Friday, October 31, 2003

கர்நாடக இசைமேதை செம்மங்குடி ஸ்ரீநிவாச அய்யர் அமரரானார்



Semmangudi Srinivasa Iyer

கர்நாடக இசைமேதை செம்மங்குடி ஸ்ரீநிவாச அய்யரைப்பற்றி லலிதா (ராமச்சந்திரன்) மரத்தடி குழுவில் எழுதியது

செம்மங்குடி அவர்களுடைய பேட்டி இதோ

சங்கீதகலாநிதி செம்மங்குடி ஸ்ரீநிவாச அய்யரவர்களின் குரலில் கேளுங்கள்: தீ‡¢தரின் 'வாதபி கணபதிம்', நீலகண்ட சிவனின் 'ஆனந்த நடனம் ஆடுவார் தில்லை'.

செம்மங்குடி அவர்களின் பாடல்களை கேட்க சுட்டுங்கள்.

Thursday, October 30, 2003

நேரமோ நேரம்! - 2



அந்தக்காலத்தில் தமிழர்கள் எப்படி நேரத்தை துல்லியமாகக்கணித்தார்கள்? எனக்குத்தெரியாது. உங்களில் யாருக்காவது பஞ்சாங்கம் பார்க்கத்தெரியுமா? எனக்கு அதுவும் தெரியாது. என்னுடைய வயதொத்த சில உறவினர்களுக்கு பஞ்சாங்கம் பார்க்கத்தெரியும். சரி நேரத்திற்கு வருகிறேன். நிச்சயம் நமக்கு நேரத்தை துல்லியமாகக்கணிக்கத்தெரிந்திருக்கவேண்டும். சோதிடர்களைப்பார்த்திருப்பீர்கள்.

எனக்குத்தெரிந்த நேரத்தைக்குறித்த தமிழ்வார்த்தைகள்:


கால அளவு:

ஒரு நாழிகை = 24 நிமிடம்
இரண்டரை நாழிகை = ஒரு மணித்தியாலம்
மூணேமுக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்
ஏழரை நாழிகை = இரண்டு முகூர்த்தம்
ஏழரை நாழிகை = ஒரு ஜாமம்
எட்டு ஜாமம் = ஒரு நாள்
ஏழு நாள் = ஒரு வாரம்
இரண்டு பட்சம் = ஒரு மாதம்
இரண்டு மாதம் = ஒரு பருவம்
மூன்று பருவம் = ஒரு ஆயனம்
இரண்டு ஆயனம் = ஒரு வருடம்

அட, உனக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கா என்று கேட்காதீர்கள். அகத்தியர் யாகூ குழுவில் ஜேபி சானிடம் இருந்து தெரிந்துகொண்டவை இவை. இதைவிட, கோழி கூவும் நேரமும் தமிழர்களுக்கு முக்கியமான நேரமாக இருந்திருக்கிறது. பலநாட்களுக்கு முன்பு, கோழி அதிகாலையில் கூவுவது குறித்தும், அதனுடைய body clock பற்றியும் நண்பர் திலக்கிடம் பேசிக்கொண்டிருந்தேன். திலக், கொஞ்சம் இதைப்பத்தி சொல்லிப்போடுங்கப்பா...

கோழி கூவுறது பற்றிக்கதைச்சோடன எனக்கு ஊர் ஞாபகம் வந்திற்றுது பாருங்க. எனக்குத்தெரிஞ்சு எங்கட வீட்டில ஒரேயரு சேவல்தான் இருந்தது. நல்ல சிவப்பு நிறக்கொண்டையோட திரியும் அது. காலமை சூரியன் வெளிக்கிடுறதுக்குள்ள, இவர் கூவத்தொடங்கிருவேர். அப்பப்ப இரவிலயும் கச்சேரி வைப்பேர். ஊருக்குப்போன புதுசில, சேவல் கூவத்தொடங்கின உடன, அவரைப்பார்க்கிறதுக்கு எழும்பி ஓடிப்போறது ஞாபகம் வருகுது. சில வருடங்களுக்கு முன்பு, சென்னையில் இருந்தபோது, அம்மம்மாவிற்கு ஜேர்மனியில் இருந்து என்னுடைய சித்திபெண் தமிழில் தட்டுத்தடுமாறி எழுதிய கடிதத்தின் சாரம்சம் உங்களுக்காக.
.
"அம்மம்மா இப்ப இங்க நல்ல வெயில்காலம். பள்ளிக்கூடமும் லீவு. ஆனா, காலமை நல்லா நித்திரை கொள்ளலாமெண்டா அதுதான் ஏலாமக்கிடக்கு. பக்கத்தில இருக்கிற சேவல் ஒண்டு சூரியன் வந்த உடன கூவியண்டு திரியுது. ஒரு நாள், அதை குழம்பில கொதிக்கவிடுறது எண்டு இருக்கிறன்."

