Monday, September 29, 2003

புறநானூறு என்னும் புதிர் - சுஜாதா


கட்டணம் கட்டி மட்டுமே படிக்கமுடிகிற அம்பலம் இதழில் இந்த வாரம் சுஜாதா அவர்கள் எழுதிய கட்டுரையை பகிர்ந்துகொள்ள வேண்டும். இதனால் காப்பி ரைட் பிரச்சினைகள் வரலாம் என்று உள்ளுணர்வு சொன்னாலும், பகிர்ந்து கொள்ளாமல் இருக்கமுடியவில்லை.

அன்புடன்,
மதி

அம்பலம் - ஓரிரு எண்ணங்களில் எழுத்தாளர் சுஜாதா எழுதியது


புறநானூறு முதல் இருநூறு பாடல்களை எளிமைப்படுத்தி முன்னுரையுடன் கொடுத்திருந்ததும், உயிர்மை பதிப்பகம் பிரசுரித்ததும் உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்போது பிற்பாதியான இருநூறு பாடல்களின் முடிவுவரை வந்துவிட்டேன். இப்பாதியில் குறிப்பிடத்தக்க பாடல்கள் இருந்தாலும், தனிப்பாட்டு 310ம் பாடலைக் கொஞ்சம் தனிப்படுத்திச் சொல்ல விரும்புகிறேன். இதைப் பற்றி ஏ.கே.ராமானுஜன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். 1983ல் யாழ்ப்பாணத்தில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் பேசியபோது, இந்தப் பாடலை இயல்பாக மேற்கோள் காட்டியபோது பாதியில் கூட்டமே மௌனமாக சற்று உறைந்து போனதாம். காரணம்? பாடலைப் பாருங்கள்.

பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சி,
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர் நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே!
5

உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு
மான்உளை அன்ன குடுமித்
தோல் மிசைக் கிடந்த புல்அண லோனே!

* * *



பால் உண்ணப் பிடிவாதம் பிடித்தபோது
இவன் தாய் கோபித்தவளைப்போல கோலை உயர்த்த
பயந்து சாப்பிட்டான்.
போரில் இப்போது யானைகளைக் கொன்¢றவன்
மார்பில் அம்பு தைத்திருப்பதைக் காட்ட
கவனிக்கவில்லை புண் என்று நினைத்தேன் என்றான்
குதிரையின் பிடரி போன்ற குடுமியும்
இளம்தாடியும் கொண்டவன்

புறநானூற்று இளைஞனுக்கும் - ஈழப்போராளிக்கும் இருக்கும் இத்தனை ஒற்றுமைதான் ராமானுஜனை பிரமிக்கவைத்தது. அந்தக் கூட்டத்தினரை திகைக்கவைத்தது. இந்தப் பாட்டு எந்தச் சூழ்நிலையில் எதற்காக எழுதப்பட்டது? இது உலக வழக்கா போன்ற பல கேள்விகள் எழுந்தாலும் இந்த அளவுக்கு இன்றைய யதார்த்தத்திற்கு அருகில் இருப்பது வியப்பே.

மான் உளை என்பதற்கு குதிரையின் பிடரி மயிர் என்றுதான் அர்த்தம். மானுக்கு பிடரி கிடையாது. சங்க காலத்தில் மா என்றால் கதிரை மான் என்றாலும் சிலசமயம் குதிரை. புறநானூறின் பிற்பகுதிப் பாடல்களில் மகட்பாற் காஞ்சி என்கிறவகையில் பல பாடல்கள் உள்ளன. மகளைக் கட்டிக்கொடுக்க தகப்பனோ, அண்ணன்மார்களோ மறுப்பதால் வரும் பிரச்னைகளைப் பற்றி ஊரார் கவலைப்படுவது. மேலும் சில பிரமிக்கத்தக்க உவமைகள் உள்ளன.

பாம்பு சட்டையை உரிப்பதுபோல் என் வறுமை நீங்கட்டும் என்கிறார் ஓர் ஏழைப் புலவர். வேங்கடம் இரண்டு பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளி venus கிரகம் பாதை மாறினால் நாட்டுக்குத் தீங்கு வரும் என்கிற நம்பிக்கை குறிப்பிடப்படுகிறது. மறைமுகமாக அதை நாங்கள் நம்பவில்லை என்று புலவர் சொல்லாமல் சொல்கிறார். (வெள்ளி எப்படிப் போனால் என்ன, எங்களுக்கு பரிசு கிடைத்துவிடும்!)

புறநானூறின் வற்றாத ஆச்சரியம் பிற்பாதியிலும் தொடர்கிறது. ஆனால் பல பாடல்கள் முழுமையாக இல்லை. பாட பேதங்களும் உள்ளன. விரைவில் நானூறு பாடல்களையும் ஒரு புத்தகமாக 'உயிர்மை' பதிப்பிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். முதல் இருநூறு விற்றுத் தீர்ந்தது மற்றொரு வியப்பு.

- சுஜாதா

Sunday, September 28, 2003

Gunter Grass - 'Crab Walk'


இண்டைக்கு வாசகசாலைக்கு போனபோது குந்தர் கிராஸ் எழுதின 'Crab Walk' புத்தகம் எண்ட கண்ணில பட்டுது. இதுக்கு முதலே கிளப்பில் இரா.மு அவர்கள் அந்தப்புத்தகத்தகத்தைப்பற்றி சொன்னதால அதை எடுத்தன். ஜேர்மனில, ஜேர்மன்காரங்களின்ற கப்பலை ரஷியன் காரங்கள் குண்டுபோட்டு தகர்த்துப்போட்டாங்கள். அந்தத்தாக்குதலில தொள்ளாயிரம் பேர் செத்துப்போயிற்றினமாம். ஆனா, சின்ன படகுகளில போய் கொஞ்சப்பேர் தப்பிச்சிற்றினம். அதிலை ஒருத்திக்கு அங்கயே பிரசவவலி வந்து இந்தக்கதை சொல்லுற பத்திரிகையாளர் பிறந்தேராம். அவரின்ற அம்மாவுக்கு அண்டைல இருந்து என்ன நடந்தாலும் அந்த நிகழ்ச்சியோட சம்பந்தப்படுத்தியண்டே இருப்பா. பத்திரிகையாளரோ, அண்டையான் நிகழ்ச்சிகளை மறக்கப்பாக்கிறேர். அவரின்ற பதினைஞ்சு வயசு மகனுக்கு இண்டர்நெட் மூலமா, அண்டையான் நிகழ்ச்சிகளையும் அது சம்பந்தப்பட்ட விசயங்களையும் தெரிய விருப்பம். இந்தக்கதைக்கு ஏன் 'கிராப் வாக்' எண்டு பேர் வச்சதண்டு குந்தர் கிராஸ் ஒரிடத்தில சொல்லுறேர்.

நண்டு எப்படி போகும் எண்டு உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும். பின்னுக்கு போறமாதிரி ஒரு பக்கத்தாலை நடக்கும். அது நமக்குத்தான் பின்னுக்குப்போற மாதிரி இருக்குமே ஒழிய, நண்டு உண்மையா முன்னாலைதான் போகுது. அதுமாதிரி, இந்தக்கதையிலையையும் பழைய நாட்களை அசைபோட்டு, என்னடா பழைய கதை கதைச்சண்டு இருக்கிறேர் எண்டு நாம நினைக்கேக்க அவர் முன்னுக்குப்போய்க்கொண்டு இருக்கிறேராம். இதைப்படிச்சபிறகு மனம் அதிலையே உழலத்தொடங்கிற்றுது.



எனக்குள்ளயே என்னமாதிரி பொருத்தமா பேர் வச்சிருக்கிறேர் எண்டு சிலாகிச்சுக்கொண்டன். எனக்குள்ளயே என்ன இருந்தாலும் நோபல் பரிசு வாங்கினவர் எண்டு பெயர் வைக்கிறதிலையே நமக்கு காட்டிப்போட்டேர் எண்டு நினைச்சன். நிறைய யோசனைகளும் மனதிலை வந்து போயிற்றுது. கொஞ்ச நேரம் இப்படியெல்லாம் இருந்திற்று கதையை தொடருவம் எண்டா முடியேல்ல. மனம் திரும்பத்திரும்ப அந்த 'நண்டு நடை'யிலதான் போய் நிண்டுது. இது வேலைக்காகாது எண்டு நினைச்சண்டு, சரி இங்க உங்களிட்ட பகிர்ந்து கொள்ளுவம் எண்டு வந்திருக்கிறன்.

இந்தப்புத்தகத்தின்ற ஜேர்மன் பேர் - Im Krebsgang. இதை கூகிளிண்ட மொழிபெயர்ப்பு பக்கத்தில கொடுத்து என்ன வருகுதெண்டு பார்த்தன்.
Im Krebsgang = In the cancer course

Related links


Link 1

Link 2


Friday, September 26, 2003

காற்றுவழிக்கிராமம் - சு.வில்வரெத்தினம்


சமீபத்தில் நான் படித்த ஒரு கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தோன்றுகிறது. இலங்கையை சேர்ந்தவள் என்றபோதிலும் எங்கள் நாட்டு இலக்கியம் பற்றி அதிகம் தெரியாது. இப்பொழுதுதான் மதுரைத்திட்டத்தின் உதவியோடு கொஞ்சம் கொஞ்மாகத்தெரிந்து கொண்டு வருகிறேன். சில வாரங்களுக்கு முன்னர், மதுரைத்திட்டத்தில் சந்தித்த கவிஞர்தான் சு.வில்வரெத்தினம். மற்றவர்களைவிட இவர் என்னை ஈர்க்க என்ன காரணம்? சந்தநயம் மிகுந்த இவரது கவிதைகளா? இவரது கவிதையில் குறிப்பிடப்படும் விசயங்களா? ஆமாம். ஆமாம்.

ஆனால் அதையெல்லாம்விட மிக ஆர்வமாகப்படிக்கத்தூண்டியது, இவர் இலங்கை, யாழ்ப்பாணத்தில் என்னுடைய ஊரிலிருந்து - தீவிலிருந்து - வந்தவர் என்பதுதான்.

என்னுடைய மகிழ்ச்சியை உங்களுடனும் பகிர்ந்து கொள்வதற்காக அவருடைய காற்றுவழிக்கிராமம் தொகுப்பிலிருந்து எனக்கு மிகவும் பிடித்த கவிதை.

அதற்கு முன் - பதிப்பகத்தாரின் உரையிலிருந்து சில வரிகளை இங்கிடுகிறேன். இவ்வரிகள் கவிதையின் களத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

பதிப்பகத்தார் உரை


18.10.1991 அன்று வடக்கின் தீவுகள் ஆக்கிரமிக்கப்பட்டன. வாழ்விடத்தை விட்டும் மக்கள் பெயர்த்தெடுக்கப்பட்டனர். இதன் பின்னரான தீவுகளின் அவல இருப்பை நிழற் படங்களாக்கி நம்மை ஈர்த்து துயர் கிளர்த்துபவை இக்கவிதைகள். இவ்வவல இருப்பின் அனுதாபத்துக்குரிய பங்காளியாய், சலிக்காதவனாய், எதிர்கொண்டவனாய் நம்மால் தரிசிக்கப்படுகிறவன் இக்கவிஞன். இதனால் தான் ஓர் யுத்தகாலத்தில் சிதைக்கப்பட்ட கிராமங்களின் பதிவை உள்வாங்கிய ஆவணமாய் இத்தொகுதியை நம்மால் பார்க்க முடிகின்றது. நிகழ்கிற வரலாற்றைத் தவிர்த்து எழும் அதிமனோரதிய சோடனைகளே வாழ்வனுபவம் என நம்பவைக்கும் முரட்டுப் பிரயத்தனங்களின் முன் சு.வில்வரெத்தினம் போன்றவர்களின் கவிதைகள் தனித்து நிற்கின்றன. வாழ்க்கையைப் பேசுகிற கவிதைகள் என்ற வகையில் இத்தொகுப்பு மிகுந்த கவனத்திற்குரியதாகிறது.


காற்றுவழிக்கிராமம்


முழுவியளத்துக்கு
ஒரு மனுவறியாச் சூனியத்தைக் கண்டு
சூரியனே திகைத்துப் போன காலையிலிருந்து
இப்படித்தான்
உயிர்ப்பிழந்து விறைத்த கட்டையெனக்
கிடக்கிறது இக்கிராமம்.

கிராமத்தின் கொல்லைப் புறமாய்
உறங்கிய காற்று
சோம்பல் முறித்தபடியே
எழும்பி மெல்ல வருகிறது.

வெறிச்சோடிய புழுதித்தெரு,
குழம்பிக் கிடக்கும் சுவடுகள் மேலாய்
சப்பாத்துக் கால்களின் அழுத்தம்,
காற்றுக்கு குழப்பமாயிருந்தது.

முற்றங்கள் பெருக்கும் ஓசைலயம்
பாத்திரங்களோடு தேய்படும் வளையல் ஒலி,
ஆச்சி, அப்பு, அம்மோயென
அன்பொழுகும் குரல்கள்-
ஒன்றையுமே காணோம்.

என்ன நடந்தது?
ஏனிந்தக் கிராமம் குரலிழந்து போயிற்று?
திகைத்து நின்றது காற்று
தேரடியில் துயின்ற சிறுவன்
திருவிழாச் சந்தடி கலைத்திருந்தமை கண்டு
மலங்க விழித்தது போல.

