Thursday, April 29, 2004

நீள நடக்கின்றேன்

வீடு என்பது 'நான் அந்த நேரத்தில் இருக்கும் இடம்' என்ற சிந்தனை மனதில் வேரூன்றிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. சொந்த வீடு என்பதையே இப்படிக்கொண்ட என்னிடம் சொந்த நாடு பற்றிக் கேட்காதீர்கள். அது, இதுவரை நான் இருந்த நாடுகள் எல்லாமே இனி போகப்போகும் நாடுகள் மற்றும் - ஒரு நாள் தங்கிய சிங்கப்பூரானாலும் சரி, பல வருடங்கள் வாழ்ந்த இந்தியாவானாலும் சரி. எல்லாமே சொந்த நாடு.


'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டாலும், மனதில் தங்கியிருக்கும் ஊர் புங்குடுதீவு. என்னுடைய பெற்றோர், உற்றார் உறவினரின் ஊர். நான் அங்கே இருந்தது மொத்தம் ஏறக்குறைய இரண்டு வருடங்கள். ஆனாலும், என்னால் மறக்க முடியாத ஊர் அது. அதன் சுவடுகளை, இப்போதும் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். நான் பல வருடங்களுக்கு முன்பு விட்டுவிட்டு வந்த புங்குடுதீவு இப்போது இல்லை. இடிபாடுகளுக்கு இடையே இருக்கும் கோலத்தைப் பார்க்க எனக்கு தைரியம் இல்லை. அங்கே போய் வந்த உறவினர்கள் கொண்டு வந்த புகைப்படங்களையோ, வீடியோப்படங்களையோ நான் பார்த்ததில்லை. பார்க்க விருப்பமும் இல்லை.


வாயூவேகம் மனோவேகம் என்று சொல்வார்கள். அந்த மனோவேகத்தில், அடிக்கடி நான் என்னுடைய பழைய புங்குடுதீவுக்குப் போய் வருவேன். இன்றைக்கு நீங்களும் என்னோடு வருகிறீர்களா?


இங்கே ஒரு விசயம் உங்களிட்ட சொல்லோணும். நான் வெளிக்கிட்டு நிறைய வருசங்கள் ஆயிற்றுது. அதே போல நான் புங்குடுதீவுக்கு கொழும்பிலேருந்து போயும் அதைவிட நிறைய வருஷங்கள் ஆயிற்றுது. அதனால, அங்க அங்க தடங்கல்கள் வரலாம். சில இடங்களில நான் இந்தப் பயணத்தில இருந்து விலத்திப்போய் வேற கதைகள் கதைக்கலாம். விடுப்புப் பார்க்கலாம். போகப்போகத் தெரியும் என்ன நடக்குது எண்டு.


என்ன வாறீங்களா?

Wednesday, April 28, 2004

அமெரிக்க/ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் தமிழ்

வலைப்பூவில் கண்ணன் தான் சந்தித்த ஜேர்மன் தமிழ் ஆராய்ச்சியாளரைப் பற்றி எழுதி இருந்தார். கடந்த சில வருடங்களில் நான் பார்த்த தமிழ் கற்றுத்தரப்படும்/ஆராய்ச்சி செய்யப்படும் பல்கலைக்கழக சுட்டிகளை இங்கே தருகிறேன். இதையும் விட நிறைய இருக்கலாம். ஏதாவது விடுபட்டிருந்தால் சொல்லுங்கள் தெரிந்துகொள்கிறேன்.


http://www.uni-koeln.de/phil-fak/indologie/kolam/frame.html


http://tamil.berkeley.edu/ http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/


http://www.lsa.umich.edu/asian/language/tamil.html


http://www.afro.uu.se/kurser/tamil.html


http://www.helsinki.fi/hum/aakkl/d_s-asia_research.html


Tuesday, April 27, 2004

'எழுத்தாளருடன் கொஞ்ச நேரம்' - மரத்தடி

கடந்த இரண்டு மாதங்களாக 'எழுத்தாளருடன் கொஞ்ச நேரம்' என்ற ஒரு நிகழ்ச்சியை மரத்தடியில் நடத்தி வருகிறோம். ஜெயமோகன், மனுஷ்யபுத்திரனைஐத் தொடர்ந்து 'பரீக்ஷா' ஞாநி பங்கேற்கிறார். விருப்பமுள்ளவர்கள் மரத்தடிக்குழுவில் சேர்ந்து கேள்விகளைக் கேட்கலாம்.

Wednesday, April 21, 2004

சந்தர்ப்ப சூழ்நிலைகள்

இலங்கைக்காரர்களே கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்கள். நீர் ஏன் இப்படி மாய்ந்து மாய்ந்து எழுதுகிறீர்கள் என்று ஒருவர் இன்று ரமணிதரனைக் கேட்டதைப் படித்தேன்.

