும் ஒரு கணக்கில் square root of 1 = 1தான் என்பது முப்பது நிமிடங்களாக மனதில் தலைகீழாக நான் குட்டிக்கரணம் போட்டும் தோன்றவில்லை என்று நான் அப்பாவிடம் வந்து புலம்பியதை, அப்பா அவரிடம் சொல்லி விட்டார். திட்டு விழப்போகுது என்று பயந்துபார்த்துக்கொண்டு இருந்த எனக்கு இன்னமும் Tiller sirன் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை மறக்கமுடியவில்லை!

Wednesday, July 02, 2003

மார்கழித்திங்கள்



பொதுவாகவே எனக்கு மார்கழி மாதம் மிகவும் பிடிக்கும். சென்னைக்கு வந்த பிறகு மார்கழி மாதம் எப்போது வரும் என்ற ஆர்வம் அதிகரித்தது. அதற்குக்காரணம் இசைவிழா கூடவே அண்ணாநகரில் இருக்கும் ஐயப்பன் கோயிலில் K.J.ஜேசுதாஸின் கச்சேரி. இவையெல்லாம் இப்போதும் நினைவில் வந்து போகிறது. ஆனால் இங்கே நான் பேசப்போவது புங்குடுதீவில் மார்கழி நாட்கள் கூடவே இன்னொரு கோயிலில் பொங்கல் பொங்கிய நினைவுகள்....

எனக்குத்தெரிஞ்சு எங்கட ஊரில இருக்கிற கோயில்கள்ல விஷ்ணுவுக்கோ, லட்சுமிக்கோ,அனுமாருக்கோ சன்னிதி இருக்கேல்ல. ஆனா, வீட்டில லஷ்மியைக்கும்பிட்டனாங்கள் அதே மாதிரி அனுமாரையும். ஆனால் எங்கட வீட்டு சாமியறையில விஷ்ணு படம் இருந்தமாதிரி எனக்கு நினைவில்ல. ஊரில் எங்கட வீட்டுக்குப்பின்னுக்கு கொஞ்ச தூரத்தில ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு - பெரியபுலம் பிள்ளையார் கோயில். வடக்கால ஒரு 3-4 மைலுக்கு அங்கால இன்னொரு பிள்ளையார் கோயில் இருக்கு - அரியநாயகன் புலம் பிள்ளையார் கோயில் - இந்தக்கோயில் கொடிமரம்தான் தாத்தா கொண்டு வந்தது. தெக்கால ஒரு 4 மைலுக்கு அங்கால ஒரு அம்மன் கோயில். அங்கேருந்து இன்னும் 2 மைல் தூரத்தில ஒரு முருகன் கோயிலும் கொஞ்சம் தள்ளி ஒரு சிவன் கோயிலும் இருக்கு. பிறகு எங்கட வீட்டுல இருந்து ஒரு 4-5 மைல் தூரத்துல மாரிகாலத்தில தீவாகிற இடத்தில - பேர் கூட கேரதீவு - அங்க ஒரு ஐயனார் கோயில் இருக்கு. சுத்திவர சவுக்குத்தோப்பு. எப்பயாவதுதான் திருவிழாவுக்கு ஆக்கள் போறவையாம். மாட்டை 1-2 மாசத்துக்கு மேச்சலுக்கு அவுத்து விட்ட அங்க தான் போகும் மற்றபடி அங்க ஆக்கள் இருக்கிறதில்லை எண்டு அம்மம்மா சொல்லியிருக்கிறா. அந்தக்கோயிலுக்கு பொங்கல் பொங்குறதுக்குத்தான் சனம் போறதாம். இப்படி எங்கயாவது கூட்டமா போனாத்தான் எங்கட வீட்டில மாட்டு வண்டி வைச்சிருக்கிற தாத்தாட்ட சொல்லி விட்டிருவினம். வண்டில்ல மேல கூரை இருக்காது. இதே மாட்டு வண்டிதான் எங்கட பனைத்தோப்புக்கு போய் பனையோலை, தேங்காய் எடுத்தண்டு வரேக்க பிடிக்கிறது. ஆனா, போகேக்க மட்டும்தான் வண்டில்ல போகலாம். வரேக்க 'நடராசா'தான்.
இப்படி மாட்டுவண்டில்ல படுத்துக்கிடந்தண்டு வானத்தில இருக்கிற சந்திரனோட உங்களில எத்தனைபேர் ரேஸ் ஓடியிருக்கிறியள்? கேரதீவுக்கு போயிற்று வரேக்க மட்டும்தான் எங்களுக்கு இந்த அனுபவம் கிடைக்கும்.