திறந்த வாசலினூடே வீட்டுச் சொந்தக்காரனென
சுதந்திரமாய் நுழைகிற காற்று
இப்போ தயங்கியது.
தயங்கித் தயங்கி மெல்ல
ஓர் வீட்டுவாசலை எட்டிப் பார்த்தது.
ஆளரவமே இல்லை.

இன்னுமொரு வாசல்; இல்லை.
இன்னும் ஒன்று; இல்லை.
இன்னும் ஒன்றை எட்டிப் பார்க்கையில்
இழுத்துப் பறிக்கும் மூச்சின் ஓசை.
சற்றே கிட்டப் போனது.
வாசற் படியிலே

வழுக்கிக் கிடந்தது ஓர் முதுமை.
ஊன்றுகோல் கையெட்டாத் தொலைவிலே.
இழுத்துப் பறிக்கும் மூச்சினிடையே
எதையோ சொல்ல வாயெடுக்கவும்
பறிபோயின சொற்கள்.
பறியுண்ட மூச்சு
மடியைப் பிடித்து உலுக்குவதாய்
காற்று ஒருகால் நடுங்கிற்று.

பதற்றத்தோடே
படலையைத் தாண்டிப் பார்த்தது
தூக்க எடுக்க துணை கிடைக்குமாவென்று.
ஆருமே இல்லை.

காற்றென்ன செய்யும்?
ஒப்பாரி எழுந்தால் ஏந்தியெடுத்து
ஊரின் காதிலே போடும்.
ஒரு குரலின் உரைசலும் இல்லையே.
உண்மையிலேயே
காற்றிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

பக்கத்திருந்து உறவுகள்
பால் பருக்க,
கால் பிடிக்க,
கை பிடிக்க,
தேவாரம் ஓத,
கோலாகலமாய் பிரிகின்ற உயிர்
அநாதரவாய்,
அருகெரியும் சுடர் விளக்கின்றி
பறை முழக்கமின்றி, பாடையின்றி.....
அட, சாவிலும் கூட ஒரு வாழ்விருந்த கிராமம் இது.

காற்று பரிதவித்தது.
"எங்கே போயின இதன் உறவுகள்?"
ஒன்றும் விளங்காமல் அந்தரித்தது.
அதற்கெங்கே தெரியும்?
காற்றுறங்கும் அகாலத்தில்தான்
மூட்டை முடிச்சுக்களோடு மக்கள்
கிராமத்தை ஊமையாய் விட்டுப்போன கதை.

ஒரு பெருமூச்சை உதிர்ந்தபடி
மீண்டும் உள்ளே நுழைந்தது.
முதுமையினருகில் குந்தியிருக்கும்
இன்னொரு கூனற்கிழமாய் தன்னைப் பாவித்திருந்து
பிறகெழுந்து
சேலைத்- தலைப்புள் வாயைப்புதைத்தபடி
வந்தது வெளியே.

வீதியில் தலைநீட்டிய முட்செடியன்றை
வேலியோரமாய் விலக்கியபடியே
மெல்ல நடந்தது காற்று
சொல்லிக் கொள்ளாமல் போன புதல்வரைத் தேடும்
சோகந் தாளாத தாயைப் போல.

28.07.1993

சு.வில்வரெத்தினம்

(நன்றி - மதுரைத்திட்டம்)

Thursday, September 25, 2003

ஆழ்கடலில் ஓர் அதிசயம்


'கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு' என்பது எல்லாருக்கும் பொருந்தும் இல்லையா? முக்கியமாக விஞ்ஞானிகளுக்கு. கடலுக்கு அடியில் என்ன நடக்கிறது என்பது நமக்கும் விஞ்ஞானிகளுக்கும் பெரும் புதிரே. அதுவும் ஆழ்கடலில் வாழும் உயினங்களைப்பற்றி அதிகம் தெரியாது. இந்நிலையில் கலிபோர்னியாவிற்கு அருகில் பசிபிக் சமுத்திரத்தில் ஆழ்கடலில் உயிரனங்கள் இனப்பெருக்கம் செய்யும் இடம் ஒன்றை விஞ்ஞானிகள் எதிர்பாராத முறையில் கண்டுபிடித்திருக்கின்றனர்.

கலிபோர்னியா கடலோரத்தில் இருந்து ஏறக்குறைய நூறு மைல் தொலைவில் ஒரு மைல் ஆழத்தில் அதாவது ஏறக்குறைய ஆயிரத்து அறுநூறு மீட்டர் ஆழத்தில் இந்த வருங்கால சந்ததியினரை உருவாக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இடத்தில் மீன்களும் ஏனைய கடல்வாழ் உயிரங்களான ஆக்டோபஸ் ஆகியன ஏராளமாக முட்டைகளிட்டு, அவற்றிற்கு காவலிருக்கின்றன. இதில் என்ன ஆச்சரியம் என்றால், இந்த இடத்தை சுற்றி அவ்வளவு கடல்வாழ் உயிரனங்கள் இல்லை என்பதே. நமக்குப்புரியும்படி சொல்லவேண்டும் என்றால் பொட்டல்காட்டில் அந்த மீன்களும் ஏனைய உயிரனங்களும் முட்டைகளை இட்டுவிட்டு, காவலுக்கு இருக்கின்றன.

ரிமோட் வழியே இயங்கும் ரோபோட்டை கீழே அனுப்பி இந்த உயிரினங்களையும் முட்டைகளை புகைப்படம் எடுத்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இளம் ஊதா நிறத்தில் ஏராளமான முட்டைகள் சிறிய பாறைகளில் இருக்க, அருகில் இரண்டடி நீளமுள்ள blob sculpin, Psychrolutes phrictus என்னும் மீன் ஓய்வெடுக்கிறது. இந்த மாதிரி மீன்களுக்கு இடையே ஆங்காங்கே ஆக்டோபஸ்களும் முட்டையிட்டு பத்திரமாகப் பேணிவருகின்றன. இங்கு நண்டு, நட்சத்திரமீன் ஆகிய இன்னோரன்ன உயிரங்களும் சீவிக்கின்றன.

ஆழ்கடல் மீன்கள் தங்கள் உயிரினங்களைப்பாதுகாப்பதை இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுபோல பலவிதமான உயிரினங்களும் ஒன்று கூடி தங்களின் குஞ்சு குளுமான்களை வளர்ப்பதும் இதுவரை ஆராய்ச்சியாளர்கள் கண்டிராத ஒன்று என்று, Monterey Bay Aquarium Research Institute (MBARI) in Californiaவைச்சேர்ந்த Jeffrey Drazen கூறுகிறார்.

பொதுவாக ஹாட் ஸ்பிரிங்க்ஸ் இருக்கும் இடங்களிலும், சேறாக இருக்கும் தரைப்பகுதியிலும்(கடலின்) கடல் உயிரினங்கள் இருக்கும். இந்த இடங்களில் காணப்படும் தாது உப்புகளே இவை அங்கு அதிக எண்ணிக்கையில் இருக்கக்காரணம். அதேபோல அதிக அளவில் மீனகளும் மற்ற உயிரினங்களும் காணப்படும் இடம், கடலில் மூழ்கியிருக்கும் மலைப்பகுதிகள். அலைகளினால் அடித்து வரப்படும் 'பிளாங்க்டனை' உண்ணுவதற்காக கடல் உயிரினங்கள் இங்கு சேரும். ஆனால், முதலில் கூறிய 'Gorda Escarpment'இல் வேறெங்கும் காணாத அளவு உயிரினங்கள் இருக்கின்றன. அதுவும் இவ்வுயிரினக்கள் எல்லாம் இங்கு குழுமியிருக்கும் காரணமும் விசேடமானது. இனப்பெருக்கம். மீனவர்களிடம் இருந்தும் மற்றவர்களிடம் இருந்து இந்த இடம் காப்பாற்ற முயற்சி எடுத்துவருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

நன்றி: நாஷனல் ஜியாகிரபிக்

Tuesday, September 23, 2003

மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி, ஆனால்....


நம்மில் பலர் தினமும் காலை, மாலை, பகல் வேளைகளில் இதைச்செய்கிறோம். ஆனால், இதைப்பற்றி உட்கார்ந்து நன்றாக யோசனை செய்திருக்கிறோமா? என்று என்னைக்கேட்டால் தெரியாது என்றுதான்சொல்லுவேன்.

அப்படி என்ன செய்து, அதைப்பற்றி பெரிதாக யோசிக்காமல் இருக்கிறோம் என்று நீங்கள் கேட்கலாம். பொறுமை. பொறுமை. இன்றைக்கு இதைப்பற்றித்தானே பேச வந்திருக்கிறேன்.

நம் நகர வீதிகளிலும் நடைபாதைகளிலும் நாம் செலவழிக்கும் நேரத்தைத்தான் சொன்னேன். அதுவும் நாம் செலவழிக்கும் விதத்தைப்பற்றி கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.

வாகனங்களில், ஒரு காலத்தில் வீதிகளாய் இருந்து இப்போது கட்டடவேலைகள் நடக்கும் இடமாகிப்போன சாலைகளை ஊர்ந்து ஊர்ந்து கடக்கிறோம். அப்படி ஊரும்போதே சுற்றி இருக்கும் வாகனங்களில் எது எப்போது தன் போக்கிற்கு நகரும் என்றும் ஓரக்கண்ணால் பார்த்துக்கொள்கிறோம். இது தவிர குறுக்கும் மறுக்குமாய் ஓடும் சைக்கிள்களையும்ம், 'சித்தம் போக்கு சிவன் போக்கு' என்று சாலையை நினைத்த நேரத்தில் கடக்கும் பாதசாரிகளையும் சமாளித்தாக வேண்டும்.

இது மட்டுமா? ஊரில் திரும்பிய இடத்தில் எல்லாம் இருக்கும் பாலங்களில் வாகனங்கள் பிதுங்கி நிற்கும்போது, நான் நுரையீரலை கொள்ளும்மட்டும் நிரப்பி விட்டு, காரின் ரேடியோ/டேப்பின் சத்தத்தையும் கூட்டுகிறோம். பக்கவாத்தியமாக ஸ்டியரிங் வீலில் தாளம் வேறு. இந்த பாட்டுச்சத்தத்தாலும் தாள ஒலியிலும் மலைபோல் குவிந்திருக்கும் முடிக்கவேண்டிய வேலைகளை மறக்கப்பார்க்கிறோம். ம்ம்ம்... முடிகிற காரியமா?

சரி வாகனங்களில் சென்றால்தான் பிரச்சினை, பொடிநடையாகப்போய் வேலைகளை முடிக்கலாம் என்றால் முடிகிறதா? வரிக்குதிரைகள் படுத்திருக்கும் இடங்களில் கும்பல் சேருவதற்கு காத்திருந்து, எதிர்பார்த்த அளவு கூட்டம் சேராவிடில் சாலையைக்கடக்கும் விளக்கு ஒளிர்ந்தாலும் உயிருக்குப்பயந்து சாலையைக்கடக்காமல் இருக்கிறோம். ஏனென்று நான் சொல்லாமலே உங்களுக்குப்புரிந்திருக்கும். காலையில் விழிக்கும்போதே, இன்று இத்தனைபேரை துவம்சம் செய்வது என்று முடிவெடுத்தமாதிரியல்லவா வாகன ஓட்டிகள் ஓட்டுகிறார்கள்.

இதற்கிடையில், நாம் சாலையில் கால்வைக்க இஷ்டப்படுகிறோமோ இல்லையோ, நடந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கும் சாலைப்பணியாளர்கள். என்னமோ அவங்கப்பன் கட்டின நடைபாதை மாதிரி பகல்வேளைகளில்தான் சாலையிலும் நடைபாதையிலும் ரிப்பேர் செய்யும் பணியாளர்கள், தண்ணீர் பைப் சரி செய்பவர்கள் என்று எத்தனைபேர்.



என்னடா ஒரே புலம்பல் புராணமாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? உங்களில் பலருக்கும் மேற்சொன்ன விஷயங்கள் அத்துபடியாக இருக்கலாம். உங்களில் சில அட நம்ம சிங்கார சென்னை என்று நினைக்கலாம்.

நண்பர்களே அப்படி நினைத்தால், உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். இது சென்னையை பற்றிய செய்திக்கட்டுரை அல்ல.



இங்கு மான்ரியலில் நேற்று நகரின் மத்தியபகுதியில் குறிப்பிட்ட பகுதியில் காலை பத்து மணியில் இருந்து மாலை மூன்று மணிவரை வாகனங்கள் ஓட்டக்கூடாது என்று சட்டம். (அது என்ன நேரக்கணக்கோ தெரியலை. அலுவலகம் வர்ரவங்க எல்லாம் பத்து மணிக்கா வருவாங்க. எல்லாம் சும்மா பம்மாத்துன்னு நான் மட்டும் சொல்லலை. நிறையப்பேர் சொல்லுறாங்க.) வாகன நெரிசலில் அவதிப்படும் நகரங்கள் வரிசையில் சேர்ந்து வெகு விரைவாக முன்னணிக்கு முந்திக்கொண்டிருக்கும் சிறிய தீவு மான்ரியல். அக்கம்பக்கம் சுற்றி இருக்கும் இடங்களில் இருந்து காலையில் இங்கு வந்து விட்டு மாலையில் வீட்டை நோக்கி ஊரும் பறவைகள் இங்கு அதிகம். அதுவும் தீவு என்றபடியால், காலை, மாலை வேளைகளில் இங்கிருக்கும் பாலங்களில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பது நிதமும் நடக்கும் விஷயம். எனவேதான் பரிசோதனை அடிப்படையில் முதலாவது கார்-·பிரீ டேயை மான்ரியல் வெள்ளோட்டம் விட்டது. இது விஷயமாக எட்டுநாள் விவாதத்தை இங்கிருக்கும் ஆங்கில தினசரி - Gazette ஏற்பாடு செய்திருந்தது. முதல் நாளன்று முதல்பக்கத்தில் வந்த செய்தியில் தமிழாக்கத்தைத்தான் உங்களுக்கு மேலே தந்திருக்கிறேன்.