Sunday, October 26, 2003

நேரமோ நேரம்!



என்னுடைய அம்மம்மா, பகலோ, இரவோ வானத்தைப்பார்த்து நேரத்தை ஓரளவு சரியாகச்சொல்லிவிடுவார். 'எப்படி இவ்வளவு சரியா சொல்லுறீங்க?' என்று வாயைப்பிளப்பது எங்கள் வேலையாக இருக்கும். இப்போது கையில் கட்டும் மணிக்கூட்டில் தொடங்கி எத்தனை எத்தனை இடங்களில் கடிகாரங்கள் இருக்கின்றன. கணினி, மைக்ரோவேவ், ரேடியோ கடிகாரம், வீடியோ கடிகாரம், செல்போன் கடிகாரம் இத்தியாதி இத்தியாதி. ஒரு வினாடி நேரத்தையும் பிரித்து சரியாக அளந்துகூறும் atomic clocks (தமிழில் எப்படி சொல்வது???) இருக்கும் இந்த நாளில் நேரத்தைப்பற்றி கொஞ்சம் விலாவாரியாக ஆராய்வோமா?



Wednesday, October 15, 2003

Happy Birthday!!!






எனக்கு மிகவும் பிடித்த மனிதர். இன்று இவருக்கு பிறந்தநாள்.


















Friday, October 10, 2003

பிரமாபுரம் ஏவிய பெம்மான் தரிசனம்

எங்கள் ஊரில் பள்ளிக்கூடத்தில் சமயமும் ஒரு பாடம். தேவாரங்களும், புராணக்கதைகளும் சொல்லித்தருவார்கள். கூடவே ஆறுமுக நாவலரது சைவசமய வினாவிடையும் இருக்கும். அதில் படித்த சிலது இன்னமும் ஞாபகம் இருக்கு. திருநீற்றை எப்படி பூசவேண்டும், கோவிலுக்கு போனதும் முதலில் யாரை வணங்க வேண்டும், எத்தனை தரம் கோவிலை வலம் வர வேண்டும் என்றெல்லாம் அதில்தான் படித்தேன்(படித்தோம்). உளவாரப்பணி பற்றியும் அப்பரின் தொண்டு பற்றியும் படித்ததும் இன்னமும் ஞாபகம் இருக்கிறது. வீட்டிற்கு அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் கூட்டத்துடன் சேர்ந்து உளவாரப்பணியாக புற்களை வெட்டியதும் (அதற்குப் பயன்படுத்தும் பொருளின் பெயர் மறந்து விட்டது. யாராவது உதவுவீர்களா?). இப்படியெல்லாம் படித்தாலும், எனக்கு வீட்டில் முதலில் சொல்லிக்கொடுத்தது திருஞானசம்பந்தரைப்பற்றித்தான். கதையே எங்களை முதலில் ஈர்த்தது. மூன்று வயது பையன் அழுததற்கு சிவபெருமான் வந்தது, அவன் தேவாரம் பாடியது என்று அதிசயிக்க பல விஷயங்கள் இருந்தன. முதன்முதலில் பாடிய தேவாரமும் 'தோடுடைய செவியன்'தான். அத்தோடு எங்கள் வீட்டிலும் ஊர்க்காரர்களுக்கு சீர்காழி கோவிந்தராஜனை மிகவும் பிடிக்கும். அவர் எங்கள் ஊர் கோவிலுக்கும் வந்திருக்கிறார்.
இப்படி எங்கெளுக்கெல்லாம் சீர்காழி (ஊரும், பாடகரும்) என்றாலே மிகவும் பிடிக்கும்.