கேரதீவு ஐயனார் கோயில் சின்னக்கோயில்தான். மற்றக்கோயில்களில் இருக்கிறமாதிரி ஐயரையெல்லாம் நான் கண்டதில்லை. பொங்கல் பானை வைக்கேக்க ஒரு இலையானும்(ஈ தான்.) இருக்காது ஆனால் பொங்கி முடிக்கேக்க எங்க இருந்து வருவினமோ தெரியாது ஆக்கள் வந்து சேர்ந்திடுவினம். பூசாரியும் வந்திருவேர். நாங்க ஒரு 2-3 மணிக்கு வெளிக்கிட்டா வீட்ட பொங்கல் பானை இறக்குறதுக்கு ஒரு 5 மணி ஆயிரும். ஆக்களுக்கெல்லாம் புக்கையை கொடுத்திட்டு நாங்க வெளிக்கிடேக்கிள்ள இருட்டிரும். அம்மம்மா அல்லது சித்தின்ர கைய விடமாட்டன் வீடு வந்து சேரும் வரைக்கும். எனக்கு கோயிலுக்குள்ள கவனமில்லை. என்ர கவனமெல்லாம் சுத்தி இருக்கிற சவுக்குத்தோப்பிலதான். அதுவும் அப்ப எல்லாம் தமிழ்வாணனின் 'சங்கர்லால் துப்பறியும் கதைகள்' வாசிச்ச வயசு. என்ன எல்லாம் நினைச்சண்டு இருந்திருப்பனெண்டு உங்களுக்கே தெரியும். இங்க தான் நான் முதல் முதலா கலை வாறதப்பார்த்தனான். சும்மா நிண்டண்டு இருந்த ஒரு மனுசி ஒண்டு இருந்தாப்போல ஆடத்தொடங்கிற்றா. தலைமயிர் எல்லாம் கழண்டு தலையை சுழட்டி சுழட்டி ஆடத்தொடங்கினா. சில பேர் அவட கையில வேப்பிலைய கொடுத்தவை. கொஞ்ச நேரம் ஆடிட்டு அவ பூசாரி வந்து திருநூறு குடுத்தோடன சரிஞ்சு விழுந்திட்டா. சரியான வேர்வை அவவில.

இதே மாதிரி இன்னொரு நாள், பெரியநாயகன் புலம் கோயில்ல ஏதோ திருவிழாக்கு போயிற்று நானும் ஒரு பக்கத்தில நிண்டனான். திடீரெண்டு பாருங்கோ... எனக்கு பக்கத்தில் இருந்த மனுசி கலை வந்து ஆடத்தொடங்கி விட்டா. எனக்கு கையும் ஓடேல்ல காலும் ஓடேல்ல. நல்ல காலம் கொஞ்ச தூரத்தில நிண்ட சித்தி வந்து தனக்குப்பக்கதில என்னை இருத்தினவ.

எங்கட ஊரில மார்கழி மாசத்தில காலம 5 மணிக்கு தெருவில கன பேர் பாட்டுப்பாடியண்டு போறதை கேட்டுட்டுதான் என்ர அம்மம்மாட்ட காலைல யாரு பாட்டுப்பாடியண்டு போகீனம், ஏன் பாடீனம் எண்டெல்லாம் கேட்டனான். அவவும் மார்கழி மாசத்தில இப்படித்தான் சனம் பாடியண்டு போவினம். அவை பாடுறது திருவெம்பாவை எண்டும் சொன்னவ. அண்டைக்கு அவவையும் அம்மாவையும் அரிக்கத்தொடங்கினதுதான். ஒரு வருசமா அரி அரி எண்டு அரிச்ச பிறகுதான் என்னையும் போக விட்டவை. ஆனா, நானா எழும்பி நானே யாரையும் துணைக்கு கூப்பிடாம கிணத்தடில குளிச்சுட்டு போகோணும். தங்களை யாரையும் துணைக்கு கூப்பிடக்கூடாது எண்டும் சொல்லிட்டினம். எனக்கு இதுவே பெரிய விசயம். நான் இவைட்ட வீட்டில ஒண்டும் கதைக்கேல்ல. ஆனா பள்ளிக்கூடத்தில யாராவது கூட வருவினமா எண்டு பார்த்தா அதில நிறைய பிரச்சனை. சில பேருக்கு விருப்பம் இல்லை. சில பேரின்ட வீடு தூரத்தில இருந்துது. கடைசியா என்னட்ட மாட்டுப்பட்டது என்ர வீட்டுக்கு முன் வீட்டில இருக்கிற கீதாதான். எனக்கு அவ மச்சாள் முறை. அவட அம்மா வேலியடியில வந்து நிண்டு "மச்சா.........ள்" எண்டு என்ர அம்மாவை ராகம் பாடி கத்தி கூப்பிடுறது நாங்க புங்குடுதீவு போன புதுசில எங்களுக்கு சிரிப்பு. ஆனா கீதாவும் அவளின்ட மூண்டு தம்பிகளும்தான் எங்களுக்கு விளையாட்டுத்துணை.