என்னைப்பொறுத்தமட்டில் இப்போது ரமணி செய்வது மிகவும் பயனுள்ள விஷயம். என்னால் இதுபோன்ற ஒரு விஷயத்தை செய்ய முடியாது. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. தனிப்பட்ட காரணங்கள் தவிர்த்து முக்கியமான ஒரு விஷயம். இந்தியாவில் மனித உரிமை என்பது சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பது. நான் நீட்டி முழக்கி எழுதி, அதனால் என் உற்றார் உறவினருக்கு பிரச்சினை வரக்கூடாது. வராது என்று இங்கு யாராலும் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது.

ரமணிக்கே, என் மீது வருத்தம் கோபம் இருக்கும். என்னடா, எல்லா விஷயமும் எழுதுகிறாளே. எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறாளே. இதில் மௌனசாமியாகி விடுகிறாளே என்று. நிலமை அப்படி ரமணி. என்ன செய்ய? சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரிவரும்போது பார்க்கலாம். அதுவரை, திரித்து வரும் செய்திகளைப் படிக்காமல் இருப்பதுதான், என்னால் முடிந்தது.

Tuesday, April 20, 2004

Say Cheese





மேலே நீங்கள் பார்ப்பது St.Denis தெரு. Latin Quarterஇல் இருக்கிறது. கோடை காலத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கும் இத்தெருவில் வரும் மே முதலாம் தேதியில் இருந்து ஆகஸ்ட் முப்பதாம் தேதி வரை காமெராக்கள் பொருத்தப்போகிறார்களாம். தூள் விற்பனை இந்தப் பகுதியில் மிகவும் அதிகரித்திருப்பதாகவும், அதனால், வாடிக்கையாளர்கள் இப்பகுதியிலிருக்கும் க·பேக்கள், உணவுவிடுதிகள், பார்களுக்கு
வருவது குறைந்துவருவதாக சொல்கிறார்கள்.



அதே நேரத்தில் இம்மாதிரி காமெராக்கள் வைப்பது மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற விவாதமும் சூடாக நடைபெறுகிறது. சில வருடங்களுக்கு முன்பு, நகரின் மத்தியபகுதியில் இம்மாதிரி காமெராக்களை நிறுவி, மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல் நீக்கினார்களாம்.



St.Denis தெரு downtownக்குப் பக்கத்தில் இருக்கிறது. ஒரு பக்கம் மியூசியங்களும், மறுபக்கம் வர்த்தக நிறுவனங்களும், இன்னுமொரு பக்கம் 'The village' என்ற Gay villageஉம் இருக்கிறது. Gay Village என்று சொன்னாலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடம் இது. ஒவ்வொரு வெள்ளி, சனி, ஞாயிறும் கூட்டம் அலைமோதும். அடுத்த அக்டோபர் மாதம் வரை மான்ரியல் ஒவ்வொரு வார இறுதியிலும் விழாக்கோலம் எடுக்கும். எதாவதொரு விழா நடந்துகொண்டே இருக்கும். இம்மாதிரி காமெராக்கள் பொருத்தினால், கூட்டம் குறைந்துபோகும் என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். இன்னும் சிலரோ, St.Denis தெருவில் காமெராக்கள் பொருத்தினால், சுற்றிலும் இருக்கும் சின்னத் தெருக்களுக்கு தூள் வியாபாரம் நகர்ந்து செல்லும். அதனால் என்ன பிரயோசனம் என்கிறார்கள். இன்னும் சிலரோ வான்கூவரில் சில வாரங்களுக்கு முன்பு போதைப்பொருள் உபயோகிப்பவர்களுக்காக வான்கூவர் நகர மேயர் ஊசிகளைக் கொடுக்கிறார். அதுபோல இங்கும் சில அதிகாரபூர்வமான இடங்களை ஒதுக்கலாம் என்கிறார்கள்.

(வான்கூவரில் போதைப்பொருள் உபயோகிப்பவர்களுக்கு ஊசிகளை நகரமே சில பிரத்தியேக இடங்களில் கொடுக்கிறது. இதனால், போதைப்பொருட்களை சுத்தமில்லாத ஊசி பயன்படுத்தி இறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறையும் என்று வான்கூவர் நகர மேயர் எதிர்பார்க்கிறார். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. ஐரோப்பாவில் சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இம்மாதிரியான இடங்கள் பல வருடங்களாக இருக்கின்றனவாம்.)

என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Friday, April 16, 2004

மெட்டியொலி காற்றோடு...

நிறைய நாட்களுக்குப் பிறகு ஒரு பாட்டுக் கேட்டேன். உங்களுக்காகவும்.




நன்றி: http://www.tfmpage.com (Note:The
file is uploaded in my website.)

Hindi:



Monday, April 12, 2004

இன்னுமொரு தமிழ் யூனிகோடு எழுத்துரு.