இதுவரை கோயில் பிரயாணம் போகும்போதெல்லாம் சீர்காழி போகாமல் விட்டதில்லை. சிதம்பரம் சென்று விட்டு, அடுத்த கோவில் சீர்காழிதான். அமைதியான ஊரில் சாலைக்கு அருகிலேயே மிக உயர்ந்த மதிற்சுவர்களோடு தோணியப்பர் கோவில் இருந்தது. முதன்முதலில்தான் கோவிலைக்கண்டு பிடிப்பதற்கு சிரமப்பட்டு போனோம். இப்போதெல்லாம் தூக்கத்திலும் எப்படி போவதென்று வழி சொல்லுவோம். :)
முதன்முதலில் கோவிலுக்கு போனபோது நாங்கள் எல்லாரும் திருக்குளத்தைத் தான் ஆவலுடன் தேடினோம். அதன் படிகளில் நின்றுகொண்டு கோவில் எப்படித் தெரிகிறது என்று பார்த்தோம். நாங்கள் அப்போது அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. பல வருடங்களாக எப்படி இருக்கும் என்று உருவகப்படுத்தி வந்ததை பார்த்தோம் நாங்கள். கோவிலைப் பார்த்து விட்டு குளத்தில் கால் கழுவலாம் என்று திரும்பிய எங்களுக்கு அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. என்னவென்று கேட்கிறீர்களா? அந்தக் குளத்தின் நிலைதான். ஊர்மக்கள் அனைவரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது என்று புரிந்து கொண்டோம். (2000இல் சென்றபோது நிலமை இன்னமும் மோசமாக இருந்தது.)

ஒரு வழியாக கால் கழுவிக்கொண்டு, பிரம்ம புரீஸ்வரரைத் தரிசனம் செய்தோம். இந்தக்கோயிலுக்குள் சிவனுக்கு மூன்று பிரகாரங்கள் இருக்கின்றன. முதலில் பிரம்மபுரீஸ்வரன் சன்னிதிக்கு சென்றோம். பாடல் பெற்ற தலங்களுள் மிக அதிகமான பாடல்கள் இந்தக்கோவில் இறைவனுக்குத்தான் பாடியிருக்கிறார்கள். மொத்தம் எழுபத்தியரு தேவாரங்கள் கிடைத்திருக்கின்றதாம். சிவபெருமானின் அடுத்த பிரகாரத்தில் சிவனும் பார்வதியும் இருக்கிறார்கள். இது தோணி வடிவத்தால் ஆனது. தோணி வடிவத்தில் இருப்பதால்தான் தோணியப்பர் என்று சொன்னார்கள் என்றும் சிவபெருமான் ஒரு முறை அறுபத்திநான்று கலைகளையும் தோணியில் கொண்டு போய் காப்பாற்றினாராம். அதனால்தான் சீர்காழியையும் தோணிபுரம் என்று சொல்லுவார்களாம். அதேபோல பிரம்மபுரீஸ்வரர் என்று இறைவனுக்கும் பிரம்மபுரம் என்று ஊருக்கும் பெயர் வரக்காரணம் பிரம்மா இங்கு வந்து சிவனை வழிபட்டதாலாம். தோணியப்பரை வழிபட்டுவிட்டு மேலும் உயர செல்லும் படிக்கட்டுகளில் ஏறி சட்டநாதரையும் தரிசிக்கலாம். இங்கிருந்து கீழே பார்த்தால் கோவிலை நன்கு பார்க்கமுடியும், கோவில் குளமும் தெரியும். அமைதியாக இருக்கும் இந்தக்கோவிலில் கண்ணை மூடி நின்றால் 1000 வருடங்களுக்கு முந்தய காலத்துக்கு போய் விடுவோம் என்று நினைக்கிறேன்.

ஒரு முறை இக்கோவிலில் சட்டநாதரை தரிசித்துவிட்டு வரும்போது அருகில் இருக்கும் மண்டபத்தில் ஒரு துறவியை பார்த்தோம். ஆறேழு அடிகள் வளர்ந்த கூந்தல் அருகில் இருக்க அமர்ந்திருந்தார் அவர். அவரிடம் திருநீறு வாங்கியது எங்களுக்கு மிகவும் மனநிறைவைத் தந்தது. அப்போது இருந்த மனநிறைவும் நிம்மதியும் இப்போது கூட நினைவில் கொண்டு வரமுடிகிறது.