மார்கழி பத்தி எழுதப்போறன் எண்டு நான் அப்பாட்ட சொன்னோடன அவர் தன்ர சின்ன வயசு மார்கழி அனுபவங்கள் பத்தி சொல்ல தொடங்கிட்டேர். என்ர பாட்டி என்ர அப்பாக்கு 9 வயசு இருக்கேக்கயே செத்துப்போயிற்றா. அவவை நாங்கள் அப்பம்மா எண்டுதான் கூப்பிடோணும். ஆனா கூப்பிட ஆள் இல்லை எண்டபடியா பாட்டி எண்டுதான் சொல்லுறனாங்கள். பாட்டி இறந்த பிறகு, அப்பா, மூண்டு தம்பிமார், அக்கா இவ்வளவு பேரையும் வளர்த்தது தாத்தாவின் அம்மா, மற்ற வேற சில பெத்தாச்சிமார்தான் எண்டு அப்பா சொல்லுவேர். அப்பாவுக்கே பாட்டி எண்டா எனக்கு?!

சரி, சரி, கதைக்கு வாறன். காலைல 4 மணிக்கு எழுப்பி விட்டுருவாவாம் அப்பா, சித்தப்பாமாரையெல்லாம் பெத்தாச்சி. மாமி ஹொஸ்டல்ல எண்ட படியா தப்பினா எண்டு அப்பா சொல்லுவேர். குளிர குளிர குளிச்சுட்டு எல்லாரும் பெத்தாச்சியோட பெரியநாயகன்புலம் பிள்ளையார் கோயிலுக்கு நடந்து வருவினமாம். அப்பேக்க, அரியநாயகன்புலம் பிள்ளையார் கோயில் இல்லையெண்டு அப்பா சொன்னவர். பிறகு அரியநாயகன்புலம் பிள்ளையார் கோயிலடிக்குப்பக்கத்தில தான் அப்பாவைட வீடு. நான் அங்க இருந்த காலத்தில மாதிரி இல்லாம, முந்தி எல்லா காணிகளும் வயல் வெளியாக நெல்,சாமை,வரகு, குரக்கன் தானிய வயல்களாக இருந்தது எண்டு சொன்னேர். ஆன ரோட்டும் இல்லை(ஒழுங்கான பாதை). இருட்டில 5 மணிக்கு வயல் வரப்பில விசுக் விசுக் எண்டு நடக்கிற 'பெத்தாச்சி'க்கு பின்னுக்கு தாங்க எல்லாம் எங்கனக்க பாம்பு கிடக்குதோ? எங்க மிதிக்கபோறமோ எண்டு பயந்தண்டே போனதெண்டு சொன்னவர். அங்க கோயில்ல எல்லாரும் திருவெம்பாவை பாடுவினம். திருவாசகம், தேவாரமும் பாடுவினம். ஆனா தாங்க எல்லாம் எப்படா பூசை எல்லாம் முடிச்சு நைவேத்தியம் கொடுப்பினம் எண்டு ஆவெண்டு பார்த்தண்டு நிக்கிறது எண்டு சொன்னேர் அப்பா. நைவேத்தியத்தில தாற சுண்டல் மாதிரி தான் இன்னும் எங்கயும் சாப்பிடேல்ல எண்டும் சொன்னேர். கோயில்ல இருந்து வீட்டுக்குப்போய் புத்தகத்தை தூக்கியண்டு பள்ளிக்கு வெளிக்கிட்டுருவம் எண்டு சொல்லி அப்பா தன்ர கதையை முடிச்சேர்.