Thursday, September 18, 2003

தமிழில் Open Office 1.1



உங்களுக்கு Sun Microsystemத்தின் ஆதரவோடு வெளிவந்திருக்கும் Open Office பற்றித்தெரிந்திருக்கும். M.S.Office போன்ற, ஆனால் *இலவசமாக* கிடைக்கக்கூடியது இது. இதைப்பற்றி தெரிந்து கொள்ள, வலையிறக்கம் செய்து கொள்ள - http://www.openoffice.org/

சரி கணினியிலும் இணையத்திலும் கிடைக்கக்கூடிய தமிழ் செயலிகள் பற்றித்தானே இங்கே பேசுவதாக சொன்னேன். இப்போது ஏன் Open Office பற்றிப்பேசுகிறேன் என்று யோசிக்கிறீர்களா? காரணம் இருக்கிறது.

தற்போது வெளிவந்துள்ள Open Office 1.1 தொகுப்பில் யூனிகோட் தமிழை சிறப்பாக உபயோகிக்கமுடிகிறது. Open Office 1.1 தொகுப்பை http://www.openoffice.org/ என்ற சுட்டியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இதுக்கே ஆச்சரியப்பட்டா எப்படி, இன்னும் விஷயம் இருக்கு. இந்த Open Office 1.1 உபயோகித்து Win98 கணினி வைத்திருப்பவர்கள்கூட யூனிகோடில் எழுதலாம். Open Office 1.1 உபயோகித்து தமிழில் எழுதுவதற்கு தேவை எ-கலப்பையும் - http://tamil.net/newtamil/ekalappai_1.html எ-கலப்பைக்கான யூனிகோடு டிரைவருந்தான். இதை ஈ-உதவி குழுவின் கோப்புகள்(Files) பகுதியிலிருந்தோ, http://thamizha.com/downloads/unicodetamil.zip இருந்தோ இறக்கிக்கொள்ளலாம்.

எ-கலப்பை + Open Office 1.1 கொண்டு விண்டோஸ்98 இயங்குதளங்களில் எளிமையாக தமிழ்யூனிகோட்'ஐ பாவித்து சொல் அவணங்கள் (word), விரிதாள்கள் (spreasheet), presentation material , html கோப்புகள் அனைத்தையும் யூனிகோட் தமிழில் எழுதலாம். இதே போல் முரசு + ஓப்பன் ஓ·பீஸ் 1.1 கொண்டும் விண்டோஸ் 98 இயங்குதளங்களில் தமிழ்யுனிகோட் எழுதமுடியும் என்றுm திரு.முத்து அவர்கள் தெரிவித்தாக எ-கலப்பை உருவாக்கிய குழுவின் முக்கிய உறுப்பினர் முகுந்த்ராஜ் தெரிவிக்கிறார்.

அப்புறம் என்ன இன்னும் யோசிக்கறீங்க.... இப்பவே யூனிகோடுக்கு மாறிடுங்க.. இல்லை...இல்லை... மாறிடலாம்.... :)

எ-கலப்பை, 'தமிழா' உலாவி, ஓபன் ஆ·பீஸ் 1.1 பயன்படுத்துவதில் ஏதாவது சிக்கல் இருந்தால், e-Uthavi@yahoogroups.comக்கு எழுதுங்கள். முகுந்த்க்கும் எழுதலாம்.


Tuesday, September 16, 2003

கடந்த வாரம்...



கடந்த சிலதினங்களாக எனது வலைப்பதிவில் எழுதிய விஷயங்களை அசைபோடலாம் என்று நினைக்கிறேன். இணையத்தில் தமிழ் படிக்கமுடியும் என்று 1995 ஆண்டு நான் பணிபுரிந்த நிறுவனத்தில் அறிந்தபோது மிகவும் ஆச்சரியப்பட்டேன். அப்போது நானும் இணையத்தில் தமிழில் எழுதி ஒரு வலைபதிவு வைத்திருப்பேன் என்றெல்லாம் நினைக்கவேயில்லை. கடந்த சிலமாதங்களாக எழுதி வருகிறோமே, அதுவும் யாகூ இணையக்குழுக்களில் சேர்ந்த பிறகு. அக்குழுக்களில் சேர்ந்தபிறகு, தொழில்நுட்பரீதியாகவும், தமிழை ஓரளவு பிழையின்றி எழுதுவதற்கும், அருமையான விஷயங்களை கற்றறிந்தோரிடமிருந்து அறிந்து கொள்ளவும், அந்த கற்றறிந்தோருடன் கடிதப்போக்குவரத்து வைத்துக்கொள்ளவும் முடிந்தது. சரி நமக்குத்தெரிந்த விஷயங்களை பிறரிடம் பகிர்ந்துகொள்ளலாமென்று கடந்த வாரம் ஏற்பட்ட ஒரு உந்துதலின் விழைவாகவே சமீபத்தில் எனக்குதெரியவந்த சில தமிழ் இணைய தொழில்நுட்ப வளர்ச்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

இதுவரை பகிர்ந்து கொண்டவை

1. 'தமிழா' உலாவி பற்றி - http://mathykandasamy.blogspot.com/2003_09_07_mathykandasamy_archive.html

2. 'தமிழா' உலாவி Win 98 வைத்திருப்பவர்கள் கணினியில் சரிவரத்தெரியாது. சரியாக தெரிய செய்யவேண்டிய சிறு மாறுதல்கள் - http://mathykandasamy.blogspot.com/2003_09_09_mathykandasamy_archive.html

3. Win 98 கணினியில் யூனிகோடு தமிழ் எழுத்துருவும் சரிவரத்தெரியாது. அதனால் எல்லாரும் 'உஜாலாவுக்கு மாறுங்கள்' என்று Win 2000க்கோ, Win XPக்கோ மாறிவிட முடியுமா? இல்லைத்தானே. பிரச்சினைகளை ஓரளவு சரிசெய்ய திரு.சுரதா அவர்கள் உருவாக்கி இருக்கும் சில செயலிகளைப்பற்றி எழுதினேன் - http://mathykandasamy.blogspot.com/2003_09_12_mathykandasamy_archive.html

4. நான் பாட்டுக்கு யூனிகோடு யூனிகோடு என்று பேசிக்கொண்டு போகிறேனே. அது என்னவென்று தெரியாதவர்களுக்கு 'மரத்தடி' நண்பர் கிருபா எழுதிய அருமையான விளக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் - http://mathykandasamy.blogspot.com/2003_09_14_mathykandasamy_archive.html

நாளையும் இங்கு சிலவிஷயங்கள் பகிர்ந்துகொள்ளப்படும். ஆகவே மறக்காமல் ஒரு நடை வந்து எட்டிப்பாருங்கள் நண்பர்களே!

Sunday, September 14, 2003

தமிழில் யூனிகோடு - ஓர் விளக்கம்



என்னமோ யூனிகோடுன்றாங்க. கத்தரிக்காய்! ஒரு எழவும் புரியலை. இதுக்கு கனகதாரா ஸ்தோத்திரத்தையே கத்துக்கிட்டு பாராயணம் பண்ணிடலாம்னு நினைக்கிறீங்களா? :D உங்களுக்காக 'மரத்தடி' நண்பர் கிருபாஷங்கர் நகைச்சுவை கலந்து அருமையான விளக்கம் தந்துள்ளார். படித்து முடித்ததும் உங்களின் மேலான கருத்துகளை அளியுங்கள்.

<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>


க்ருபா எப்பொழுதுமே சாது. யார் வம்புக்கும் போகாத, யாரையுமே கலாய்க்காத ஒரு 10.5 change gold (பத்தரை மாத்து தங்கம்). ஆனால் முகுந்தராஜைக் கலாய்க்க ஆரம்பித்த ஜெயசிறீயின் மடலைப் பார்த்ததும் நேரே ஜெயசிறீயின் வீட்டுக்கு டி.எஸ்.எல் கனெ‡ன் வேகத்துக்கு ஓடினான். நொடியில் ஜெயசிறீயின் வீட்டு வாசலில் பதிவிறக்கம் (download) ஆகிவிட்டான். உள்ளே "ஷங்கர்க்ருபா" என்ற நுழைவுச்சொல்லுடன் (username) ஜெயசிறீ ஒரு கையில் அருவாள்மனையுடனும் இன்னொரு கையில் கத்திரிக்காயுடணும் என்றார். எதுவும் பேசாமல் ஒரு கடவுச்சொல் (password) மட்டும் சொன்னான் க்ருபா. மறுத்துப் எதுவும் ஜெயசிறீ மும்முரமாக கனகாதார ஸ்தோத்ரத்தை முணுமுணுத்தார்.

"சம்பத்‡ராயீ சகலேந்த்ரியானந்தானி சம்ராஜ்யதானவிபாவானி...."

"நான் மொதல்ல பேசாமதான் இருந்தேன், தலைகள் இருக்க (முகுந்த் & சுரதா) வால்...இல்லை, தூசி எதுக்கு ஆடணும்னு. எப்போவுமே பெரியவங்க விஷயத்துல தலையிடாத ஒரு சாதுவைத் தட்டி எழுப்பிட்டீங்க. ஆனா பாருங்க, நீங்களே இந்த யூனிகோட் விஷயத்துல வாயைக் குடுத்து மாட்டிண்ட்டீங்க..." என்று ஏதேனும் பதிலை எதிர்பார்த்தான்.

ம்ஹ¥ம்... ஒன்றும் பதிலே இல்லை. அதற்காக க்ருபாவை ஜெயசிறீ வெளியிலும் தள்ளவில்லை. (முகுந்தராஜ் அனுப்பிய யூனிகோட் பிரதிநிதி என்பதால் இருக்கலாம்.)

ஒரு வழியாக பேச ஆரம்பித்தார் ஜெயசிறீ.

"வணக்கம். வந்து தொலைச்சுட்டயா.... வா வா.. என்ன வேணும்?"

"என்னமோ கத்தரிக்காய் கனகதார ஸ்தோத்ரம் மட்டும்தான் தெரியும்னு சொன்னீங்களாம்... யூனிகோட் எல்லாம் புரியாலையாமே உங்களுக்கு?"

"நன் ஆ·ப் யு'ர் பிஸ்னஸ்...ஷட் யுவர் மௌத்."

"சட்டிப்பானை கவுத். டேக் யுவர் குடுமி அண்ட் கெட் அவுட்." என்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பதிலளித்தான்.

அய்யோ.. பெரிய ஆங்கில வித்து போல என்று பயந்த ஜெயசிறீ தமிழுக்கே மாறினார்.

"சரி, சரி. எனக்கு அவ்வளவுதான் தெரியும். யார் புரியற மாதிரி சொல்வா? ஆனா நீ முகுந்தைவிட மோசம். நம்ப சுரதா இல்லாட்டி ராஜாகிட்ட கேட்டுக்கறேன்."

"ஐ... அது எப்படி. புரியலைன்னு சொன்னப்பறமும் புரியவிட்டுடுவேனா என்ன. அதுவும் கணினித்தமிழ் புரியவே இல்லைன்ன ஒடனே... புரிய வைக்கத்தான் வந்துருக்கேன்."

"ஓ.. சார், நீங்கதான் விளக்க போறீங்களாக்கும்?" என்றார் ஜெயசிறீ.

"இல்லை... முகுந்தான் சொல்லப்போறார்." என்றான்.

"நீதானே இந்த மடலை அனுப்பற? எப்படி முகுந்த் சொல்வார்?"

"நான் டைப் அடிச்ச முகுந்த் பேச முடியாதா என்ன?"

ஒன்றும் புரியாமல் விழித்த ஜெயசிறீயின் முன்னால் முகுந்த் ஈ-கலப்பயுடன் பரசுராமர் ஸ்டைலில் தோன்றி,

"பக்தையே... கனகாதாரா ஸ்தோத்ரம் கேட்டு மகிழ்ந்தோம். நீ வேண்டும் வரம் கேள்" என்றார்.

சரிதான்... மரத்தடியில் மொத்தம் ரெண்டு லூசுகள் என்று கணக்கு வைத்துக்கொண்ட ஜெயசிறீக்கு ஆச்சர்யம் திடீரென. அங்கெ ஜேபியும் கூடவே முகுந்தராஜின் பக்கத்தில் நின்றார். உடனே ஜெயசிறீக்கு கொஞ்சம் ஆச்சர்யம் வந்தது, கூடவே கொஞ்சம் நம்பிக்கையும்.

"வீக்கெண்ட்ல நானும் முகுந்தும் எப்பவும் சேர்ந்துதான் ஹோட்டல் போகறது, ரேடியோ கேக்கறது, சினிமா பாக்கறது எல்லாம். ஒரு விதாயாசமா இருக்கட்டுமேன்னு இங்க வந்தேன்." என்று விளக்கினார் ஜேபீ சான். பிறகு முகுந்தின் காலட்சேபம் தொடங்கியது.