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதி சூடி
காடுடைய சுடலைப்பொடி பூசி யென்னுள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைனாட் பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் ஏவிய பெம்மான் இவன் அன்றே


Saturday, October 04, 2003

யாழில் இருந்து ஒரு பகிரங்கக்கடிதம்



கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சில சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு சென்றேன். அங்கு நான் கண்ட சில சம்பவங்கள் எனது மனதில் நெருடலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன, அவற்றை தீர்ப்பதற்கு என்னுடைய அனுபவத்தில் சில தீர்வுகளை முன் வைக்கின்றேன். சரியான தீர்வு காண வேண்டும் என்பதற்காக உங்களுக்கும் அவற்றை தெரியப்படுத்துகின்றேன்.

போரால் நாம் அடைந்தது எத்தனையோ, அவற்றில் வறுமையான குடும்பங்களும், ஆதரவற்ற சமுதாயமும் தான் இன்னும் எம்மண்ணில் பல இன்னல்களை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றன. இவை தவிர பணம் இருக்கின்ற மக்கள் அளவிற்கு மிஞ்சிய பணத்தை என்ன செய்வது என்று தெரியாது அப் பணம் ஏதோ எல்லாம் செய்து கொண்டிருக்கின்றது.

இதில் முதலாவது வகையினருக்கு பல தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து கொண்டிருக்கின்றன. தொண்டு நிறுவனங்களில் சாதாரணமாக காணப்படும் ஊழல் தவிர்க்க முடியாது. கேள்வி கேட்க ஆளில்லாமல் ஒதுக்கப்பட்ட மொத்தப்பணத்தில் ஒரு தொகையாவது மக்களைப் போய் சேருகின்றதா என்று கேட்டால், அங்கும் கேள்விக்குறியே மிஞ்சுகிறது.



தொண்டு நிறுவனங்களால் செலவு செய்யப்படும் பணம் முறையாக செலவு செய்யப்பட்டால் அடையும் நன்மை அபரிமிதமாகவே இருக்கும் என்பது என்னுடைய கருத்து. அநேகமான திட்டங்கள் வெளிநாட்டை சேர்ந்த திட்டம் தீட்டும் வல்லுனர்களால் திட்டமிடப்படுகின்றது. அதன் நோக்கங்கள் சிறந்தவையாக இருந்தாலும் அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தம் நம்மவர்கள் தமது மேலதிகாரிகளுக்காக அத்திட்டங்களை செய்வதனால் எந்த சரியான திட்டமாக இருந்தாலும் அத்திட்டங்கள் அதன் குறிக்கோளை அடையத் தவறிவிடுகின்றன.

உதாரணமாக சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்தால் சிறுவர்களுக்கான சஞ்சிகை துளிர் கடந்த ஒரு வருடமாக வெளியிடப்படுகின்றது. இதற்காக மாதம் 15,000 ரூபா ஒதுக்கப்படுகின்றது. அந்த சஞ்சிகை தனது குறிக்கோளை இதுவரை அடையவில்லை என நான் துணிந்து கூறுவேன். ஏனெனில் நானும் அந்த திட்டத்தில் பங்கு பற்றிக் கொண்டிருக்கின்றேன். துளிர் சஞ்சிகை அச்சிடும் பொறுப்பு என்னுடையது. தரம் போதாது மாற்ற வேண்டும் என்று பல தடவை எடுத்துச் சொல்லி சில மாற்றங்கள் செய்துள்ளோம். ஆனாலும் பெரிய மாற்றங்கள் செய்வதற்கு அதற்கு பொறுப்பானவர்கள் அனுமதி அளிக்கவில்லை.

இதே போலவே அநேகமான திட்டங்கள், திட்டவரைவு, திட்டசெலவு அறிக்கை, திட்ட பின் அறிக்கை என எல்லாமே சரியாக மேலதிகாரிகளுக்கு அளிக்கப்படுகின்றன. ஆனால் அத்திட்டங்களால் எத்தனை பேர் பயன் அடைந்தார்கள் என்று பார்த்தால் ஒரு சில பேர்களாக தான் இருக்கும்.