இன்றைக்கு இன்னுமொரு தமிழ் யூனிகோடு எழுத்துருவைப் பார்த்தேன். பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.

http://www.sooriyan.com/font/

Saturday, April 10, 2004

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

வக்கீல்களும் அவர்களின் வாதத்திறமையும் என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம். தங்கள் பேச்சு வல்லமையினால், வக்கீல்கள் சாதிப்பதையும் நான் சினிமாவிலும், அமெரிக்க தொலைக்காட்சிகளிலும் நாவல்களிலும் கண்டு வியந்திருக்கிறேன். சொல்லப்போனால், இம்மாதிரியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மீது போனவருடம் வரைக்கும் அடிக்ட் ஆகி இருந்தேன். அது Jag ஆகட்டும், Law and Orderஉம் அதன் பல்வேறு விதமான வடிவங்களாகட்டும், ஒன்றையும் விட்டதில்லை. அதே போல திரைப்படங்களிலும் வக்கீல்கள் சம்பந்தப்பட்ட படங்கள் இன்றும் என்னுடைய மிகவும் விருப்பமான படங்கள் பட்டியலில் இருக்கிறது. அவற்றில் மறக்கமுடியாதது To Kill a Mockingbird.

சமீபகாலமாகவே என்னை அரித்துக்கொண்டிருக்கும் கேள்வியை நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். இதோ உங்களிடமும் இப்போது.

வழக்குகளில் இரு தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகி வாதாட வேண்டும். கொலை, கொள்ளை வழக்குகளிலும் குற்றவாளிக்காகப் பேச ஒரு வக்கீல் இருப்பார். பணம்படைத்தவர்களால் கொண்டுவரப்படும் வக்கீல், அதற்கேற்றமாதிரி வழக்கிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்தும் விடுவார். எனக்கு கிரிமினல் வக்கீல்கள் யாரையும் தெரியாது. இல்லையென்றால் அவர்களின் உணர்வுகள் பற்றிய என் கேள்விகளைக் கேட்டிருப்பேன். எப்படியும், வக்கீல்களுக்கு அது கிரிமினல் வழக்கோ, சிவில் வழக்கோ தான் வழக்காடும் நபர் உண்மையிலேயே குற்றம் இழைத்தவர் என்று தெரிந்துகொண்டே வாதாடுவார்கள். எதையும் மறைக்கவேண்டாம், அப்போதுதான் தம் பணியை சரியாக செய்யமுடியும் என்றெல்லாம் வக்கீல்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

தவறிழைத்தவர்கள் - அதுவும் மக்களைப் பாதிக்கும் அளவு குற்றம் செய்தவர்களை, மனதறிந்து கட்சிக்காரராக ஏற்று வழக்கில் முழுமுனைப்போடு எப்படி செயல்படுகிறார்கள் என்று நான் வியப்பது ஒரு புறமிருக்க... இந்த வக்கீல்கள் தொழில்நேரம் போக மற்ற நேரங்களில் எப்படி செயல்படுவார்கள்? தம் சாட்சிக்காரர் என்ன தவறிழைத்திருந்தாலும், அதைப்பற்றிய தம் எண்ணத்தை ஒதுக்கிவிட்டு கோர்ட்டில் வாதாடுவதுபோலவே நிஜத்திலும் நடந்து கொள்கிறார்களா?

உலகம் பூராவும் ஏன் வக்கீலுக்குப் படித்தவர்களே பெரும்பாலும் அரசியலில் ஈடுபடுகிறார்கள்?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Friday, April 02, 2004

Mobile MT blog service (free)

'மூவபிள் டைப்' வலைப்பதிவுகள் சொந்த இடம் வைத்திருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஒன்று என்ற நிலை மாறி இப்போது http://weblogs.us J.Dஉம், http://blog.yarl.net சுரதாவும் வழங்கி உதவுகிறார்கள்.

இவர்களைப்போலவே http://mblog.com உம் இலவசமாக 'மூவபிள் டைப்' வலைப்பதிவு சேவையை அளிக்கிறார்கள். இவர்களின் சேவை இன்னுமொரு விதத்தில் வித்தியாசமானது, வரவேற்கத்தக்கது!

செல் போனிலிருந்தும் வலைபதியலாம். இதையே இவர்களின் வலைப்பக்கமும் முன்னிறுத்துகிறது.

விரும்பியவர்கள் முயலலாமே?


Thursday, April 01, 2004

Moved my 'M o v i e t a l k ' Blog to MT

என்னுடைய 'திரைப்பார்வை'
வலைப்பதிவை சுரதாவின் yarl.netகு மாற்றி விட்டேன். 'மூவபிள் டைப்' மிகவும் வசதியாக
இருக்கிறது. திரைப்படங்களைப் பற்றியது என்பதாலோ என்னவோ, கை ஜிகினா வண்ணங்களையே
நாடியது. அம்சமான கலர் போட்டிருக்கேன். :)))

என்னை மாதிரியே 'மூவபிள் டைப்'க்கு மாறி இருக்கும் இன்னொருவர் href="http://uyirppu.yarl.net/" target=_ca>சந்திரலேகா. ஆஸ்திரேலியாவில்
இருந்து வலைபதியும் இவர், பல அருமையான கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.
இன்றைக்கும் 'ஈஸ்டர் பண்டிகை'யைப் பற்றி அருமையாக விரிவாக எழுதி
இருக்கிறார்.