"சரி, இந்த கூடைல பற்பல கத்திரிக்காய்கள் இருக்கே, இதே மாதிரிதான் மின்னொரு காலத்தில் தமிழ் எழுத்துருக்கள் பல தனித்தனியாக இருந்தன. எழுத்துருன்னா ·பாண்ட்-னு சொல்வோம்."

சமைக்கும்போதே முகுந்தராஜ் பேசுவதைக்கேட்டு ஜெயசிறீக்கு அலுவலக நினைவு வந்துவிட்டது, அதாவது கொட்டாவி வந்துவிட்டது. ஆனால் முகுந்த் விடுவதாக இல்லை.

"பல எழுத்துருக்கள் இருந்தாலும் ஒவ்வொரு எழுத்துருவும் தங்களுக்குல் விதவிதமான எழுத்து அமைப்பைக் கையாண்டன. அதாவது என்கோடிங்க். அதனால, ஒரு எழுத்துருவைப் பயன்படுத்தி எழுதியதை இன்னொரு
எழுத்துருவைக் கொண்டு படிக்க முடியாது."

"அது ஏன் அப்படி?" கடனே என்று கேட்டு வைத்தார் ஜெயசிறீ.

ஜேபிக்கு ஏன் இங்கே வந்தோம் என்று ஆகிவிட்டது. க்ருபா அறையை நோட்டம் விட ஆரம்பித்தான். டைனிங்க் டேபுள் முழுக்க ·பில்ட்டர் கா·ப் மயமாகவே இருந்தது. ஒரே ஒரு டம்ப்ளரில் மட்டும் தான் கொடுத்த கரும்பு ஜூஸ் அப்படியே இருந்தது. எப்படியும் இவர்களின் என்கௌண்டர் முடிந்ததும் யாரேனும் ஒருவருக்குத் தேவைப்படும் என்று க்ருபா அதை பத்திரமாக எடுத்து வைக்கப்போனான்.

முகுந்த் தொடர்ந்தார்...

"என்ன பிரசன்னான்ன, சாரி... என்ன ப்ரச்சனைன்னா, ஒரு எழுத்துருல 'a' அப்டீன்னு அடிச்சா 'க' அப்டீன்னு வெளியீடு (output) திரைல வரும். இன்னொரு எழுத்துருல அதே 'a'வை அடிச்சா, 'ய'னு வெளியீடு வரும். உதாரணத்துக்கு, இப்போ 'புத்தி
சாலி' அப்டீன்னு ஒரு எழுத்துருல அடிச்சுட்டு, இன்னொரு எழுத்துருவைக் கொண்டு அதைப் பாத்தா 'முட்டாள்'னு வெளியீடு கிடைக்கும்."

"ஓ.. அதாவது க்ருபா-வோட பேரு...சரியா?" என்று க்ருபாவைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தார் ஜெயசிறீ.

அதற்குள் அருகிலிருந்த ஜேபீ குறுக்கிட்டார்.

"கரக்ட்... க்ருபா பேரை ஒரு ·பாண்ட்-ல அடிச்சா, உங்க பேரு இன்னொரு ·பாண்ட்-ல தெரியும்."

நன்றியுடன் ஜேபீ-யைப் பார்த்தான் க்ருபா.

"நீங்க வெச்ச ரசம் வண்டல் தங்கி கொழம்பு மாதிரி இருக்குன்னு சொன்னா எப்படி இருக்கும்? இப்படி ஒரு ப்ரச்சனைல இருந்துது தமிழோட நிலைமை." என்றார் முகுந்த்.

அதற்குள் ஜெயசிறீ கத்தரிக்காயை நறுக்கி முடித்துவிட்டு, ரசமும் கத்தரிக்காய்க்கறியும் சமைக்க ஆரம்பித்திருந்தார். இவர்கள் சொல்லியது உள்ளுக்குள் ஏதோ பொறி தட்டியது. 'சீ, சீ... அப்படியெல்லாம் இருக்காது' என்று எதையோ நினைத்து சமாதானமும் சொல்லிக்கொண்டார். முகுந்த் மெதுவாக சிரித்துவிட்டுத் தொடர்ந்தார்.

"a, b, c, d, போன்ற எழுத்துக்கள் இருந்த இடத்தில் தமிழ் எழுத்துக்களை வெச்சதால வந்த பிரச்சனை அது. அதனால மக்கள் யோசிச்சாங்க. ஒரு ஐடியா பண்ணினாங்க. ஆங்கில எழுத்து a to z, அப்பறம், A to Z, அப்பறம், #, @, ! மாதிரி ஸ்பெஷல் கேரக்டர்ஸ் மாதிரி எல்லா எழுத்துக்குமே கொடுத்த இடம் போக மிச்சம் கொஞ்சம் எடம் இருந்துது. அந்த இடங்களை எல்லாரும் ஒரே மாதிரி தமிழுக்காக பயன் படுத்திக்கலாம்னு ஒரு முடிவெடுத்தாங்க."

"அய்யோ... சுத்தம், சுத்தம். ஏதோ புரியற மாதிரி இருந்துது. இப்போ எல்லாம் போச்!" என்று சொல்லி இவர்களிடமிருந்து விடுதலை கிடைக்கும் என்று எஸ்கேப் ஆகப்பார்த்தார் ஜெயசிறீ.

"இல்லங்க ஜெயசிறீ. கொஞ்சம் விளக்கமா சொல்ல ட்ரை பண்றேன். ASCII-னு ஒரு என்கோடிங்க் ஸ்கீம் இருக்கு.. எல்லாரும் இப்போ அதைதான் பயன்படுத்தறோம். அமெரிக்க பல காலமும், பணமும் செலவழிச்சு இந்த என்கோடிங்கை அடைஞ்சுருக்காங்க. இதன்படி, A என்ற எழுத்தின் மதிப்பு 95, Bயின் மதிப்பு 96, Cயின் மதிப்பு 97... இப்படி போய்க்கொண்டே இருக்கும். அப்பறம் a-யின் மதிப்பு 65, b-யின் மதிப்பு 66, etc. இதே மாதிரி. ஆக, ஆங்கில எழுத்துக்களுக்கு ஒதுக்கின எடம் போக ஒரு 128, 129க்கு அப்பறம் எல்லா எடமும் ·ப்ரீதான். அதைப் நம்ப தமிழுக்கு
பயன்படுத்திக்கற ஒரு ஐடியா தோனிச்சு.."

ஒரு வேளை அந்த விளக்கவும் மின்னஞ்சலை அனுப்பியே இருக்ககூடாதோ என்று ஜெயசிறீக்குத் தோன்றியது. வீட்டுக்குள் செருப்பு எல்லாம் போட்டுக்கொளும் பழக்கம் இல்லததால், கையாலேயே தலையில் அடித்துக்கொண்டார்.

"சரி.. அப்படி அந்த ·ப்ரீயான எடத்த பயன்படுத்திக்கற ஒரு என்கோடிங்க் ஸ்கீம்தான் டிஸ்கி (TSCII)." என்று முகுந்த் மேலும் தொடர்ந்தார்.

"ம்ம்.. சரி, சரி.. எனக்கு எல்லாமே இப்போ புரிஞ்சுது. போதும். நாளைக்கு நாம பாக்கலாமா? கொஞ்சம் ·ப்ரீயா பேசிக்கலாம்?" என்று கெஞ்சாத குறையாகக் கேட்டார் ஜெயசிறீ. முகுந்த் விடுவதாக இல்லை.

"சரி.. இப்படியாக, எடம் ரெடி பண்ணியாச்சு. அதன்படி, 171-வது எடம், தமிழ் எழுத்து 'அ'வுக்கு. 172-வது எடம், 'ஆ'வுக்கு. 173 'ஈ'க்கு. அப்படியே போகும்." ஜெயசிறீ டென்ஷன் ஆகிவிட்டார்.

"யோவ்.. என்னயா வளையாடற? எனக்கு தலைல பூ வெச்சுதான் பழக்கம். 173-னு நம்ப கம்பூட்டர்ல அடிச்சா, 'இ'னு வருமா? அப்போ '171'னு அடிச்சா 'அ'னு வருமா? போய்யா டுபாக்கூரு.. அப்போ உண்மைலயே '171'ங்கற நம்பரை அடிக்க என்ன பண்றதாம்?"

"அய்யோ. அப்படி இல்லை. நல்லா ஞாபகப்படுத்திப்பாருங்க... 65-லருந்துதான் ஆங்கில எழுத்து A ஆரம்பிக்கறது. 1-லிருந்து 9வரைக்கும் அதுக்கு முன்னாடி உள்ள எண்கள்தான். 49-ங்கற எடம், 1-ங்கற எண்ணுக்கு. 50-ன்னா, 2. 51-ன்னா மூணு."

"ஐயோ... தலை சுத்தர்தே எனக்கு....கடவுளே!!!!" என்று அலற ஆரம்பித்தார் ஜெயசிறீ.

முகுந்த் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.

"சரி.. இப்போ 1-ல இருந்து 129, 130 இடங்கள் வரைக்கும் நம்ப விசைப்பலகைலயே வர வெச்சுடலாம்... A-ங்கற விசையை நீங்கள் அழுத்தினால், 65-ங்கற மதிப்பு உங்க கணிப்பொறி இயங்குதளத்துக்கு (operating system like Windows, Linux, etc) போய்சேரும். ஆக, 1-ங்கற விசையை நீங்க அழுதினா, 49-ங்கற மதிப்புதான் போய் சேரும்."

"சரி.. அப்போ 171-ங்கற மதிப்பு போய் சேந்து 'அ'ங்கற எழுத்து வரர்துக்கு என்ன பண்னனும்?"

"ஆஹா.. என் ஜென்மம் சாபல்யம் அடைந்து விட்டது..." என்று முகுந்தராஜ் ஒரே குதியாக குதிதுவிட்டு தொடர்ந்தார்.

"இது கேள்வி.. நல்ல கேள்வி. அந்த மதிப்பை உள்ளீடு பண்றதுக்குதான் ஈகலப்பை, முரசு மாதிரி மென்பொருட்கள் எல்லாம். இது என்ன பண்ணும் தெரியுமோ?" என்று தூண்டில் போட்டார்.

அதற்குள் அடுப்பில் கொதி வந்துவிட்டது. அடுப்பின் அருகே போய் ரசத்தை இறக்கி வைத்தார்.

முகுந்த் ஒரு தடவை சொடுக்கு போட்டார்...

"பாத்தீங்களா... இப்போ என்ன பண்ணினீங்க?"

"ரசத்தை இறக்கிவைத்தேன்...கொதி வந்ததால" என்றார் ஜெயசிறீ.

"அதாவது, எப்போ கொதி வரும்னு எதிர்பாத்து, கொதி வந்ததும் எறக்கிட்டீங்க.. இல்லையா?"

"ஆமாம்..."

"இதே மாதிரிதான் இ-கலப்பையும். நீங்க டைப் அடிக்கறதை கவனிச்சுப் பாக்கும்.. அது எதிர்பாக்கற எழுத்து காம்பினேஷன் வந்தா, ஒடனே அந்த குறிப்பிட்ட எழுத்தை திரையில் காமிக்கும்.. அதாவது அந்த குறிப்பிட்ட அப்ளிகேஷனுக்கு 171, 172, 173, etc. மதிப்புக்களை அனுப்பும். நீங்க "a"னு அடிச்சா, "அ"னு திரைல தெரியும். அதுக்கு அர்த்தம் என்னன்ன, 171-ங்கற மதிப்பு அந்த செயலிக்கு அனுப்பப் பட்டு இருக்குன்னு புரிஞ்சுக்கணும்."

"அப்போ நெஜமாவே ஆங்கில a-னு அடிக்க நெனச்சா?"

"அதுக்குதான் இந்த ஹாட்-கீ. Alt-1 அழுத்தினா ஆங்கிலமும், Alt-2 விசைகளை அழுத்தினா தமிழ்-லயும் தொடரலாம். அதாவது, ஆங்கிலம் செயல் நிலைல இருக்கும்போது, நீங்க அடிக்கறது அப்படியே திரைக்கு வந்துடும். 171, 172, 173 மாதிரி எந்த மதிப்புக்கும் மாறாமல் நேரடியா போய்டும். Alt-2 விசை அழுத்தப்பட்டு தமிழ் இயக்கநிலைல இருக்கும்போது,
the-னு அடிச்சா, 'தெ'னு மாறி தமிழ்ல தெரியும்."

பிறகு சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு மறுபடியும் தொடர்ந்தார்.

"ஆக, நீங்க விரும்பற எழுத்து காம்பினேஷன்ல நீங்க விரும்பிய எழுத்தைத் திரைல தோன்ற வைக்கறதுதான் கீ-போர்ட் ட்ரைவர், அதாவது ஈகலப்பை, முரசு அஞ்சல் போன்ற செயலிகள். இந்த அடிப்படைல, 'a'னு அடிச்சு 'ய'ன்னு வரவழைக்கலாம். இது பழைய டைப்ரைட்டர் விசைப்பலகை முறை. 'a'னு அடிச்சு, 'அ'னும் வரவழைக்கலாம், இது அஞ்சல் விசைப்பலகை முறை. இப்படி பல விசைப்பலகை முறைகள் இருக்கு. ஆரம்பத்துக்கு ரொம்ப ஈசின்னா அது இந்த ·போனடிக் முறைதான்.
எதுவும் புரியலைனு சொல்லிடாதீங்க ப்ளீஸ்... அப்பாலிக்கா நான் துரியன் பழம் சாப்டாதான் மனசே ஆறும்..." என்று முகுந்த் கவலையுடன் சொன்னார்.