அடுத்தது ஆதரவற்றவர்களுடையது, பல சிறுவர் பராமரிப்பு நிறுவனங்கள் உள்ளன என்பதை யாவரும் அறிந்திருப்பீர்கள். நல்ல நோக்கம் பல ஆதரவற்ற எத்தனையோ பேர் பலன் அடைகிறார்கள். உணவு, உடை, உறையுள், கல்வி, சுகாதாரம் என எல்லா அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்படுகின்றன. இதில் ஒவ்வொரு நிலையத்திற்கும் மற்றைய நிலையத்திற்கும் நிறையவே வேறுபாடுகள் இருக்கின்றன. இதற்குப் பல காரணங்கள், முக்கிய காரணம் அதன் நிர்வாகமே என்பது என்னுடைய கருத்து. எப்போதுமே ஒரு இனமோ அல்லது வியாபாரமோ சிறப்பாக அமைவதற்கு அதன் கொள்கைளும் தலைமையும் காரணம். இதனை யாரும் மறுக்க முடியாது, இதற்கு வரலாறு நல்ல உதாரணம்.

பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதிலும் பார்க்க அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பது சிறந்தது. இது மாவோ சேதுங்கின் வாதம். இதுவே என்னுடைய வாதமும் கூட. இப்போது இயங்கிக் கொண்டிருக்கும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் எத்தனை இக் கொள்கையைப் பின்பற்றுகின்றன என்பது கேள்விக்குறியே. இந்தச் சிறுவர்கள் இவ்வாறான ஒரு பராமரிப்பு நிலையத்திற்கு தற்சமயம் செல்லாதிருந்தால் ஒரு பகுதியினர் சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் செத்து மடிந்திருப்பார்கள். ஆனால் இன்னுமொரு பகுதியினர், சமூகத்தில் இருந்து சமூகத்தைப் படித்திருப்பார்கள், தான் எவ்வாறு வாழ வேண்டும் என்று தன் அனுபவத்தால் கற்றிருப்பார்கள், சில வேளை அதில் ஒருவர் சரி விஞ்ஞானியாகவோ அல்லது பெரிய வியாபாரியாகவோ வந்திருக்கலாம். இதற்கும் வரலாறே சாட்சி. வறுமை ஒருவனை சரியாக வழி நடத்தும், அதற்காக எல்லோரும் வறியவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நிர்வகிப்பவர்கள் அவர்களை சரியான பாதையில் வழி நடத்த வேண்டும். அவ்வாறு செய்யத்தவறும் சந்தர்ப்பத்தில் ஈழத்தில் உள்ள அனைத்து ஆதரவற்ற குழந்தைகளும் தொடர்ந்தும் ஆதரவற்றவர்களாகவே இருப்பார்கள்.

இந்துமா மன்றத்தால் நிர்வகிக்கப்படும் ரத்மலானையில் இயங்கும் ஆண்கள் விடுதி

அங்கு ஏறத்தாழ பாலர் வகுப்பில் இருந்து உயர்தரம் வரை 100 மாணவர்கள் இருக்கின்றார்கள். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், பல சமூகப் பின்னணிகளில் இருந்தும் மாணவர்கள் தாய் தந்தை இருவரையும் இழந்தவர்கள், தாய் அல்லது தந்தையை இழந்தவர், அல்லது குடும்பத்தில் பொருளாதாரக் கஷ்டம் உள்ளவர் என்று எல்லோரும் இருக்கிறார்கள்.

இவர்கள் இரத்மலானை இந்துக்கல்லூரிலேயே தமது கல்வியை கற்கிறார்கள், இவர்களை பராமரிக்க இருவர், இவர்களுக்கு உணவு சமைக்க ஒரு குடும்பம் இவர்களை நிர்வகிப்பவர்கள் வாரத்தில் இரண்டு தடவையாவது வந்து பார்ப்பார்கள். இது தான் இவர்களுடைய பின்னணி.



இவர்களை நான் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அவர்கள் என்னிடம் சொல்லிய சில அவர்களுடைய யதார்த்தமான ஏக்கங்கள்:

எங்களுக்கு அம்மா அப்பா இருந்தால் எங்களை இப்படி ஏசுவார்களா?

எங்களுக்கு வசதியான சொந்தக்காரர்கள் இருந்தால் நாங்களும் வெளிநாட்டுக்குப் போயாவது கொஞ்சம் காசு உழைச்சு வசதியாக இருந்திருப்போம்!