இப்ப என்ர முறை. நானும் ஒரு வழியா கீதாவை என்னோட வரும்படி மூளைச்சலவை செய்திட்டனா! அதுக்குப்பிறகுதான் பிரச்சனையே. என்னண்டு காலமை எழும்புறது. வீட்டில ஒரு சனமும் உதவி செய்ய மாட்டனெண்டு சொல்லிப்போட்டுதுகள். எங்கேயோ கிடந்த அலாரம் மணிக்கூட்டை கொண்டு வந்து வச்சு 4.30 மணிக்கு சித்திய விட்டு அலாரமும் வச்சண்டு, அறைக்குள்ள படுத்தா எழும்புறது கஷ்டம் எண்டு விறாந்தையில (veranda) படுத்தனான். கீதாட்டயும் எழும்பின உடன வந்து எழுப்புறன் உடன குளிக்க எல்லா ஆயத்தமும் செஞ்சுட்டு படுக்க சொல்லி சொல்லிட்டன். நானும் கிணத்தில இருந்து தண்ணி எல்லாம் குளிக்க எடுத்து வச்சனான். காலம கெதியா எழும்போணும் எண்டு வெள்ளன படுத்தனான். காலம எழும்பி பார்த்தா நேரம் 6.30 மணி. ஓடிப்போய் பின்னுக்குப்பார்த்தா அம்மம்மா, மாட்டில பால் கறந்தண்டு இருந்தா. என்ன நடந்தது, அலாரம் அடிக்கேல்லயே எண்டு கேட்டா, தனக்கு தெரியாது அலாரம் மணிக்கூடு பத்தி எண்டு சொல்லிட்டு அவ பால் கறந்தண்டு இருந்தா. வீட்டுக்குள்ள வந்து பார்த்தா, மணிக்கூடு ஓடியண்டு தான் இருந்தது. வீட்டில இருக்குற ஆக்களுக்கு எல்லாம் என்னக்கண்டு ஒரு இளிப்பு வேற.....

அண்டைக்கு இரவு, கீதாட்ட சொல்லிட்டு, நானும் அவ சொன்னபடி செஞ்சுட்டு படுத்தன். என்ன செஞ்சனானெண்டு கேக்கிறீங்களா? ஒரு பெரிய டின்னை எடுத்து அதால அலாரம் மணிக்கூட்டை மூடச்சொன்னா கீதா. நானும் பால்மா டின்னுக்குள்ள அலாரமை வச்சனான். அலாரம் அடிச்சது, ஆனா நாந்தான் எழும்பேல்ல எண்டு எங்கட வீட்டுல இருக்கிற அம்மம்மாவின்ர புத்திர செல்வங்கள் - அதான் அம்மாவும் சித்தியும் முதல் நாள் இளிச்சண்டு சொல்லிச்சினம். எனக்கு அவய நம்பவும் முடியேல்ல, நம்பாமயும் இருக்கவும் முடியேல்ல. சரி, அடுத்த நாள் என்ன நடந்ததெண்டு நினைக்கிறீயள். 'பழய குருடி கதவ திறடி' கதைதான். அம்மம்மாட்ட என்னைக்கு அடுத்த நாளாவது அவ எழுப்பி விட வேணும் எண்டு நான் சண்டை போட்டு சொல்லிட்டன்.

அப்பாடா, கட்டக்கடசியா மூண்டாம் நாள் அம்மம்மா எழுப்பி விட்டவ. என்ன எழுப்பிற்று கீதாவையும் எழுப்பி விட்டவ. நாங்களும் 5 மணிக்கு, பாம்புக்கு பயந்து பயந்து கொஞ்சம் மல்லிகைப்பூவையும் செம்ம்பருத்தி பூவையும் பறிச்சண்டு நிண்டனாங்கள். அம்மம்மா, எங்கள அந்த ஆக்களோட சேர்த்து விட்டுட்டு நித்திரை கொள்ளப்போய் விட்டா. குளிரெண்ட அப்படி ஒரு குளிர். ஆனா, ஒரு சுவெட்டர் தந்தபடியா ஒரு மாதிரி நாங்களும் திருவெம்பாவையை ஒரு ஆள் ஒரு வரி பாட, மற்ற ஆக்கள் திருப்பி சொல்லியண்டு போனனாங்கள். திருவாசகம், தேவாரம் வேற கொஞ்ச பாட்டுகள், திருப்புகழ் எல்லாம் பாடிச்சினம். எங்களுக்கு இது முதல் தரமெண்ட படியா எல்லாத்தையும் வாய ஆவெண்டு திறந்தெண்டு பார்த்தண்டு போனனாங்கள். கோயிலுக்கு போனோடன நாங்க கொண்டந்த பூக்களை கொடுத்துட்டு, சுண்டல், வடை,பஞ்சாமிர்தம், புக்கை,(சக்கரைப்பொங்கல்) வெள்ளைப்புக்கை (வெண்பொங்கல்) எல்லாத்தையும் கவனமா பாத்தண்டு, அப்பப்ப சிவபெருமானையும் பார்த்தனாங்கள், நானும் கீதாவும். ஒரு மங்கிய விளக்கு ஒளியில் சிவன் சிலை இன்னும் ஞாபகம் இருக்கு... வீட்டுக்கு கன கம்பீரமா, சுண்டல் கொண்டு வந்தனான்..... கதை அங்க முடியேல்ல. :)

ஆனா, அடுத்த 4 நாள் எனக்கு சரியான காச்சல். நல்ல வீட்டில சாத்துப்படி (வேறென்ன....... திட்டுதான்) வாங்கினாலும் அந்த வருஷ மார்கழி மாதம் மறக்க முடியாதது.