"ஹ¥ம்.. சரி, சரி.. மேல சொல்லுங்க.. எல்லாம் புரிஞ்சுது. அதான் டிஸ்கி இருக்கே, அப்பறம் யூனிகோட் வேற எதுக்கு?" என்று லுலுலுவாக்காட்டிக்கு சொல்லி சமாதானப்படுத்தினார் ஜெயசிறீ.

"சரி, ஏதாவது திங்கறதுக்கு இருக்கா?" என்று க்ருபா ஆவலுடன் ஜெயசிறீயிடம் கேட்டான். கையில் கரும்புச்சாறு இருந்தது. யாருமே எந்தவித சண்டையிலும் இன்னமும் ஈடுபாடாதது வேறு பெரும் வயிற்றெரிச்சலைக் கிளப்பிவிட்டது க்ருபாவுக்கு.

ஹ¥ம்ம்... இது ஒன்னும் கதைக்கே ஆகாது என்று ஒரு முடிவுக்கு வந்தான். பளார் என்று யாருடைய
கன்னத்திலாவது அறைந்துவிட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டு கரும்பு ஜூசைக் குடித்துவிடலாம் என்று முடிவு
செய்தான். அந்த வேளையில்....

வாசலில் சுந்தரின் காலடி ஓசை...

வந்ததும் சுந்தரின் கண்னில் முதலில் பட்டது ஜேபீதான். உடனே சுந்தருக்கு குஷி...

"ஹாய்டா மச்சி... எப்டி இருக்க?" என்றதை ஜேபீ பார்த்தார்... தன்னைத்தான் இவ்வளவு மரியாதையாக அழைக்கிறார் சுந்தர் என்று பெரும் அதிர்ச்சி உண்டாயிற்று...

"என்ன, என்ன.. என்னையா இப்டி கூப்ட்டீங்க?" என்று அதிர்ந்தார்.

"அட ஆமா நீங்கதான சொன்னீங்க.. சார், ஐயா-னு எல்லாம் யாரும் என்னைக் கூப்ட வேணாம்னு... அதான் ரொம்ப க்ளோஸா இப்டி கூப்ட்டேன்..."

"என்ன இருந்தாலும், நான் வயசுல ரொம்ப பெரியவன்...." என்று இழுத்தார்.

"இருக்கலாம். ஆனால் நாங்க எல்லாம் உங்களை மனதால் இளைஞர்களாவேதான் இன்னும் நினைக்கிறோம், எங்களில் ஒருவராக.."

இதற்கு மேலும் சுந்தரிடம் பேசுவது தனக்குத்தானே தோண்டிக்கொள்ளும் டிச் என்று ஜெயசிறீ பக்கம் திரும்பி
விட்டார். பிறகு ஜெயசிறீயிடம் அவரே பேச ஆரம்பித்தார்.

"என்ன கேட்டீங்க ஜெயசிறீ... எதுக்கு யூனிகோட்னுதான? நானே சொல்றேன். இப்படி நாம 171=அ, 172=ஆ, 173=இ, etc. இப்டீன்னு நமக்கு ஒரு வழி பண்ணிண்ட்டோம், இல்லையா? இதே மாதிரி உலகிலுள்ள நறைய மொழிக்காரங்க அவங்கவங்க மொழிக்கு இதே மாதிரி பண்ணிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆக, மறுபடியும் back to square one. ஒவ்வொரு மொழி ·பாண்ட்லயும் ஒரு மாதிரி தெரியும். இதனால ஒரு ஒருங்கினைப்பு இருக்காது."

"சரி... அப்போ ஒவ்வொரு மொழிக்காரங்களுக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட எழுத்துக்குக்கு இடம் எடுத்துண்டா? தமிழ்ல மொத்தம் 247 எழுத்து.. 171-ல இருந்து ஒரு 247 எழுத்து தமிழுக்கு, அப்பறம் கொஞ்சம் எழுத்து தெலுங்க்கு, அப்பறம் ஹிந்திக்கு, அப்பறம் ·ப்ரெஞ்சுக்கு, அப்பறம் ஜெர்மனிக்கு.. அப்படி பண்ணினா ஒரு ப்ரச்சனையுமே இருக்காது இல்ல?" என்றார் கொஞ்சம் புரிந்தும் புரியாததுமாக ஜெயசிறீ.

"இங்கதான் ஒரு ப்ரச்சனையே இருக்கு... மொத்தம் காலியா இருக்கற எடமே 255 வரைக்கும்தன். இன்னும் அதிகம் எடம் வேணும்னா அதுக்கு இந்த ASCII/TSCII என்கோடிங்க் எல்லாம் பத்தவே பத்தாது. இப்படி எல்லா மொழிக்கும் எடம் தரர்துக்கு ஒரு என்கோடிங்க் ஸ்கீம் இருக்கு. அதுக்கு பேருதான் யூனிகோட்." என்று மீண்டும் விளக்க ஆரம்பித்தார் முகுந்த்.

"சரி, இந்த யூனிகோட் பயன்படுத்தறதால என்ன நமக்கு நன்மை?" என்று சந்தேகத்துடன் கேட்டார் ஜெயசிறீ.

"அவலோகயமாம் அகின்சனானாம் ப்ரதமம் பாத்ரமக்ர்த்ரிமம் த்யாஹா-னு கனகதார ஸ்தோத்ரத்துல சொல்றோமே, இல்லையா? அவலோகயமாம் அகின்சனானாம் ப்ரதமம் பாத்ரமக்ர்த்ரிமம் த்யாஹா என்று உலக அரங்கில் கருணைப்பார்வை கேட்டு, யூனிகோடின் தயைக்கு பாத்திரம் ஆகும்படி ஏழைத்தமிழ் ஏங்கியது. யூனிகோடில் தமிழுக்கும் ஒரு இடம் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன். இப்படி உலகோட ஒத்துவாழறதுனால நமக்கு பல நன்மைகள் இருக்கு." என்று ஜேபீ எடுத்து சொன்னார்.

க்ருபா எதாவது சீரியஸாக பேச எண்ணி,

"விண்டோஸ் 98'ல இந்த கீ-போர்ட் ட்ரைவரும் செயல்படாது. அதுக்கு நம்ப சுரதா ஸ்பெஷலா ஒரு செயலி பண்ணியிருக்கார். மற்ற இயங்கு தலத்துல இயங்க நம்ப முகுந்த் ஈகலப்பைல களாசி இருக்கார் கலாஸி.. ஆமாம்.... உங்க இயங்குதளம் எது? அந்த ரெண்டு செயலிகளின் இணைய முகவரி வேணுமா?" என்று க்ருபா கேட்டுப்பார்த்தான்.

"டேய் கஸ்மாலம். நீ இங்க வந்ததாலதாண்டா இத்தன ப்ரச்சனையுமே... இன்னா நென்சுனுக்கீற மன்சுல.... ஆங்? ஒரு மின்னஞல்.. ஒரே ஒரு மின்னஞ்சல். அதுக்காக இப்படி இவ்வளவு பெர்ர்ர்ரிய மடல்.... நீ நாசமா போக! ப்ளேடு தாங்க முடியலை....மவனே சகிக்கல... நீ கண்டி இனிமே என்னொட கண்ல படு, பட்ட கீசு தோல ஊர்கா போட்டுடுவேன் ஜாக்கரதை." என்று சென்னைத்தமிழில் சீறினார் ஜெயசிறீ.

யூனிகோட் புரியாவிட்டாலும், சென்னைதமிழாவது ஜெயசிறீக்கு வந்துவிட்டதே என்று மகிழ்வுடன் இடத்தைக் காலி செய்து உயிரைக்காப்பாற்றிக்க்கொண்டான் க்ருபா...இன்னுமும் முழுதாக யூனிகோட் பற்றி விளக்கமுடியாத குறையுடனேயே முகுந்தும் ஜேபீயும் அங்கிருந்து வெளியேறினர். சுந்தருடைய செல் ·போனில் ப்ரபா தொடர்புகொண்டு ஒரு கேள்வி கேட்டார்...

"சுந்தார், யூனிகோட்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணமுடியுமானு கொஞ்சம் யார்கிட்டயாவது கேட்டு சொல்றீங்களா?" என்று ஏக்கத்துடன் கேட்டார் சக்தி எனப்படும் ப்ரபா.


சு. க்ருபா ஷங்கர்


<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>

யூனிகோடு எழுத்துருக்கள்


முரசு யூனிகோடு இணைமதி - முரசு செயலியோடுதான் செயல்படும்.

யூனிகோடு ஆவாரங்கால்

யூனிகோடு இளங்கோ எழுத்துரு

Code 2001 தமிழ் யூனிகோடு எழுத்துரு

தேனி யூனிகோடு எழுத்துரு

Saturday, September 13, 2003

My obsession with 'The Hindu'



இண்டைக்கு 'த ஹிந்து' பத்திரிகை தொடங்கி 125 வருஷம் ஆனதை கொண்டாடீனம். அந்த விழாவுக்கு டெல்லில இருந்து பிரதமர் வாஜ்பாய் வந்திருக்கிறேராம். ஏகதடபுடலாக விழாக்கொண்டாடேக்க ஹிந்து பேப்பர் அதின்ற நூற்றிஇருபத்தி ஐந்து கால வரலாற்றில இருந்து கொஞ்சம் நம்மளிட்ட பகிர்ந்திருக்கு. அதில நல்ல பழைய போட்டோக்களும் இருக்கு.

http://www.hinduonnet.com/th125/index.htm

எனக்கு நல்லா பிடிச்ச பேப்பர்களில ஹிண்டுவும் ஒண்டு. முதன்முதலா நானும் என்ற குடும்பமும் சென்னைக்கு வந்தபோது அப்பாவின்ற ·பிரண்டு வீட்டிலதான் தங்கினனாங்க. அங்க கண்ட பேப்பர்கள்தான் இண்டைக்கும் எங்கட வீட்டில வாங்கீனம். ஹிண்டுவும் தினமணியும். டொக்டர் மாமா (அப்பாவின் நண்பர்) வீட்டில அவரிண்ட பிள்ளைகள் தமிழ்பேப்பரை அவ்வளவு விரும்பி படிக்கமாட்டினம். எங்களுக்கெண்டா தமிழ்தான் நல்லாத்தெரியும். மூண்டுபேரும் அடிச்சுப்பிடிச்சண்டு படிப்பம். இதை ஒரு கிழமையா கவனிச்சண்டு இருந்த டொக்டர் மாமா, ஒரு நாள் பேப்பரை மாத்தி கொடுத்திட்டேர். எங்களை ஹிண்டு படிக்கசொல்லியும் அவையை தமிழ் படிக்கசொல்லியும். நாங்கள் எங்கட பட்லர் இங்கிலிஷில் படிக்கிறதை அவையை இருந்து கேக்கசொல்லி, பிறகு அவையை தினமணியை படிக்கசொல்லியும் சொன்னேர். அம்மு அக்கா பறுவாயில்லை நல்லா வாசிச்சா. ஆனால் குமார்தான் எழுத்துக்கூட்டி சரியாக்கஷ்டப்பட்டு போயிற்றான். பிறகு விக்கியை, குமார் படிச்ச அதே செய்தியை படிக்கசொன்னேர் டொக்டர் மாமா. விக்கிக்கு அப்ப என்ன ஒரு எட்டு வயசிருக்கும். அவ கடகட எண்டு படிக்கிறதை பார்த்து குமாரிட்ட விக்கிற்ற தமிழ் படிக்கசொல்லி சொல்லிற்று போயிற்றேர். அவர் அப்படி சொன்னது எங்களில ஒருத்தருக்கும் பிடிக்கேல்ல எண்டது வேற விஷயம். ஆனால், இண்டைக்கும் விக்கியைக்கண்டா குமார், தன்ற தமிழ் டீச்சர் எண்டு சொல்லுவான்.

பிறகு நாங்கள் பள்ளிக்கூடத்தில சேர்ந்து, தனிவீடு எடுத்து வந்திற்று செஞ்ச முதல் காரியம், பேப்பர்காரனிட்ட பேப்பர் கொண்டுவர சொன்னதுதான். அண்டைல இருந்து இண்டைவரைக்கும் பேப்பர்காரன், ஹிண்டுவும், தினமணியும், மங்கையர்மலரும் போட்டுக்கொண்டு இருக்கிறேர். முதல்முதலா அம்மா வாங்கின இன்னொரு சாமான், இரண்டு இங்கிலிஷ்-தமிழ் டிக்ஷனரி. காலமை பள்ளிக்கூடம் போறதுக்கு முதல் ஒவ்வொருவரும் உக்காந்து கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கோணும் எண்டு உத்தரவு. வாசிச்ச பிறகுதான் தினமணியை தொடலாம். நானும் அரவிந்தனும் மாங்குமாங்கெண்டு ஹிண்டு படிச்சண்டு இருக்கேக்க, அம்மாவும் விக்கியும் சந்தோஷமா தினமணி படிப்பினம். ஹிண்டு படிக்கேக்க முதலில ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் பாத்தண்டு இருந்தனான். பிறகு அது அலுத்துப்போய் இதுவா இருக்குமோ, அதுவா இருக்குமோ எண்டு யோசிக்க ஆரம்பிச்சன்.