எப்படியாவது படிச்சு வீட்டை பார்க்க வேணும்.

சாப்பாட்டுக்கடையில் வேலை எடுத்து தந்தார்கள். அங்கு விடிய 6.00 மணியிலிருந்து இரவு 10.00 மணிவரை வேலை பிறகு வந்து படிக்க ஏலாது..

----------

சமீபத்தில் இலங்கை சென்று திரும்பிய திரு.சிவா பிள்ளை அவர்களிடம் அவர் கிளம்புவதற்கு முன்னர், அவருடைய பயண அனுபவங்களை திரும்பி வந்ததும் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன். சில நாட்களுக்கு முன்னர், அவர் அனுப்பிய கட்டுரையின் சில பகுதிகளை இங்கு தந்திருக்கிறேன்.

கட்டுரையைத்தொடர்ந்து படிக்க இங்கே சுட்டுங்கள்

உங்களின் மேலான யோசனைகளை அக்கட்டுரையின் முடிவின் தரப்பட்டிருக்கும் முகவரிகளுக்கு எழுதுங்கள்.

Thursday, October 02, 2003



Gandhi, Waikiki Beach, Oahu, USA.

Wednesday, October 01, 2003

பிறந்த நாள்... இன்று பிறந்தநாள்


இந்தியாதான் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான அளவு திரைப்படங்கள் தயாரிக்கின்றன என்று படித்திருக்கிறேன். அதனால்தானோ என்னமோ இலங்கையில் அவ்வளவு அதிகமாக தமிழ்திரைப்படங்கள் தயாரிக்கப்படவில்லை. அத்துடன் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களும் அவ்வளவு வெற்றி பெறவில்லை என்று நினைக்கிறேன். திறமைசாலிகள் இருந்தாலும் அவர்களால் இலங்கையில் அவ்வளவு சோபிக்கமுடியாமல் இந்தியா வந்துவிட்டார்களோ என்றும் எண்ணத்தோன்றுகிறது, பாலுமகேந்திரா, ராதிகா மாதிரி.


ஆனால் எங்கள் ஊரில் திரைப்படங்கள் பார்க்கமாட்டோம் என்று தவறாக நினைத்து விடாதீர்கள். தமிழ்நாட்டில் மக்கள் வாழ்வில் சினிமா எவ்வளவு முக்கியத்துவம் பெற்றதோ அதே மாதிரி எங்கள் ஊரிலும். ஒரே ஒரு வித்தியாசம், பொதுவாக எல்லோருடைய ஆஸ்தான கதாநாயகன் சிவாஜிதான். சிவாஜியை விட வேறு யாரும் இல்லை. என்னுடைய அம்மம்மாவே, 1982-85 எங்கள் வீட்டில் தொலைக்காட்சி வந்தபிறகு, ஒவ்வொரு புதனன்றும் போடப்படும் பழைய சிவாஜி படங்களைப்பார்ப்பத்தற்கு சரியாக இரவு 9.30 மணிக்கு " 'சிவாசி' வரப்போறேர்....... கெதியா சாப்பிடுங்க" என்று எல்லோரையும் விரட்டுவார். அன்று எங்கள் கூடம் ஜே.... ஜே... என்று இருக்கும். எங்காயாவது ஒரு சிலருக்குத்தான் எம்.ஜி.ஆர் போன்ற மற்ற நடிகர்களைப்பிடித்து இருந்தது. அவர்களை ஒரு கைவிரலில் எண்ணிவிடலாம் போன்ற எண்ணிக்கைதான். எனக்கும் கூட சென்னை வந்த பிறகுதான் கமல், ரஜனி என்றெல்லாம் நடிகர்கள் இருக்கிறார்கள் என்று தெளிவாகவும், புதிய படங்கள் பார்ப்பதற்கான ஆர்வமும் வந்தது. அதுவரை எல்லாருக்கும் நடிகன் என்றால் அது சிவாஜி கணேசன் தான். சிறு வயது பையன்களில் இருந்து விடலைப்பசங்க வரை சிவாஜி பட வசனம் பேசிக்கொண்டு திரிவதைப்பார்த்து இருக்கிறேன்.