முந்தியே வாசிக்கிறதில ஆர்வம் இருந்ததால, போகப்போக காலமை பேப்பர் படிக்காட்டி, கையும் காலுமே ஓடமாட்டுது போல இருக்கத்தொடங்கிற்றுது. அப்பா என்னை வீட்டுக்கு வர்ரவையிட்ட, பேப்பரை வச்சண்டு கவிண்டு கிடக்கிற என்னைக்காட்டி, பென்ஷனியர் மாதிரி முதல் பக்கத்தில இருந்து கடைசிவரைக்கும் படிச்சண்டு இருப்பா, என்று குற்றப்பத்திரிகை சொல்லுற அளவுக்கு ஆகிப்போயிற்றுதெண்டா பாருங்களேன். அதுவும் பொங்கல், தீபாவளி, ஆயுதபூசை மாதிரி நாட்களில ஹிண்டு வராம இருக்கேக்க காலமை எழும்பவே மனசு வராது. ஏதோ ஒண்டை தவறவிட்டதுபோலயும், எப்படா இந்த நாள் ஓடிப்போயிரும் எண்டும் இருக்கும். அதுவும் ஆயுதபூசை அண்டைக்கு ஒண்டும் வாசிக்கவே விடமாட்டினமே அப்ப இன்னும் சரியான கஷ்டமா இருக்கும். பிறகுபிறகு குறுக்குப்புத்தி அதிகமாப்போனபிறகு, இதுக்கெண்டே சுவாரசியமானதை வச்சிருந்து, இது பேப்பர்தான், இது படிச்சா ஒண்டுமில்லை எண்டு சொல்லிற்று படிச்சும் இருக்கிறன்.

இன்னொண்டு சொன்னா சிரிப்பீங்க. நாங்க இருந்த அப்பாட்மெண்டில காலமை ஆறரைக்கு பேப்பர் வரும். கொஞ்சம் முன்னபின்ன இருக்கும். அதுவரைக்கும், மூண்டுபேரும், முன் ஹோலில ஏதோ சீரியசா செஞ்சண்டு இருக்கிற மாதிரி இருப்பம். பிறகு போட்டி கூடிப்போய் ஒரு ஆள் பால்கனில படிக்கிறன் பேர்வழியெண்டு இருக்கும். முதல் பேப்பர் அந்த ஆளின்ற கையில. தினமணி அம்மாவின்ற கைக்குப்போயிரும் - இல்லையெண்டா கொண்டிருவா :p. ஹிண்டு கைக்கு கிடைக்கிற ஆள், சுற்றி நிக்கிற மற்றவையிட்ட, மனசு வச்சு கூட வாற பேப்பர்களை கொடுக்கும். இப்படி பால்கனில இருக்கிற ஆளிட்டயே பேப்பர் போகத்தொடங்கினதால, கதவுக்கு வெளியில இருக்கிற இடத்துல ஒரு ஆள் உலாத்தத்தொடங்கிற்றுது.(நாந்தான். :D). பிறகென்ன பேப்பர் எண்ட கையில. ஆனா, அந்த சந்தோஷமும் நிறைய நாளைக்கு இருக்கேல்ல, நாங்க அடிபிடிபடுகிறதை பாத்திற்று அம்மா, எல்லாரும் ஹோலுக்குள்ளதான் இருக்கோணும் எண்டு சொல்லிற்றா. பிறகு என்ன செய்யிறது. எல்லாரும் ஹோலுக்குள்ள இருப்பம். அதிலயும் இன்னின்ன கதிரைல இன்னார் இருக்கோணும் எண்டும் சட்டம் வந்திற்றிது. :D

இப்ப என்ன செய்யிறது? சரி ஒரு பேப்பர்காரன்தான் தொடர்ந்து பேப்பர் போடுவார். அவரின்ற சைக்கிள் நிப்பாட்டுற சத்தத்தை நல்லா உத்துக்கவனிச்சு, படியேறி வர்ர சத்தத்திலயும் நம்ம பேப்பர்காரன்தான் எண்டு அதை உறுதிப்படுத்தியண்டு பேப்பரை கதவிடுக்கில தள்ளேக்க கோழிக்குஞ்ச பருந்து தூக்குற மாதிரி நிறைய நாளைக்குத்தூக்கி இருக்கிறன். எல்லாம் அந்த அற்புதமான புதுப்பேப்பர் மணத்தோட, மடிப்புக்கலையாம படிக்கிறதுக்குத்தான்! காலமை பேப்பர் வந்த உடன எல்லாத்தையும் விட்டுட்டு பேப்பர் படிக்கிற என்ற பழக்கத்தாலை எங்கட வீட்டில சோதனை நாட்களில ஒண்டு செஞ்சிச்சினம். 10-12 வரைக்கும் நடந்தது இது. சோதனை வர்ரதுக்கு ஒரு மாசம் இருக்கேக்க பேப்பரை நிறுத்திருவினம். பிறகு சோதனை முடிச்ச அடுத்த நாள்தான் பேப்பர் எங்கட வீட்டில இருக்கும். அந்த ஒண்டு-ஒண்டரை மாசம் பேப்பர் படிக்காதது என்னமோ போல இருக்கும். பேப்பர் திரும்பியும் போட தொடங்கினாலும், பழைய பேப்பர் படிக்கோணும், நிறைய விஷயங்களை தவறவிட்டுட்டேனே எண்டு உள்ளுக்குள்ள சொறிஞ்சண்டே இருக்கும். அதுக்கும் வழி கண்டுபிடிச்சன். கீழ் வீட்டிலயும் தனா அண்ணா, ஜனனி அக்கா, அங்கிள் ஆண்டிட்ட சொல்லி, அந்த ஒரு மாசம் வர்ர பேப்பர் எல்லாம் பழைய பேப்பர்காரனிற்ற போடாம பாக்கசொல்லி இருந்தன். :D சரிசரி, இந்த மாதிரி பைத்தியத்தை இதுவரைக்கும் கண்டதில்லை எண்டு நீங்கள் நினைக்கிறது எனக்கு விழங்குது. நான் ஒருமாதிரியான ஆள்தான்! :)

இப்பவும் தினமும் ஹிண்டுல சென்னை/தமிழ்நாட்டு செய்திகள், லை·ப் , மெட்ரோ பிளஸ், சண்டே மகசீன், லிட்டரெரி ரெவ்யூ, ஓப்பன் பேஜ், எடுக்கேஷன், புக் ரெவ்யூ, சயண்டெக், எண்டர்டெயின்மெண்ட். முந்தி படிச்சு, இப்ப படிக்காத பக்கம் யங்வேல்ட் தான்.

ஆ.... முடிக்கிறதுக்கு முந்தி இன்னொண்டையும் சொல்லோணும். இவ்வளவு தூரம் அடிச்சுப்பிடிச்சு படிக்கிற ஹிண்டுவில ஒரே ஒரு விசயம் எப்பயோல இருந்து பிடிக்காது. என்னண்டு எங்கட ஊர்காரருக்கு தெரியும். எத்தனை நாள் இது பற்றி கதைச்சு, சீறியிருப்பம். ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி ஹிண்டுல வர்ர செய்திகளைத்தான் நான் சொல்லுறன். இந்த செய்திகளால், ஹிண்டுவின் மேல் இருக்கிற நம்பகத்தன்மை குறைஞ்சு, இண்டைக்கு அரசியல் பற்றி தெரியோணுமெண்டா 'நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்' எண்டு ஆகிப்போயிற்றுது. இதால ஹிண்டுவுக்கு ஒண்டும் நட்டமில்லைதான். ஆனால், இருநூற்றைம்பதாவது நிறைவு விழா கொண்டாடேக்க ஹிண்டு செய்த தவறுகள் எண்டு இதுவும் வரும். ஏன் இருநூறாவது ஆண்டுவிழா கொண்டாடேக்கையோ, நூற்றிஐம்பதாவது ஆண்டுவிழா கொண்டாடேக்கையோ கூட வரலாம்!!!

Friday, September 12, 2003

திரு.சுரதா அவர்களின் தமிழ் செயலிகள்



விண்டோஸ் 98'ல் யூனிகோடை பயன்படுத்துவதில் பிரச்சினை இருக்கிறது. இது சரி செய்யப்படுமா என்று தெரியவில்லை. யூனிகோடு எழுத்துரு படிக்கமுடியாது, எழுத முடியாது என்று பல பிரச்சினைகள். இதற்குத்தான் டைனமிக் என்கோடிங் செய்யவேண்டும். இது பற்றி திரு.சுரதா அவர்கள் அவருடைய 'ஆயுதம் - தமிழ் செயலிகள் ஆயுத அணிவகுப்பு' வலைப்பதிவு மூலமும், அவருடைய இணையப்பக்கம் மூலமும் உதவுகிறார். http://www.jaffnalibrary.de/tools/

இன்று திரு.சுரதா செய்திருக்கும் செயலிகள்(tools) குறித்துப்பேசலாமா?

1. 'பொங்குதமிழ்' என்ற யூனிகோடுக்கு மாற்றக்கூடிய செயலியை செய்திருக்கிறார். இது வெப்உலகம், தினதந்தி, தினமணி, தினபூமி, முரசு அஞ்சல், வீரகேசரி, தினகரன், மயிலை, விகடன்-தாப், குமுதம்-தாம், பாமினி, திஸ்கி, ஆங்கில எழுத்துரு தமிழ், கோலோன் எழுத்துரு ஆகிய எழுத்துருக்களில் இருக்கும் செய்தியை யூனிகோடுக்கு மாற்றுகிறது.

இதன் பயன் என்ன? மேற்கூறிய இணையத்தளங்களுக்கு சென்று ஒவ்வொரு எழுத்துருவாக இறக்கமுடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் இவற்றை இங்கே வெட்டி ஒட்டலாம். 'வலைப்பதிவுகள்' வைத்திருப்பவர்கள் திஸ்கியில் எழுதியதை யூனிகோடுக்கு மாற்றி பயனப்படுத்த முடியும்.
வலைப்பதிவுகளில் உங்கள் கருத்துகளை யூனிகோடில் தெரிவிக்க முடியும்.

2. விண்டோஸ் 98 வைத்திருப்பவர்கள் யூனிகோடில் நேரடியாக தட்டச்ச முடியாது. அவர்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் யூனிகோடு தமிழில் கூகுள் தேடியந்திரத்தில் தேடிக்கண்டுபிடிக்கும் செயலி http://www.jaffnalibrary.com/tools/google.htm ஒன்றும் செய்திருக்கிறார்.

யூனிகோடுல் இருப்பதை திஸ்கி எழுத்துருவிற்கு மாற்றுவது, பாமினி எழுத்துருவில் இருந்து திஸ்கிக்கு மாறுவது என்று சில செயலிகளும் செய்திருக்கிறார். மற்றும்படி, மதுரைத்திட்டம், மன்றமையம், திஸ்கி தமிழுருவில் தேடுவது, பாமினி தமிழுருவில் தேடுவது என்றெல்லாம் http://www.jaffnalibrary.com/tools/google1.htm செய்திருக்கிறார். இவற்றை எல்லாம் அவருடைய 'ஆயுதம்' - வலைப்பதிவில் பெறமுடியும். கூடவே தமிழில் இயங்கும் சில மடலாடுகுழுக்கள், யூனிகோடு தமிழ் எழுத்துருக்கள் கிடைக்கும் இடம், தமிழில் இருக்கும் சில வலைப்பதிவுகள் என்று அமர்க்களமாய் இருக்கிறது.

அவருடைய http://www.jaffnalibrary.de/tools/ பக்கத்தில் வலது புறம் பாருங்கள். விண்டோஸ் 98 வைத்திருப்பவர்களின் கணினியில் யூனிகோடு தமிழ் தெளிவாக தெரியவில்லை என்றால் என்ன செய்யவேண்டும் என்று குறித்திருக்கிறார்.

இது தவிட http://www.suratha.com/ என்னும் ஒரு இணையப்பக்கத்தையும் சிறப்பாக நடாத்திவருகிறார்.

இந்த பதிவில் அவருடைய செயலிகள் பற்றி சிற்சில தகவல்களே கொடுத்திருக்கிறேன். தரப்பட்டுள்ள சுட்டிகளுக்கு (லிங்க்) சென்று பாருங்கள். ஏதேனும் ஐயமென்றால் அவருக்கு எழுதுங்கள். suratha(at)hotmail(dot)com

Thursday, September 11, 2003

பாரதி



இன்று பாரதியின் பிறந்த தினம். இன்றைக்கு நான் எதையாவது எழுதுவதை விட 'ராயர்காப்பிகிளப்பில்' பாரதியை எல்லாவிடத்தும் காண்கின்ற, எல்லா உறவுமுறையிலும் அழைக்கின்ற கவிஞர் ஹரிகிருஷ்ணன் எழுதியதை பகிர்ந்து கொள்கிறேன். நண்பர்களே, இவரின் எழுத்தை நீங்கள் முன்பு படித்திராவிட்டால் எழுதுங்கள். இணையத்தில் எங்கே கிடைக்கும் என்று சொல்லுகிறேன்.

குயில்


சித்திரை வந்துவிட்டால் எப்படித்தான் தொ¢யுமோ - குயில் கூவத் தொடங்கிவிடுகிறது. இன்று காலை கண்விழித்தது குயிலின் கூவலைக் கேட்டுதான். சென்னை போன்ற மாநரகங்களிலும் (தட்டுப்பிழை - typo - இல்லை) குயில்கள் இன்னமும் கூவிக்கொண்டிருப்பது இனிமையான அனுபவம்தான். தருமன் நரகத்தில் நுழைந்தானாம். நாலாபுறங்களிலிருந்தும் குரல்கள் கேட்டனவாம். "தருமபுத்திரரே! புண்ணிய சீலரே! தங்கள் வரவால் நறுமணம் நிறைந்த குளிர்ந்த காற்று வீசுகிறது. ஒரு முகூர்த்தம் இங்கேயே நில்லும்" என்று கர்ணன், பீமன், நகுல சகதேவர்கள், பாஞ்சாலி முதலியோர் கூவினராம். குயில் கூவும் போது தர்மபுத்திரர் நுழைந்த நரகம் போல் உணர்கிறேன்.

ஆனால் எல்லாப் போதிலும் குயில் இனிமையாக மட்டும்தான் கூவுகிறது என்று சொல்ல முடியாது. சில சமயங்களில் அதட்டும். சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்திற்குக் கேட்கும் பொ¢ய குரலில் என்னதான் அதட்டுமோ தொ¢யாது. சில சமயங்களில் எங்கேயோ நெருப்புப் பிடித்துக்கொண்டுவிட்டாற்போல் பரபரப்பான குரலில் குயிகுயிகுயிகூகூகூ என்று மூன்று மூன்று ஒலிகளாகக் கத்தி சிக்குவி குவிகிவிகீஈக் என்று வினோதமாக முடிக்கும். எப்படித்தான் எண்ணிக்கை தொ¢யுமோ, எந்தத் தாளக்கட்டு அதன் இதயத்தை இயக்குகிறதோ! பொ¢யவருக்கு நல்ல உல்லாசமான மனநிலை இருந்தால் குஊ குஊ குஊவு என்று தாளம் தப்பாமல் சா¢யான இடைவெளிவிட்டு நிதானமாகக் கொஞ்சுவார். திடீரென்று ஒவ்வொரு குஊ-வுக்கும் சுருதியை ஏற்றுவார். அப்படிச் சுருதி ஏற ஏற, கூவிக் கூவி கரைந்து போய்விடுவாரோ என்னவோ, குரலில் நிறைய பிசிறு தட்டும். கரைந்து போவதற்குக் காரணம் இருக்கிறது. அப்படிப் பிசிறு தட்டும்படிக் கூவுவது இன்னும் இணை கிடைக்காத குயிலின் காதல் அழைப்பாம் (mating call).

"கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் விழவேண்டும்" உன்னி கிரு?ணன் அனுபவித்துப் பாடிக்கொண்டிருந்தார். என் மனைவிக்குக் காலையில் சமையலறையில் ஒலிநாடா ஓடியே ஆகவேண்டும். இல்லாவிட்டால் சாம்பா¡¢லே இனிப்பிருக்கும் ஒற்ர்ரப்பிருக்காது என்று அந்தக் கால பி. சுசீலா பாடியதுபோல ஆகிவிடும். மஹாபாவி. இந்த இழைப்பு இழைத்து இப்படி உருக்குகிறானே என்று ரசித்துக்கொண்டே எழுந்தேன்.

பொறி தட்டியது. கூவும் குயிலோசை என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? கத்தும் குயிலோசை.... அதென்னது அது? மனத்திற்குள் மன்றமைய (forumhum.com/tlit) புதுக்கவிதை நண்பர்கள் வந்து சி¡¢த்தார்கள். அதுதான். எகன மொகனயாப் பாடினா இப்படித்தான் ஆபத்து வரும்.

கீசுகீசென்று ஆனைச்சாத்தம் கலந்து பேசிய பேச்சொலியை அனுபவித்த ஆண்டாளைப்போல் இவனேனோ கத்தும் குயிலோசை என்று போட்டிருக்கிறானே. "கூவும் குயிலோசை காதில்வந்து கொஞ்சும் சுகம் வேண்டும்" என்றோ இல்லை இதைப்போல வேறு மாதி¡¢யோ எழுதத் தொ¢யாதவனில்லையே பாரதி. இதில் என்னவோ வைத்திருக்கிறான் என்று தோன்றியது.

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்னே வரவேணும் ..... அங்கு
கத்தும் குயிலோசை - சற்றேவந்து
காதில் படவேணும் - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளம்
தென்றல் வரவேணும்.

நிலா வெளிச்சம். கத்தும் குயிலோசை. தென்னங் கீற்று தரும் தென்றற் காற்று அதற்கப்புறம்? பாட்டுக் கலந்திடவே அங்கேயரு பத்தினிப் பெண் வேணும். அப்படிப் போடு. பாரதியும் இணை வேண்டும் என்றுதான் வரம் கேட்கிறான். இணை வேண்டிக் கத்திக் கரைந்துருகும் குயில்தானே அந்தச் சூழலுக்குப் பொருந்தும்? பிசிறு தட்டும் குரல் குயிலின் குரலாகவே இருந்தாலும் கத்தல்தானே? கவிக்குயிலும், காட்டுக் குயிலும் ஒரே மாதி¡¢ மனநிலையில் இருக்க வேண்டும் போலிருக்கிறது!

என் ஆசி¡¢யர் அமரர் நாகநந்தி சொல்வது நினைவுக்கு வருகிறது. பாரதி மஹாரசிகன். அவனை இன்னும் நாம் சா¢யாகப் பு¡¢ந்து கொள்ளவில்லை. காணி நிலம் வேண்டும் என்று கேட்டால், ஏதோ கையகலம் நிலம் என்று நினைத்துக் கொள்கிறோம். இன்றைய நிலக்கணக்கிலே சொன்னால் கிட்டத்தட்ட 23 கிரவுன்ட் அந்த நிலத்திலே ஓர்மாளிகை கட்டித் தர வேண்டும் என்று கேட்டான். தூணில் அழகியதாய் நன்மாடங்கள் துய்ய நிறத்தனவாய். மாட மாளிகை வேண்டுமாம். சின்னதாய் ஒரு வீடு கேட்கவில்லை. (தொ¢யும். அதுதான் சின்னதாய் என்று வெகு ஜாக்கிரதையாகப் போட்டேன்.)

எல்லாவற்றையும் விட நாம் பு¡¢ந்து கொள்ளும் அழகைப் பாருங்கள். கேணி ஒன்று வேண்டும் என்று கேட்டானே (கேணியருகினிலே தென்னைமரம் கீற்றும் இளநீரும்.....) கேணி என்றால் என்ன பொருள்? கிணறு என்றா? இந்தக் காட்சியைச் சித்திரமாகத் தீட்டி பாரதி நினைவகம் ஒன்றில் கிணறு வரைந்து, சகடை வரைந்து, கயிறு வரைந்து வைத்திருக்கிறார்கள். "உலகு இன்பக் கேணி" என்றெழுதின பாரதி, "துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல் கேட்டிருப்பாய் காற்றே" என்று ·பிf¢த் தீவு கரும்புத் தோட்டத்திலே தமிழ்ப் பெண்கள் நிலையைப் பற்றி காற்றை விசா¡¢த்த பாரதி, கேணி என்றால் கிணறு என்ற பொருளிலா எழுதியிருப்பான்? திருவல்லிக்கேணி என்றால் என்ன பொருள்? திரு - அல்லிக் - கேணி. அல்லி நிறைந்த குளம் என்றல்லவா
பொருள்? அவனுடைய மாளிகைக்குப் பக்கத்திலே ஒரு குளம் வேண்டும் என்றல்லவா கேட்டிருக்கிறான்? பொ¢தினும் பொ¢து கேள் என்று புதிய ஆத்திசூடி பாடியவன் பின்னே எப்படிக் கேட்பானாம்?

அது போகட்டும். வேறெங்கோ வந்துவிட்டோம். குயில் என்று எழுதிய உடனேயே காலை இளம்பா¢தி வீசும் கதிர்களிலே நீலக்கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல் என்று உங்கள் இரண்டு வயதுக் குழந்தையின் கண்களில் பொய்யழுகையின் போது கடகடவெனப் பொங்கும் புனல் போலப் பொங்கி நடக்கும் வா¢கள் நினைவுக்கு வந்திருக்குமே? (வேறு உவமையே
கிடைக்கவில்லையா என்று கேட்பவர்கள் தம்மக்கள் பொய்யழுகை கேளாதார். வாழைக்கோடி வழிப்போக்கர் காலலம்பி என்ற தாலாட்டையும் கேளாதார்.)

குயில் பாட்டைப் படிக்கும்போதெல்லாம் எனக்கு கீட்ஸின் Ode to a Nightingale நினைவில் வந்து போகும். பாரதிக்கு ஷெல்லிதாசன் என்று ஒரு புனைப்பெயரும் உண்டு. ஷெல்லியையும், கீட்¨.யும் அனுபவித்துப் படித்தவன் பாரதி. குயில் பாட்டுக்கும் நைட்டிங்கேல் பாட்டுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. குயிலின் மயக்கம் கலந்த பாட்டைக் கேட்டுக் கொண்டேதான் பாட்டை ஆரம்பிக்கிறான் கீட்ஸ். முடிக்கும் போது, பாரதியைப் போலவே கனவுகலைந்து திடுக்கிட்டு எழுகிறான். Forlorn! that very word sounds like a bell to toll me back to earth. Forlorn என்று சொல்லும் போதே டணாங் என்று மணிபோல் ஒலித்து பூமிக்கழைக்கிறதாம். அன்றுநான் கேட்ட தமரர்தாம் கேட்பாரோ என்று பாரதி சொன்னால், இன்று நான்கேட்பது
என்றென்றோ கேட்கப்பட்டதன்றோ என்று கீட்ஸ் சொல்கிறான்.

The voice I hear this passing night was heard
In ancient days by emperor and clown:

குயில். கவிஞர்களை அந்தப் பாடு படுத்தியிருக்கிறது. நீ பறவையா அல்லது புதிதாக குரலால் மட்டுமே உணரத்தக்கதாய் இப்படி ஏதேனும் ஓர் இனம் தோன்றியிருக்கிறதா என்கிறான் ஷெல்லி. (Skylark) வேர்ட்ஸ்வர்த் இரண்டு மலைகளுக்கிடையே உள்ள புல் வெளியில் அமர்ந்திருக்கிறான். ஒரு மலையில் குயில் கூவுகிறது. குரல் இவனைத் தாண்டிப் போகிறது. எதிர் மலையில் பட்டு எதிரொலிக்கிறது. குரல் மறுபடியும் இவனைக் கடந்து போகிறது. குயில் மறுபடியும் கூவுகிறது. உன்னையரு பறவையென்பேனா உலவுகின்ற குரலென்பேனா (Shall I call thee a bird or but a wandering voice) என்று அதிசயிக்கிறான்.

குயிலால் ஈர்க்கப்படாதார் யார்? சிட்டிபாபுவின் குயில் மாயாஜாலத்தை வீணை வழிக்கேட்டுப் பரவசப்படாதார் யார்? எ¡¢க்கின்ற இந்தக் காலைப் போதுக்கும் இனிமை தரும் இந்த அதிசயக் குரல் கேட்டு மயங்காதார் யார்?

எதிர்ச்சா¡¢ மரக்கிளையில் இரண்டு குயில்களின் கூவல் கேட்டது. நம்ப ஆளுக்கு அவங்க ஆளு கிடைத்தாகிவிட்டது.
பக்கத்துக் காக்கை கூடுகளில் இன்னும் சில நாட்களில் மேலும் சில முட்டைகள் சேரும்.


ஹரி கிருஷ்ணன்

Tuesday, September 09, 2003

விண்டோஸ் 98 கணினியில் 'தமிழா' உலாவி



'தமிழா' உலாவியை இறக்கிய பிறகு அதில் பிரச்சினை இருக்கிறதே! தமிழ் எழுத்துகள் சரியாக தெரியமாட்டேன் என்கிறதே என்று சொல்லும் நண்பர்களே, நீங்கள் Win 98 வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நானுந்தான். 'தமிழா'வை இறக்கிவிட்டு, என்னடா இப்படித்தெரிகிறதே என்று யோசித்துக்கொண்டிருட்ந்தேன். அந்த நேரத்தில் 'அகத்தியர் யாகூ குழுவில்' ஆபத்பாந்தவராக ஒரு நண்பர் எழுதிய மடலை இங்கு வைக்கிறேன்.

****************************

நண்பர்களுக்கு,

தமிழா! இணையச் செயலித் தொகுப்பை விண்டோஸ்(98ல் பயன்படுத்த நான் ஆலோசிக்கும் வழி, விண்டோஸின் Display properties (desktopல் right mouse click செய்து properties தட்டினால் கிடைக்குமே) க்குப் போய், Appearance tabன் கீழ் உள்ள அனைத்து எழுத்துருக்களையும் TSCu_Paranarக்கு (TSCu_Paranar உட்பட சில எழுத்துருக்கள் தமிழா! பொதியுடன் வருகின்றன) மாற்றிவிடுங்கள்.. குறைந்தது messagebox, menu இரண்டையுமாவது மாற்றியே ஆகவேண்டும். பிறகு அம்சமாய் உங்கள் இணையகாரியங்கள் தமிழாவுடன் நிறைவேறும். மடல் செயலியில் கூட, தலைப்புகள் அனுப்புவரது பெயர்கள் தமிழில் படிக்க சாத்தியமாகிறது..