எங்களுக்குத்தான் சிவாஜி பிடிக்கும் என்று நினைத்து கொண்டிருந்த எனக்கு, சில வருடங்கள் சென்ற பிறகுதான் என்னுடைய தந்தையும் பெரிய ரசிகர் என்று அவர் மூச்சு விடாமல் பராசக்தி மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் பட வசனங்கள் சொன்னபோதுதான் தெரியும். அவரும் என்னைப்போலவே 6ம் வகுப்புக்கு யாழ்ப்பாணம் போய் விடுதியில் தங்கிப்படித்து வந்தார். இரண்டு வருடங்கள் கழித்து என்னுடைய சித்தப்பாவும் அவரைத்தொடர்ந்து இருக்கிறார். முன்பெல்லாம் தோணியில் போய்தான் தீவுகளுக்கு இடையில் செல்லவேண்டும் என்று சொன்னார். அத்தோடு, இப்போது இருப்பது போல சூட்கேஸ் எல்லாம் இல்லை, ட்ரங்கு பெட்டிதான் என்று சொன்னார். தாத்தா 4-5 சதம் தந்து விடுவாராம் வழிச்செலவுக்கு. இவர்கள் பள்ளி தொடங்குவதற்கு முதல் நாளே சென்று விடுவார்கள், அதுவும் வேளையுடன் புறப்பட்டு விடுவார்களாம். யாழ்ப்பாணத்தை அடைந்ததும் இவர்களுக்கு தெரிந்த, உறவினரின் கடையில் பெட்டிகளை வைத்து விட்டு, கூட சேர்ந்திருக்கும் நண்பர் குழாமுடன் மாட்னி ஷோ பார்க்கப்போவார்களாம். ஒரு படம் முடிந்ததும் சித்தப்பா மற்றும் அவரின் வயதொத்த நண்பர்களை கடைக்குப்போய் பெட்டிகளை எடுத்துக்கொண்டு விடுதிக்கு போகுமாறு சொல்லி அனுப்பி விடுவார்களாம், அப்பாவும் அவரின் நண்பர்களும். பிறகு இன்னுமொரு படம் பார்த்து விட்டு இரவில் பள்ளிக்கூடத்திற்கு போய் சுவர் ஏறிக்குதித்து உள்ளே போவார்களாம். அடுத்த சில நாட்கள் தாங்கள் பார்த்த படங்களை அலசி ஆராய்ந்து வசனங்களை ஒப்பித்துக்கொண்டு இருப்பார்களாம்.

அப்பா, சித்தப்பா அவர்களின் நண்பர்கள் பார்ப்பது எல்லாம் சிவாஜி படம்தான்.



சென்னையில் ஒரு முறை பராசக்தி படம் திரையிட்ட போது என்னுடைய தங்கை சிவாஜியின் வசனங்களை அற்புதமான ஏற்ற இறக்கத்துடன் சொல்லிக்கொண்டிருந்தாள். அவளுக்குத்தெரியாமல் அப்பா அவளைக்கவனித்து கொண்டிருந்ததை நான் பார்த்து விட்டேன். தன்னுடைய பெண்ணும் தன்னைப்போலவே நல்ல ரசனையுடன் இருக்கிறாள் என்ற பெருமிதத்தை என்னால் பார்க்க முடிந்தது!


என்னடா இவளுக்கு திடீரென்று என்ன ஆயிற்று என்று கேட்கிறீர்களா? இரண்டு நாட்களுக்கு முதல் நமது பிரசன்னாவுடன் பேசிக்கொண்டு இருந்தபோது சிவாஜி பற்றிய கதை வந்தது. அப்போது அவர் சொன்னார், தான் ஒரு வாரமும் ஒன்று அல்லது இரண்டு சிவாஜி படங்கள் பார்ப்பதாக, அத்தோடு அதிசயிக்கத்தக்க இன்னொரு விஷயமும் சொன்னார். பிரசன்னாவின் தாயார் சிவாஜி நடித்த மொத்த 283 படங்களில் 271 படங்களைப்பார்த்து விட்டதாக சொன்னார். இவரும் சளைத்தவர் இல்லை சுமார் 193 படங்கள் பார்த்திருப்பதாக சொன்னார்.



(Written on: 11/11/2002)


Extra Reading 1
Extra Reading 2
Extra Reading 3
Extra Reading 4
Extra Reading 5
Extra Reading 6