(இதைநான் செய்தபோது, முரசு, கலப்பை போன்ற செயலிகள் ஏதும் ஓடிக்கொண்டிருக்கவில்லை. மாற்றம் செய்தபின் இரண்டையும் வைத்து சோதித்தபோது கூட எந்தப் பிரச்சினையும் இல்லை. தாராளமாக தமிழில் படிக்க முடிகிறது. நான் இங்கே தமிழ் என்று குறிப்பிடுவது TSCII மட்டுமே. இன்னும் விண்டோஸ் 98ல் யுனிகோடு சம்பந்தப்பட்டதைப் பார்ப்பதில் தடங்கல் இருக்கவே செய்கிறது. இருந்தாலும் செயலியை ஆங்கிலத்தையும் TSCII ஐயும் பயன்படுத்த எந்தத் தடையுமில்லை!)

பயன்பெறுக.

அன்புடன்
பாண்டியன்


Sunday, September 07, 2003

கணினியில் தமிழ் - புது விஷயங்கள்



இந்த வாரம் கொஞ்சம் கணினி பற்றியும் அதில் தமிழ் பயன்படுத்துவது பற்றியும் பேச ஆசை. முதலில் மரத்தடி நண்பர் கே.வி.ராஜா 'தமிழா' உலாவிக்கு கொடுத்திருக்கும் அறிமுகத்தை படியுங்க. இன்னும் அதிக விபரங்களும் விஷயங்களும் நாளைக்கு அதற்கு அடுத்த நாட்களிலும் பகிர்ந்து கொள்கிறேன்.

***************************************

'தமிழா' அறிமுகம்


டன் டன் டன் டக்கா டன் டன் டன்

நாட்டுக்கு சேதி சொல்ல நாகரீக கோமாளி வந்தேனைய்யா.....

டன் டன் டன் டக்கா டன் டன் டன்

மக்கள் 1: வாய்யா கோமாளி, என்ன காலங்காத்தால தாளம் தப்பட்டையுமா கெளம்பிட்ட, எதுனா சேதி இருக்கா?

கோமாளி: டகர டகர டன் டகர டகர டன்.... சேதி இல்லாம கோமாளி வருவானுங்களா ஐயாமாரே!!!! சேதி இருக்கு நல்ல சேதிஇருக்கு, இந்த உலகத்துக்கே ஒரு நல்ல சேதி இருக்கு. நம்ம தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல சேதி இருக்கு.

மக்கள் 2: ஆகா, அது என்னப்பா தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல சேதி?

கோமாளி: தமிழ்ல ஒரு நல்ல உலாவி (Browser) இல்லையேன்னு கவலைப்பட்ட பெரியவங்களுக்கும், ஆங்கிலம் தெரியாதே நான் எப்படி இணையத்தைப் பத்தி தெரிஞ்சுக்க முடியும்ன்னுவருத்தப்பட்ட தமிழ் மக்களுக்கும் நன்மை செய்ய.... பல நன்மை செய்ய.... இலவசமா ஒரு உலாவி வருது... ஐயா இலவசமா ஒரு உலாவி வருது.

மக்கள் 1: நல்ல சேதியா தான் இருக்கு. ஆமா அது என்ன உலாவிப்பா, அதோட பேரு என்ன?

கோமாளி: தமிழுக்கு பெருமைச் சேர்க்க, நம்ம தமிழனுக்குப் பெருமைச் சேர்க்க"தமிழா"ன்னு பேரோட வருதைய்யா....

மக்கள் 3: ஏனப்பா, இது முன்னாடி வந்த உலாவி தானே?

கோமாளி: வந்த உலாவி தானைய்யா, இது வந்த உலாவி தானைய்யா. ஆனா....... பல முன்னேற்றங்களோட வருகுதைய்யா இந்த புது உலாவி.

மக்கள் 4: கோமாளி, அது எப்படிப்பா எலவசமா கெடைக்கும்?

கோமாளி: நெட்ஸ்கேப் ஏஓஎல்ன்னு ஒரு பெரிய நிறுவனம் "மோஸில்லா" உலாவியை இலவசமா கொடுக்கிறாங்க. அதை தமிழ்படுத்தி தானைய்யா "தமிழா" வந்துச்சு. உங்களுக்குத் தெரியுமா??? "மோஸில்லா"வை தான் பிசி வோர்ல்டுவலைத்தளம் இரண்டாயிரத்து மூன்றாம் வருசத்து சிறந்த உலாவியா சொல்லி இருக்காங்க. அதோட தமிழ்பதிப்பு தான் "தமிழா".

மக்கள் 2: இதை எதாவது ஒரு தமிழாள் நிறுவனம் தமிழாக்கம் செய்துச்சா கோமாளி?

கோமாளி: இல்லிங்கண்ணே, இது வேற மாதிரி. உலகத்துல ஒவ்வொரு மூலைல இருக்கிற பத்து பதினைந்து கணினி பொறியாளர்கள் ஒண்ணா சேர்ந்து இந்த உலாவி செய்துருக்காங்க.

மக்கள் 5: அட அப்போ இது உலகத் தமிழ் மக்களால உருவாக்கப்பட்ட தமிழ் உலாவின்னு சொல்லு!!!!!!!

கோமாளி: ஆமாங்கைய்யா ஆமாங்கைய்யா..... டனா டண்டனக்கா டன் டனா டண்டனக்கா டன்....

மக்கள் 6: கோமாளி, எம்புள்ள அமேரிக்காவுல இருக்கான், எம்பொண்ணு மலேசியாவுல கட்டிக்குடுத்துருக்கு. இவங்களுக்கெல்லாம் நா தமிழ்ல கடுதாசி எழுத முடியுமா? என்னமோ இணையம் வழியா அனுப்பினா அடுத்த நொடியே அங்கே போயி கடுதாசி சேர்ந்துடுமாம்ல்ல. தமிழ்ல கடுதாசி அனுப்ப முடிஞ்சா நா நெதமும் ஒரு கடுதாசி எம்புள்ளைங்களுக்கு எழுதுவேனே....

கோமாளி: இருக்குதைய்யா இருக்கு. முழுக்க முழுக்க தமிழ்லேயே இருக்கு. எல்லோருக்கும் புரியிறமாதிரி தமிழிலேயே இருக்கு. நீங்களும் உங்க புள்ளைங்களுக்கு தமிழிலேயே எழுதலாம், உங்களுக்கு வர்ர கடுதாசிங்களையும் படிக்கலாம். எல்லா வசதியும் இருக்கு.

மக்கள் 4: ஏம்பா, இந்த மாதிரி கடுதாசிங்களோட ஏதோ கெட்ட கெட்ட சமாச்சாரங்களையும் நமக்கு முன்ன பின்ன தெரியாத ஆளுங்கல்லாம் அனுப்புவாங்களாமே, இத தடுக்க "தமிழா"விலே எதுனா வழி இருக்கா??

கோமாளி: இருக்கு சாமி இருக்கு. நல்லதுகெட்டது நாலும் தெரிஞ்சு நல்லதை அனுமதிச்சு கெட்டதைத் தடுக்கவும் இதுல வழி இருக்கு.

மக்கள் 7: கோமாளி, எங்க பக்கத்தூட்டு கோவாலு மவன் ஏதோ வலைப்பக்கம் செய்துக்கிட்டு வந்து எங்கக்கிட்டல்லாம் காட்டுறான். நமக்கும்தமிழ்ல அது மாதிரி செய்ற வசதி இருந்தா நல்லா இருக்குமே.

கோமாளி: நல்ல விஷயம் கேட்டிங்கைய்யா ரொம்ப நல்ல விஷயம் கேட்டிங்க. நம்ம "தமிழா"விலே தமிழ்ல வலைப்பக்கம் செய்யிற வசதியெல்லாம் செய்துக் கொடுத்திருக்காங்க, நீங்களே எளிமையா உங்களுக்கு வலைப்பக்கங்கள் எல்லாம் உண்டாக்கிக்கலாம்.

மக்கள் 8: எல்லாம் சரி கோமாளி. நா இது வர இணையத்துப் பக்கம் தலைய கூட வச்சுப் படுக்காத ஆளு. இணையத்துல எதுனா தமிழ் வலைப்பக்கமெல்லாம் இருக்குமான்னு எப்படி கண்டுபிடிக்க?

கோமாளி: உங்களுக்கும் சரி, தமிழ் வலைப்பக்கங்கள் இருக்கிற இடம் தெரிஞ்சவங்களுக்கும் சரி, எல்லோடும் எளிமையா தமிழ் வலைப்பக்கங்கள்ல உலாவ வசதியா நல்ல தமிழ் வலைப்பக்கங்களை "தமிழா" உங்களுக்காக அடையாளக்குறிகளோட தனக்குள்ள வச்சிருக்கு. எங்கே போகணும்ன்னு பார்த்து ஒரு சொடுக்குச் சொடுக்கினா போதும், நீங்க போக வேண்டிய இடத்துக்குக் கொண்டுபோய் சேர்த்துடும்.

மக்கள் 1,2,3,4,5,6,7,8: கோமாளி, உண்மையிலேயே ஒரு பெரிய நல்ல சேதி தான் சொல்லி இருக்க. கேக்கவே சந்தோஷமா இருக்கு. இந்த உலாவி எங்கே கிடைக்கும்? சீக்கிரம் சொல்லு... வாயால கேட்டு சந்தோஷப்பட்ட உலாவியை, பயன்படுத்தி சந்தோஷமடையிறோம்.

கோமாளி: இதை நீங்க கேக்காமலேயே சொல்லிடுவேனே!!! நான் சொல்ற இடத்துக்குப் போங்க அங்கேதான் "தமிழா" கிடைக்குது.

சுட்டி: http://thamizha.com/downloads/mozilla-win32-1.4-taMY-installer.exe

[இங்கேயும் உள்ளது: http://ftp.mozilla.org/pub/mozilla/l10n/lang/moz1.4/mozilla-win32-1.4-taMY-installer.exe]

இணையத்திலே இப்போ சொல்லி இருக்கிற இடத்துக்குப் போனா "தமிழா" கிடைக்கும், எல்லோரும் இலவசமா பயன்பெறுங்க. அப்படியே இந்தஉலாவி கொண்டு வர முயற்சி செய்த எல்லா அன்பு நெஞ்சங்களுக்கும் உங்களோட நன்றிகளையும் சொல்லிக்கோங்க, அவங்க இன்னும் நெறைய இப்படி புதுசு புதுசா செய்ய அவங்களை வாழ்த்துங்க. உங்களோட சேர்ந்து இந்த கோமாளியும் வாழ்த்துறேன். டன் டன் டன் டகர டன் டன் டன் டகர டன் டன் டன்!!!!!!!!!!!!!!

==========================
அறிவிப்பு ஆக்கம்: கே.வி.ராஜா
==========================

கே.வி ராஜாவுக்கு நன்றி !!!
-முகுந்த்
-தமிழா! உருவாக்க குழு சார்பாக.



Monday, September 01, 2003

மரத்தடி விழாவிற்கு வாரீர்!

கடந்த ஒரு வாரமாக இங்கே கவனம் செலுத்த முடியவில்லை. நானும் என்னுடைய நண்பர்களும் பங்கு பெறும் தமிழ்-இணையக்குழுவான மரத்தடி தொடங்கி வரும் புரட்டாதி நான்காம் தேதியோடு ஒரு வருடம் ஆகப்போகிறது. திடீரென்று நண்பர்களின் உற்சாகமான பங்களிப்புடன் கடந்த சனிக்கிழமையிலிருந்து ஊரில் கோயில் திருவிழா கொண்டாடுவது போல செய்யலாமே என்று கொண்டாட ஆரம்பித்துவிட்டோம். வெகுவிமர்சையாக, நாங்களே எதிர்பார்க்காத அளவிற்கு திருவிழா களைகட்டி இருக்கிறது. நான்காம் தேதிக்கு இன்னமும் மூன்றே நாட்கள் இருக்கின்றன. இந்த மூன்று நாட்களும் மரத்தடி மக்கள் தங்கள் படைப்புகளை இட்டு திருவிழா கொண்டாடப்போகிறோம். நான்காம் தேதியை வித்தியாசமாக, அறிந்தவர்கள் தெரிந்தவர்களிடம் மரத்தடிக்காக பிரத்தியேகமாக படைப்புகளை தரச்சொல்லி மடலிட்டு விழாவை நிறைவு செய்ய இருக்கிறோம்.

இது நாள்வரை சுற்றிவர கிடுகு கட்டி, மறைப்பு வைத்து, பிரத்தியேகமாக தண்ணியிட்டு வளர்த்த மரத்தடியை இனி அனைவரின் பார்வைக்கும் வைத்திருக்கிறோம். நீங்களும் வந்து படித்து பங்கெடுக்க விரும்பினால், தயங்காது வாருங்கள். இந்தாருங்கள் முகவரி - http://groups.yahoo.com/group/maraththadi


இல்லை எனக்கு படைப்புகளை மட்டுமே படிக்கவிருப்பம். அதற்கான மறுமொழிகளையும் விவாதங்களையும் படிக்க/பங்கெடுக்க விருப்பமில்லை/நேரமில்லை என்று சொல்லுகிறீர்களா? உங்களுக்காகவே http://www.maraththadi.com என்னும் இடத்தில் மரத்தடி நண்பர்களின் படைப்பை வலையேற்றி இருக்கிறோம். ஆண்டுவிழாக்கொண்டாட்டங்கள் எல்லாம் ஆண்டுவிழா கொண்டாட்டம் என்னும் பகுதியில் இடப்பட்டிருக்கின்றன.

படித்து மகிழுங்கள் நண்பர்களே. உங்கள் மேலான கருத்துகளுக்கு காத்திருக்கிறோம்.